Monday, 10 June 2013

வேர்ப்பலா

 

(ஜெயரமணி)

வேர்ப்பலா

(ஜெயரமணி)

தன் படுக்கையில் படுத்திருந்த மகேஸ்வரன், தன் படுக்கையின் வலது பக்கத்தில் இருந்த மணியின் ஓசையைக் கேட்டு எழுந்தார். தன்னுடைய தூக்கம் கலைந்ததில் அவருக்குச் சிறிது கோபமும் உண்டாயிற்று. ஆனால், யார் வந்து காலை நேரத்தில் வாசலில் மணியை அடித்து விட்டு காத்திருப்பது எனப் பார்க்க வாசற் கதவைத் திறந்தார். அவருக்குப் பார்வையின் திறன் குறைந்திருப்பதால், தன்னுடைய படுக்கை அறையை விட்டு வந்து கதவைத் திறக்க ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஆகியது. வாசலில் ஒரு சிறு பையன் கைகளில் ஒரு பிளாஸ்டிக் பையில் கொஞ்சம் பூக்கள், வாழைப்பழம் வைத்துக் கொண்டு நின்று இருந்தான். வழக்கம்போல் வீட்டிற்கு பூ, பழம் என வேண்டுவதைச் கொண்டு வந்து கொடுக்கும் பையந்தான். “ஏனடா, இன்று காலையிலேயே வந்து என்னை எழுப்புகிறாய்? கொஞ்சம் நேரம் கழித்துத்தான் வந்தால் என்ன? “ என தன்னுடைய கோபத்தை அவனிடம் கொஞ்சம் காட்டினார். பையன் ஒன்றும் மகேஸ்வரனின் கோபத்தைக் கண்டு பயப்படவில்லை. “தாத்தா, பாட்டிதான் என்னிடம் நேற்றே சொன்னார்கள் இன்று காலையிலேயே சீக்கிரம் வந்து பூஜைக்கு வேண்டிவற்றை கொண்டு வந்து கொடுக்கச் சொன்னார்கள். இன்று உங்கள் வீட்டில் ஏதோ விஷேசமான நாளாம், பூஜை செய்ய வேண்டுமென்றார்கள். அதனால்தான் நான் காலையிலேயே வந்து உங்களைச் தொந்திரவு செய்து விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்” என பவ்யமான குரலில் சொல்லிச் சென்று விட்டான். அவன் சென்றபிந்தான், மகேஸ்வரனின் நினைவுக்கு வந்தது அன்று என்ன விஷேசம் என. அவருடைய கோபமும் நொடியில் மறைந்து போனது.

கைகளில் பையன் கொடுத்த பூ, பழங்களைக் கொண்டு போய் சுவாமி அறையில் வைத்து விட்டு, தன்னுடைய மனைவி ஜானு எங்கே எனப் பார்க்கலானார். சமையல் கட்டில், அவள் இருப்பதற்கு அடையாளமாக, ஒரு கேசட்டில் அம்மனின் ஸ்லோகங்கள் ஓடிக் கொண்டிருந்தது. அதுவும் கொஞ்சமல்ல. அதிகமான சப்தத்தில்தான் பாடிக் கொண்டிருந்தது. தான் வந்திருப்பதை ஜானுவுக்கு உணர்த்த, மகேஸ்வரன், பாடிக் கொண்டிருந்த கேசட்டை நிறுத்தினார். அப்போதும் ஜானு திரும்பிப் பார்க்க வில்லை. பாவம் அவளால் முடியாது. அவளுக்குக் காது கேட்கும் திறன் கொஞ்சம் மந்தமாகி விட்டது. அதுவும் அவளின் வலது காது பக்கம் நெருங்கிச் சென்று பேசினால் மட்டுமே அவளால் கேட்க முடியும். குறிப்பாக அவளின் குறையைப் பற்றி நன்றாகத் தெரிந்த ஒரு சிலரால் மட்டுமே அவளுடன் சம்பாஷிக்க முடியும். அவளால் கேட்க முடியும்படியே, அவள் தன்னுடைய கேசட்டை தனது வலது காது பக்கமே வைத்துக் கொள்வாள். அன்றும் ஆவள் அப்படித்தான் வைத்து தினப்படி தான் சொல்லும் ஸ்லொகங்களையெல்லாம் பாட விட்டாள். அவளும் தன் வாய்விட்டு, தினப்படி சொல்லும் ஸ்வாமி ஸ்லோகங்களைச் சொல்லிக் கொண்டு இருந்தாள். அவளுக்குக் காதுதான், குறைபட்டதே தவிர, மற்ற திறமைகளில் ஒன்றும் குறைவில்லை. காதுக்கு