(ஜெயரமணி)
பிரியக் கூடாத உறவுகள்
(ஜெயரமணி)
தன்னுடைய ஆபிசில் வேலையில் ஆழ்ந்திருந்த பார்த்திபனுக்கு, அவனுடைய தனித் தொலைபேசியில் அழைப்பு வந்துப் பார்த்தவனின் கண்களில் ஒரு அதிர்ச்சியும், ஆச்சரியமும் ஏற்பட்டது. ஆமாம், அந்த்த் தொலை பேசியில் அவனை அழைத்தவள் அவனை விட்டுப் பிரிந்து வாழ்கின்ற மனைவி வாசுகிதான். இத்தனை மாதங்கள் கடந்து, திடீரென்று இன்று தன்னுடன் தொடர்பு கொள்ள அவளுக்கு என்ன அவசியம்? எனவும் யோசித்தான். அந்த அழைப்பை ஏற்பதா, மறுத்து விடுவதா எனவும் ஒரு வினாடி யோசித்தான். அவனுள் இருக்கும் நல்லவன் , “என்ன அவசரமோ, இத்தனை மாதங்கள் கடந்து தன்னுடன் பேசுவதற்கு? எதற்கும் காரணம் தெரியாமல் இருப்பது சரியல்ல. மேலும் தன்னிடம் எதுவும் உதவி தேவையென்றிருந்தால்தான் வாசுகி தொடர்பு கொள்வாள். விஷயம் தெரிந்து கொள்வதில் தப்பில்லை எனவும் நினைத்து தொலைபேசியில் பதில் கொடுத்தான்.
பார்த்திபனின் குரல் கேட்டவுடன், எதிர் முனையில் இருந்து ஒரு குரலும் வந்தது. “நன்றிங்க, எங்கே என்னுடைய நம்பரைப் பார்த்தவுடன், தொடர்பை துண்டித்து விடுவீர்களோ எனப் பயந்து கொண்டேதான் முயற்சி செய்தேன். எனக்கு உங்களுடன் கட்டாயம் பேச வேண்டும். எனக்கு உங்களின் உதவியும் வேண்டும்.”எனச் சொன்னவுடன், பார்த்திபனின் கண்களில் அவனுடைய குழந்தை சந்தோஷின்முகம் தெரிந்த்து. ஒருவேளை குழந்தையின் உடலுக்கு எதுவும் பிரச்சினை இருக்குமோ எனவும் பயந்தான். அதனால் பதிலுக்கு “என்ன என் குழந்தை சந்தோஷ் எப்படி இருக்கிறான். அவன் ஆரோக்கியம் நன்றாக இருக்கிறதா?” எனக் கேட்கவும், வாசுகியும் “அவன் விஷயமாகத்தான் நான் உங்களுடன் உடனடியாக பேச துடித்தேன். நீங்கள் தயவு செய்து, சிரமம் பார்க்காமல் உடனடியாக நான் இருக்கும் இடத்திற்கு வர முடியுமா? உங்களால் எவ்வளவு சீக்கிரம் வர முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் வந்தால், நன்றாக இருக்கும்” எனச் சொன்னாள். உடனே பார்த்திபன் “கவலை வேண்டாம். நான்
...2...
நாளைக்கு காலையில் உன் வீட்டிற்கு வருகிறேன். தேவை இருந்தால், ஒரு நாள் விடுமுறையும் போட்டுக் கொள்கிறேன்” எனச் சொல்லிவிட்டு, தொலைபேசியை வைத்தான்.