இதமான சுநாதமான சாரீரம். நல்ல சீட்சையின் காரணமாக, இராகங்களின் இனிமை மாறாது பாடுவது அவளுக்கே இருக்கும் இயற்கையான வரம். மனைவியின் இனிமையான குரலைக் கேட்டுக் கொண்டே அவளின் அருகில் வந்த மகேஸ்வரன் அவளின் கவனம் கலையாதவாறு அங்கிருந்த ஒரு சேரில் அமர்ந்தார். அவளின் கவனம் கலையாதபடி, கேசட்டை நிறுத்தினார். தன்னுடைய சுபாவப்படியே, அவளின் மனம் தன்பாட்டில் ஸ்லோகத்தை சொல்லிக் கொண்டே, கைகள் சுபாவமாக வேலையில் ஈடு பட்டு, பரபரவென்று சமையலறையில் வேலைகளை முடித்துக் கொண்ட ஜானு அலமாரியில் இருந்த கடிகாரத்தைப் பார்த்தாள். கணவர் எழுந்திருக்கும் நேரம் வந்ததை உணர்ந்து, அவரை எழுப்ப சமையலறையை விட்டு, வெளியே திரும்பினாள். அப்போதுதான், தன் அருகில், மௌனமாக சேரில் இருந்த மகேஸ்வரனைப் பார்த்தாள். அவரைப் பார்த்தவுடனேயே, அவளுடைய முகத்தில் ஒரு சிரிப்பும் சந்தோஷமும் கூடியது. கணவரைப் பார்த்து, “நீங்கள் எப்போது வந்தீர்கள். பல் தேய்த்து விட்டீர்களா?” எனக் கேட்டபடியே அவருக்கும் தனக்கும் சூடாக் காப்பி தயாரிக்கலானாள். எப்பவுமே மகேஸ்வரன் காப்பியை மிகமிகச் சூடாகத்தான் குடிப்பார். அதனால், ஜானு அவர் எழுந்த பிந்தான், பாலைச் சூடு பன்னி, காப்பி கலப்பாள். மகேஸ்வரன் ஜானு அவசரம் வேண்டாம். நான் இன்னும் இன்று பல் துலக்கவே யில்லை” என்றார். அப்போதுதான் வழக்கம்போல் தான் போய்த்தான் கணவனை தினமும் எழுப்புவாள். அன்று ஏன் அவராகவே எழுந்து வந்தார் எனப் புரியாமல் அவரைப் பார்த்தாள். அவரும் சிரித்துக் கொண்டே, வாயால் எந்த பதிலும் சொல்லாமல், கண்களால் அங்கே தான் கொண்டு வந்து வைத்த பூ, பழங்கள் அடங்கிய பிளாஸ்டிக் பையைக் காண்பித்தார். பையைப் பார்த்தவுடனே புரிந்து கொண்டாள், அவரின் தூக்கத்தை யார் கலைத்தது என. “பையன் வந்தானா? பெல்லை அடித்துத்தான் உங்களை எழுப்பினானா? பெல் சத்த்த்தை நான் கவனிக்க வில்லையே? எனச் சொல்லவளிடம் “எப்படி உனக்குக் கேட்கும். நீதான் இந்த ஊரில் உள்ளவர்களுக்கெல்லாம் கேட்கும்படி உன் அம்மனின் ஸ்லோக கேசட்டை ஓட விட்டிருக்கிறாயே. சப்தமே இல்லையென்றாலும் உன்னால் வாசல் மணியின் ஓசையைக் கேட்க முடியாது. அப்படியிருக்க இத்தனை சப்தத்தில் அது எப்படி கேட்கும். மணியின் ஓசையைக் கேட்டு நாந்தான் எழுந்து கதவைத் திறந்தேன்” எனச் சொல்லிக் கொண்டே ஜானுவின் அருகில் சென்று “ஆமாம் இன்று என்ன விஷேசம். சீக்கிரமாகவே பூஜைக்கு எல்லாம் வேண்டுமென்று பையனிடம் நேற்றேயேச் சொல்லிவிட்டாய்? என தனக்கு ஒன்றும் தெரியாதது போல அவளிடம் கேட்டார். அவருடைய குரலில் இருந்த குறும்புத்தனத்தை, அவரின் கண்களைப் பார்த்து எல்லாம் புரிந்து கொண்ட ஜானு தானும் அவருக்கு சரியாக பதில் சொல்ல வேண்டுமென்று நினைத்தாள். அதனால் “என்னமோ தெரியவில்லை. என் கனவில் வந்து ஒருவர் சொன்னார் “ஐம்பத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் ஒரு அறியாத பெண்ணை அவளின் தகப்பனாரிடமே கேட்டு தன்னுடன் கூட்டிக் கொண்டு வந்த நாள்தான் என்று” சிரித்தபடியேச் சொல்லி விட்டுச்சென்றாள். தன்னைத் தாண்டிச் செல்ல வந்தவளைத் தன் கைகளால் தடுத்து நிறுத்தியவர் அவளின் வலது காது பக்கம் திரும்பி நின்று கொண்டு, ”ஜானு, உன்னுடைய அப்பாதான் எங்களிடம் வந்து, “மகேஸ்வரா நீ தான் பெரிய மனசு பண்ணி, என்னுடைய பெண்ணை ஏற்றுக் கொள். தாயில்லாப் பெண், அதுமட்டுமல்லாது சிறு வயதில் கண்ட விஷ ஜுரத்தால், காதின் கேட்கும் திறமையும் குறைபட்ட பெண். வேறு புதியவர்கள் வீட்டிற்கு வாக்கப்பட்டுப் போனால், அவளின் குறையால் அவளைத் துன்புறுத்தினால் என்னால் தாங்க முடியாது. உனக்கும் என் அக்காவிற்கும்தான் அவளின் குறை என்ன என்று சிறு வயதிலிருந்தே தெரிந்திருப்பதால், நீங்கள் அவளைக் கண் கலங்காது வைத்துக் கொள்வீர்களென்று எனக்கும் தெரியும். எனக்கு வயதாகியதால், அவளுக்குச் சீக்கிரமே கலியாணம் செய்து விடுகிறேன்” என மிகவும் கெஞ்சினார். என்னுடைய அம்மாவும் தன்னுடைய சகோதரனுக்கு வயதான ஒரு பெண் இருப்பதால், அவளுடைய கலியாணத்தை தாங்களும் சேர்ந்து முடிக்க வேண்டுமென்று இருந்தார்கள். நானும் என்னுடைய மாமா பெண்ணை நம்மை விட்டால் வேறு யார் வந்து கலியாணம் செய்து கொள்வார்களென்றுதான், சம்மதித்தேன்” எனப் பரிகாசமாகச் சொன்னார். அதைக் கேட்ட ஜானகியும் “ஆமாம்மாம், உங்களுடைய தாராளமான மனது எங்களுக்குச் தெரியாதா? உங்கள் தகப்பனாரின் முன் கோபத்தால், உங்களுடைய குடும்பத்தினரிடம் நெருங்க யாருக்கும் தைரியமில்லை. அதனால், உங்களுக்கும் வயதாகியதே தவிர, உங்களுக்குப் பெண் கொடுக்க யாரும் தயாரில்லை. உங்களின் அப்பா காலம் ஆன பின், என்னுடைய அத்தைதான் தன் சகோதரனிடம் வந்து “நீ யே உன் பெண்ணை என் பிள்ளைக்குக் கொடுக்க வில்லையென்றால், தனியான தன்னால் உங்களுக்கு ஒரு பெண்ணைப் பார்த்துக் கலியாணம் செய்ய முடியுமா? என்றெல்லாம் பலப்பல பேசி எனப்பாவை சம்மதிக்கச் செய்தது எனக்குச் தெரியாதென்றா நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.” ஜானுவின் கேலிப் பேச்சைக் கேட்ட மகேஸ்வரனும் விடாது, “அப்படி என்ன நான் செல்லாக் காசாகவா இருந்தேன். நானும் டிகிரி படிப்புப் படித்து விட்டு, நல்ல பொறுப்பான வேலையில்தான் இருந்தேன். என்னுடைய அந்தஸ்த்துக்கும், நல்ல குணத்துக்கும் எனக்கும் எத்தனையோ இடங்களிலிருந்து பணக்காரப் பெண்கள், ஏன் படித்தவர்கள் கூட என்னைக் கலியாணம் செய்து கொள்ளத் தயாராகத்தானிருந்தார்கள். எங்கே நான் அவர்களில் ஒருவரைப் பார்த்து பிடித்துப் போய் திருமணம் செய்ய முடிவு செய்து விடுவேனென்ற பயத்தில் நீ தானே என்னிடம் வந்து என்னை விட்டு நீங்கள் வேறு யாரையும் மணக்கச் சம்மதித்தால், நான் அந்த நிமிஷமே விஷம் குடித்து உயிரை விட்டுவிடுவேன்: என மிகவும் கெஞ்சினாய். மறந்துவிட்டாயா? எனச் சீண்டினார். பதிலுக்கு ஜானகியும் “ஏன் நீங்கள் என்னிடம் தனியாக வந்து சொன்னதை மறந்து விட்டீர்களா? ஜானு, அம்மா பணத்திற்கு ஆசைபட்டு, ஒரு பணக்காரப்பெண்ணை நிச்சயம் செய்து விட்டால், என்னுடைய வாழ்க்கை ஒரு பாலைவனமாகி விடும். என்னதான் டிகிரி வாங்கியிருந்தாலும், வரும் பெண்ணும் எனக்குச் சரியாக படித்து இருந்தால், என்னை மதிப்பாளா, மாட்டாளே. என்னிடம் பணம் இல்லையென்பதால், அவர்கள் வீட்டிலும் எனக்குச் சரியான மரியாதை கிடைக்காதே. அதனால் நீ தான் எப்படியாவது உன் அப்பாவிடம் சொல்லி, நம்முடைய கலியாணத்தை சீக்கிரம் முடிக்க வேண்டும்”என என்னிடம் வந்து அழாத குறையாக நின்றது எனக்கு இன்னும் கண்” முன்னாலே யிருக்கிறது. ஆனால் அதற்கெல்லாம் நான் மசியவில்லை. ஏன் தெரியுமா, என்னை உண்மையிலேயே விரும்பாது, தன்னுடைய சவுகரியங்களுக்காக என்னை நீங்கள் மணக்க முடிவு செய்தது எனக்குப் படிக்க வில்லை.” அதற்கு மகேஸ்வரன் ஜானுவிடம் நெருங்கி நின்று, அவளின் காதில் மெதுவாக “ஏன் ஜானு, உனக்குத் தெரியாதா நான் உன் மீது சின்ன வயதிலிருந்தே எத்தனைப் பித்தாக இருந்தேனென்று. எனக்கு என் தாயாரிடமோ, என் மாமாவான உன் அப்பாவிடமோ நேரில் சொல்லத் திராணியற்றுத்தானே உன் மூலம் அவர்களுக்கு என் மனசை தெரியப் படுத்தினேன்.” என்றார். அதற்கும் ஜானு விட்டுக் கொடுக்காமல், “எனக்குத் தெரியாதா உங்களின் தந்திரம். எங்கே நீங்களாகச் சொன்னால், உங்களின் ஆசையை நிராகரித்து விடுவார்களோ எனப்பயந்துதானே என்னைச் தூண்டினீர்கள். மேலும் வெட்கம் கெட்டு நான் போய் என் அப்பாவிடம் எனக்கு உங்களைத்தான் பிடித்துப் போய் விட்டது. உங்களைவிட்டு வேறு யாரையும் நான் கலியாணம் செய்து கொள்ள மாட்டேன் என பிடிவாதமாகச் சொல்லித்தானே உங்களின் அம்மாவின் சம்மதத்துடன் நம் கலியாணம் நடந்தது. உங்களுக்கு உதவப் போய் மற்றவர்களுக்கெல்லாம் நான் ஒரு அதிகப் பிரசங்கியாகவும், வெட்கம் கெட்டவளாகவும் ஆனது உங்களுக்குத் தெரியாதா?” என மிகவும் வருத்தமடைந்ததுபோல் சொன்னாள். வருடங்கள் எத்தனை யானாலும், தங்களுடைய கலியாணம் கூடி வர, தான் ஜானுவின் மூலம் எத்தனை நாடகங்கள் ஆடினோம் என்பதும் மகேஸ்வரனின் நினைவில் நடனமாடியது. அதனால், ஜானுவின் கைகளை மிகவும் பரிவுடன் பிடித்துக் கொண்டு “ஜானு, உண்மையாகச் சொல் நீ இப்போது என்னுடன் சந்தோஷமாகத்தானே இருக்கிறாய். அன்று உன்னை எல்லாரும் கேலி செய்தாலும், அதை நீ இன்னுமா நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறாய்? நான் உன்மேல் அன்று கொண்ட ஆசையும், பாசமும் இத்தனை நாட்களுக்குப் பின்னும் மாறாமல் இருப்பது உனக்குத் தெரியாதா? இன்று நமக்கு மிகவும் முக்கியமான நாள். நாமிருவரும் சந்தோஷமாகவே இன்று பூராவும் இருப்போம்.” எனச் சொல்லிக் கொண்டே தானும் பூஜைக்குத் தயாராக குளிக்கப் போனார். ஜானுவும் அவரிடம் “எனக்கு எப்ப உங்களிடம் கோபம் வந்திருக்கறது?நானும் உங்களிடம் கொஞ்சம் விளயாட்டாகத்தான் பேசினேன். என் மனதில் ஒன்று மில்லை. சீக்கிரம் குளித்து வாருங்கள். நானும் பூஜைக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்கிறேன்” எனச் சொல்லி மகேஸ்வரனை சமாதானப் படுத்தினாள்.

பூஜையறையில் அன்று செய்ய வேண்டிய பூஜைக்குத் தேவையானதை எடுத்து வைத்து விட்டு, விளக்கிற்கு நெய் விட்டு புது திரி போட்டு விளக்கை ஏற்றினாள். விளக்கு ஏற்றிபோதே வழக்கம்போல் திரு விளக்கு ஸ்லோகம் சொன்னாள். மகேஸ்வரனும் குளித்து முடித்து சுத்தமாக பூஜை அறைக்கு வந்து விபூதி இட்டுக் கொண்டு, ஜானுவைப் பார்த்து “பூஜைக்கு எல்லாம் தயாராக இருக்கிறதா? என் கேட்டுக் கொண்டே, பூஜை செய்ய மனையில் அமர்ந்தார். ஜானுவும் அவருக்கு உதவியாக புஷ்பக்கூடையை எடுத்து அவர் கைகளில் அருகில் வைத்தாள். இருவரும் சேர்ந்து சுவாமியை நமஸ்கரித்து விட்டு, பூஜை செய்ய ஆரம்பித்தார்கள். மகேஸ்வரனுக்குப் பார்வை குறையால் அடிக்கடி பூஜை சாமாங்கள் எடுக்க சங்கடப்பட்டார். அப்போதெல்லாம் ஜானு சிரித்தபடியே “எங்கே உங்களால் ஒரு தட்டைக் கூட சட்டுன்னு எடுக்க முடிகிறது. பக்கத்திலேயே இருக்கும் சாமானுக்குக்கூட என்னைக் கூப்பிடாமல் எடுக்க மாட்டீர்களே” எனவும் சொன்னாள். அதற்கு ஆமாம். நான் கூப்பிட்டவுடனேயே வந்து விடுகிறாப்போல்தான் நினைப்பு. என் தொண்டைத் தண்ணி வற்றும் வரைக்கும் நான் பத்துதடவைச் சொன்னால், நீ யோசித்துப் புரிந்து வந்து எடுத்துக் கொடுக்கட எத்தனை நாழி ஆகறது தெரியுமா? இந்தச் சின்ன பூஜைக்கே எனக்கு எத்தணை நாழியாகிறது. ஏதோ நான் சாதுவானதால் உன் காலம் நடக்கிறது. இல்லையென்றால், யார் ஐம்பத்திரண்டு வருஷம் உன்னை வைத்துக் கொண்டு குப்பைக் கொட்டுவான்? எனவும் சொன்னார். அதற்கும் சலிக்காது “ஆமாமாம். பெரிய தியாகி என்ற எண்ணம் போலத்தான். நீங்கள் மட்டும் என்னவாம். சின்ன சாமானை எடுக்க வேண்டுமென்றாலும், நூறுதரம் ஜானு..ஜானு.. என இந்தத் தெருவே கேட்பதுபோல் கூப்பாடு போடறது கொஞ்சமா. எனக்குக் கொஞ்சம் காது கேட்காதுதான். அதற்காக இப்படியா ஊரே கூடுவதுபோல் கூப்பிடவேண்டும். தெருவிலே போனால் சின்ன பசங்க்கூட என்னைப் பார்த்து ஜானு..ஜானூ..என்று கூப்பிட்டு என்னைக் கேலி செய்கிறார்கள். என்ன இருந்தாலும் பெண்களுக்கு இருக்கும் பொறுமையும் பாசமும் உங்களைப் போல் ஆண்களுக்குக் கிடையாது” எனச் சொல்லி தனக்கு இருக்கும் குறையால் மனம் துக்கித்தாள். அதைப் பார்த்த மகேஸ்வரன “அசடே நான் உன்னைக் கேலி செய்யவில்லை. எனக்கும்தான் குறை இருக்கு. ஆனால் நாந்தான் கலியாணத்திற்கு முன்பே கண்ணாடி போட்டிருந்தேனே அதைக் கண்டு எனக்கும் கண் பார்வையில் பழுது இருக்கிறது என நீ தெரிந்து கொள்ளவில்லையா?” எனவும் கேட்டார். அதற்கு ஜானுவும் “எங்கே எனக்கு அத்தனை புத்தியும் சாமர்த்தியமும் இருந்தது போராத்திற்கு உங்கள் அம்மாவும் என்னிடம் வந்து என் பிள்ளை கண்ணும் கண்ணாடியுமாக ராஜாமாதிரி ஆபிசுக்குப் போவதைப் பார்க்கவே எங்கள் தெருவில் பெண்கள் வரிசையில் நிற்பார்கள் என நீங்கள் அழகில் சிறந்த மன்மதன்போல் சொல்லி இருந்தார். அப்போவெல்லாம் எனக்கு மிகவும் பெருமையாக இருக்கும் “ஏன் தெரியுமா இத்தனை அழகுடையவர் தன்னை ஆசையுடன் பார்க்கும் அத்தனைபேரையும் விட்டுவிட்டு, அரைக் காது கேட்கும் என்னைப் பார்த்து ஆசைப் பட்டாரே” என மிதப்பில்தான் இருந்தேன். எனக்கு முதலில் தெரியாது உங்களுக்குப் பார்வையில் கோளாறு என்று. பிறகுதான் தெரிந்தது. உங்களுக்குத்தான் என்னைப் பற்றி தெரியுமே? அப்படியிருக்க நீங்கள் ஏன் என்னைப் பண்ணிக்கனும்னு பிடிவாதம் பிடித்து என்னிடம் வந்து பேசனீர்கள்? எனவும் கேட்டாள். அதற்கு அவரும் “எந்தக் கொடுமையைச் சொல்வது, உன்னைப் பற்றி உன்னிடம் என் அம்மா பெருமையாக சொன்னது போல்தான்,உங்கப்பாவும் என்னிடம் வந்து “என்னுடைய ஜானகி, மிகவும் சாதுவான பெண். எதையும் ஒரு முறைக்கு இருமுறை சொன்னால்தான், நம்மிடம் முகத்தைக் காட்டிக் கேட்பாள். யாரிடமும் அதிகமாகப் பேசக் கூட மாட்டாள். மிகவும் அமைதியானவள்” என்றார். நானும் உன்னைச் முறையாக உன்னைப் பெண் பார்க்க வந்த போது உன்னிடம் கேட்டதிற்கெல்லாம் நீ என்னிடம் நேரில் பதில் சொல்லாது, உன் அப்பாவையேப் பார்த்து மிகவும் மெதுவாக பதில் சொன்னாய். நீ சொன்னது எதுவும் எனக்குக் கேட்கவும் இல்லை புரியவும் இல்லை. உன் அப்பாதான் உனக்குப் பதிலாக அன்றுமுழுவதும் என்னிடம் பேசினார். நானும்கூட அதைப் பார்த்து, உண்மையிலேயே நீ மிகவும் சாது, அமைதியான பெண் என நினைத்து நீ என்னிடம் எதற்கும் சண்டை போடமாட்டாய் எனவும் நினைத்து புரித்தேன். அதே மயக்கத்தில்தான் என் முழு சம்மதத்தையும் சொல்லி, உடனேயே கலியாணம் முடிக்கவும் கேட்டுக் கொண்டேன்: எனவும் சிரித்துக் கொண்டேச் சொன்னார். அதைக் கேட்ட ஜானுவும் “ஆமாம்தான். நம்மிருவருடைய குறைகள் தெரியாமலேயே உங்கள் அம்மா சொன்னதை நானும், என் அப்பா சொன்னதை நீங்களும் யதார்த்தமாக எடுத்துக் கொண்டு விட்டோம் என மிகவும் வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் சொன்னாள். என்ன எனக்கு ஒன்றும் குறைவாகத் தெரியவில்லை. கண் பார்வையில் பழுது இருந்தாலும், நீங்களும்தான் இத்தனைகாலம் பதவியில் இருந்து நல்லபடியாகவே ஓய்வு பெற்றுவிட்டீர்கள். இன்றும்கூட உங்களுக்கு என்ன குறை. வெளியில் போகும்போது ஒரு துனை வேண்டும், அதைவிட எனக்கு வேறு என்ன சுகம் வேண்டும். பார்ப்பவர்களுக்கெல்லாம் நாமிருவரும் எங்கு போனாலும் ஒன்றாகப் போவது பொராமையாகத்தான் இருக்கிறது.” எனப் பெருமையாகச் சொல்லி தனக்கு கணவரின் குறைகள் பெரியதாகத் தெரியவில்லை என அவருக்குச் சமாதானம் சொன்னாள். பதிலுக்கு அவரும் “விடம்மா ஜானு யார் என்ன பொய்யும் சொல்லி நம்முடைய கலியாணம் நடக்கவில்லை. அது நம்மிருவர் விருப்பத்தின் காரணம்தானே. இப்பவும்கூட நீ என்னிடம் மிகவும் பிரியமாகவும், ஆதரவாகவும்தான் இருக்கிறாய். என் நண்பர்கள் என்ன சொல்வார்கள் தெரியுமா? மகேஸ்வரனைப்போல் அதிர்ஷ்டக்காரன் உலகத்தில் இல்லை. அவனிடம் என்றும், எதற்கும் ஜானு வாக்குவாதம் செய்வது இல்லை, அவன் மனதுப்படியே இருக்கிறாள். அதனால்தான் மகேஸ்வரன் இத்தனை சந்தோஷமாக இன்னும் இருக்கிறான். கொடுத்து வைத்தவன்” என என் காது படவே பேசுவார்கள். அதெல்லாம் எனக்கு மிகவும் பெருமைதான். நம்மிருவருக்கும்தான் பொருத்தம் என்று அன்றே பகவான் முடுச்சுப் போட்டு விட்டான். நாமும் இன்றுவரை குறையில்லாமல்தான் இருக்கோம்.” என ஜானுவை சமாதானம் செய்தார். அன்றுமட்டும்மல்ல, அவர்கள் இருவரும் அப்படியேதான் தங்கள் வாழ்க்கை முழுவதும் ஒருவரை வொருவர் கேலியும், பரிகாசமும் செய்து கொண்டேயிருந்தார்கள். இது அவர்கள் இருவருக்கும் தினப்படி நடக்கும் விளையாட்டுத்தான். திருமணமாகி அரை நூற்றாண்டுகள் கடந்த நிலையிலும் ஒருவருடன் ஒருவர் அன்நோன்யமாகவும், பாசமாகவும் இருப்பதே இருவருக்கும் ஒரு ஜீவாதாராமானது. ஆம். காலக் கிரமத்தில், அவர்களின் பிள்ளையும், பெண்ணும் தங்கள் தங்கள் குடும்பம் என்றும், வேலையென்றும் வெளியூர்களில் இருப்பதால், அவர்கள் தங்களின் முதுமையையும், தனிமை ஏக்கத்தையும் அதிகம் பாராட்டாதிருக்கிறார்கள்.

பூஜையை முடித்துக் கொண்டு, எழுந்த மகேஸ்வரன், தன்னருகில் இருந்த ஜானுவையும் கைத்தாங்கலாகப் பிடித்து எழுப்பி விட்டார். கொஞ்சகாலமாக அவளுக்கு வாயுப் பிடிப்பால், சீக்கிரம் எழுந்திருக்க முடியாது. பிறகு தன் அறைக்குச் சென்று ஜானுவுக்காக வாங்கியிருந்த புடவையை எடுத்து வந்து அவளிடம் கொடுத்தார். ஜானுவும் தான் அவருக்காக வாங்கி வைத்திருந்த ஒரு வேஷ்டி, ரேடிமேட் சட்டையையும் அவரிடம் கொடுத்து நமஸ்காரம் செய்தாள். இருவரும் அன்று பூஜைக்குப்பின் சாப்பிட்டுவிட்டு, சிறிது நேரம் ஓய்வு எடுத்தார்கள். மாலையில் இருவரும் புதுத் துணியை அணிந்து கொண்டு கோவிலுக்குப் போய்விட்டு, அப்படியே வரும் வழியில் தங்களின் இரவு ஆகாரத்தையும் முடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார்கள்.

தங்களின் அறையில் அமர்ந்து புஸ்தகம் ஒன்றைப் படித்துக் கொண்டிருந்த மகேஸ்வரனின் மடியில் தன்னுடைய தலையை வைத்துக் கொண்ட ஜானுவின் கண்களில் நீர் வழிந்து மகேஸ்வரனின் மடியை நனைத்தது. தன் மடியில் விழுந்த கண்ணீரைக் கண்டவர் தன் மடியில் தலையைச் சாய்த்திருந்த ஜானுவின் முகத்தைத் தூக்கி “என்னம்மா நீ ஏனின்று கண்ணீர் விடுகிறாய். இது வரை நீ சந்தோஷமாகத்தானே இருந்தாய். இப்பேன்ன காரணம்? எனக் கேட்டவரிடம்” இது ஆனந்தக்கண்ணீர். நான் எத்தனை வருடங்கள் எத்தனை தேவர்களுக்குப் பூப்போட்டு பூஜை செய்தேனோ தெரியாது, இந்த ஜென்மத்தில் உங்களுடன் என் வாழ்வை இனைத்து வைத்திருக்கிறது தெய்வம். ஐம்பத்துஇரண்டு வருடங்கள் வாழ்ந்தது போறாது, இன்னும் பல வருடங்கள் உங்களுடன் வாழ்ந்து நீங்கள் ஒவ்வொரு வருட திருமணநாளுக்கும் எனக்கு புடவை வாங்கிக் கொடுக்க நான் தவம்தான் செய்யனும்.” என மன நிறைவாக அவரிடம் சொல்லி தன் மகிழ்ச்சியைக் காண்பித்தாள். பதிலுக்கு மகேஸ்வரனும் “நீமட்டுமல்ல ஜானு, நானும்தான் எத்தனையோ ஜென்மங்கள் பகவானுக்குப் பூஜை செய்திருப்பேன். இல்லையென்றால், ஸ்ரீராமனின் தேவி ஜானகியைப் போல நீ எனக்கு கிடைத்திருப்பாயா? உனக்கு ஒவ்வோரு வருடமும் புடவை வாங்கிக்கொடுக்கவாவது நானும் உன்னுடன் நீண்ட நாள் வாழ வேண்டுமென்றுதான் இன்றுகூட கோவிலில் ஸ்வாமியை வேண்டிக்கொண்டேன்.” என அவரும் ஜானுவின்மீது தான் கொண்டிருக்கும் அன்பின் அடையாளமாகச் சொல்லி அவளை அன்புடன் பார்த்துக் கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்த பின் ஜானு கேட்டாள் “பிறப்பும் முடிவும் நம் கையில் இல்லை. அப்படியிருக்கும் போது நம்மிருவருக்கும்தான் எத்தனை பேராசை பார்த்தீர்களா. இத்தனை நாட்கள் நம்மை பிரியாது வைத்திருக்கும் பகவான், இனி எத்தனை காலம் நம்மிடம் கருணை காட்டுவாரோ தெரியாது. இயற்கையின் நியதியை நாம் மாற்ற முடியுமா? அதற்காக உங்களைப் பிரிந்து ஒருநாள்கூட வாழ நான் இருக்க மாட்டேன்” என ஜானு சொன்னது, மகேஸ்வரனும் “என்னால் மட்டும் நீ இல்லாமல் இருக்க முடியுமா? நாமிருவரும் இன்று இதற்காக வருத்தப்படுவது பைத்தியக்காரத்தனம்தான். எது நடக்குமொ அதுதான் நடக்கும். எல்லாம் அவன் செயல். நம்மைச் சேர்த்தவனும் அவந்தான். அவனின் கருணை நமக்கு இன்னும் இருந்தால், நாமிருவரும் ஒரு நிமிடம் கூட பிரியாமல் வாழுவோம். அவனிடம் நம்பிக்கை வைத்து, இன்று இரவைக் தூங்கிக் கழிப்போம். நாளைப்போழுது அவன் கட்டளை.

அவர்களுக்கும் தெரியாது அதுதான் அவர்களின் வாழ்வின் கடைசி நாளென்று. அவர்களின் வேண்டுதல்கள் தெய்வத்தின் காதில் விழுந்ததோ அல்லது கூற்றுவனாலும் அன்பால் கட்டுண்ட அந்த இருவரின் ஆத்மாக்களைப் பிரிக்க முடியாமல், ஒன்றாகவே எடுத்துச் சென்று விட்டானொ தெரிய வில்லை. மறுநாள் காலையில் வெகு நேரம் அவர்கள் வீட்டின் கதவு திறக்காததைப் பார்த்த கடைப் பையன், பயந்து போய் அக்கம் பக்கத்தவர்களை அழைத்து வந்து பார்த்தபிந்தான் மற்றவர்களுக்குச் தெரிந்தது அவர்களின் ஆத்மா வானுலகில் சேர்ந்து பறந்து விட்டன என.

தெய்வம்கூட பிரிக்க விரும்பாத அன்புப்பலாதான் அந்த வேர்ப்பலா.

No comments:

Post a Comment