ஆபிசிலிருந்து வீட்டிற்கு வந்தவனின் நினைவுகள் அவனுடைய கடந்த காலத்திற்குச் சென்றது. அவனுடைய திருமணம் பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட ஒன்றுதான். வாசுகி சின்ன வயதிலிருந்தே தன்னுடைய ஆசைகள், எண்ணங்கள் என இருந்தாளே தவிர, மற்றவர்களின் உணர்வுகளுக்கோ, எண்ணங்களுக்கோ எந்தவிதமான முன்னுரிமையும் தரமாட்டாள். திருமணத்திற்கு முன்பும், அவளுக்கு என்ன பிடித்திருக்கிறேதோ அதைத்தான் செய்வாளே தவிர, பெரியவர்களான அவளுடைய அப்பா, அம்மா அவர்களின் புத்திமதியோ, வார்த்தைகளையோ ஏற்றுக் கொள்ள மாட்டாள். பிறந்த வீட்டில்தான் இப்படி இருக்கிறாள், கலியாண மானதும், அவளுக்கு என ஒரு வாழ்வு இருக்கும். அதற்கு ஏதுவாக, வருகின்ற கணவருடன் இனைந்து இருப்பாள் என நம்பினார்கள் பெற்றவர்கள். ஆனால் அது தப்பென்று அவர்களுக்கு தெரிந்தபோது, தங்களால் இயன்ற மட்டும் பெண்ணிற்கு புத்தி சொல்லி, அலுத்து விட்டார்கள். அப்படி இருந்தாலும், பார்த்திபன் அவளுடைய போக்குப் படியே இருந்தான். எந்த விஷயத்திலும், வாசுகி தான் எடுத்த முடிவுப்படியே நடக்க வேண்டுமென பிடிவாதம் பிடிப்பாள். பார்த்திபன் அவளுக்கு அவளுடைய முடிவில் ஏற்படும் பாதங்கங்களை எடுத்துச் சொன்னாலும், அவளின் கவனத்தில் ஏற்க மாட்டாள். மாறாக, தன்னுடைய எந்த விருப்பத்தையும் பார்த்திபன் முழு மனதாக ஏற்பதில்லை எனச் சொல்லி, வீட்டின் நிம்மதியைக் கெடுப்பாள். சாதாரணமாக பார்த்திபன் எந்த விஷயத்தையும் ஒருமுறை எடுத்துச் சொல்வான். அவனின் பேச்சுக்கு மரியாதை இல்லை எனத் தெரிந்தால், அதற்கு மேல் அதைப் பற்றி பேச மாட்டான். அதே சமயம் வாசுகியிடம் தெளிவாகவே சொல்லி விடுவான். “வாசுகி நீ எடுக்கும் முடிவு எனக்கு ஒப்பவில்லை. ஆனால், என் மறுப்பை நீ மதிக்க மாட்டாய். அதனால், இது விஷயமாக நான் இனிமேல் பேச மாட்டேன். அதே சமயம், இதனால் பிற்காலத்தில், உனக்கு எதுவும் கஷ்டம் வந்தால், நான் அன்று உன் உதவிக்கு வர மாட்டேன். நீ செய்த முடிவால் ஏற்படும்
..3..
பலாபலங்களை நீயே தனியாக பார்த்துக் கொள்” எனத் திட்டமாகச் சொல்லி விடுவான். வாசுகி, பார்த்திபனின் வருத்தத்தையோ, வேதனையோ எதற்கும் கவலைப் பட மாட்டாள். மாறாக, எத்தனை பேர் எத்தனை எதிர்த்தாலும், தன்னுடைய மனதில் தோன்றியபடிதான் வாழ்க்கையை நடத்துவாள். அதில், மற்றவர்களின் ஏமாற்றம், வேதனை என எதைப் பற்றியும் நினைத்துக் கூட பார்க்க மாட்டாள். தன்னுடைய காரியம் நடக்க வேண்டும். தன்னுடைய ஆசைகளை யாரும் தடுக்கக்கூடாது. அதில் வெற்றி பெற்றால் போதும் என இருப்பாள். அவளின் குணம் தெரிந்த பார்த்திபன், பெரும்போதும், அவளை விட்டு ஒதுங்கியே இருப்பான். தானுன்டு, தன்னுடைய வேலை உண்டு என இருப்பான். இருவரும் காதலால் கட்டுண்டு மணம் புரிந்தவர்கள் இல்லை. ஒரு கட்டாயத்திற்காக குடும்பம் நடத்தினார்கள். மணமற்ற மணவாழ்க்கைதான் அவனுக்கு கிடைத்தது. அந்தக் கடமைக்காக வாழ்ந்த வாழ்க்கையில் பூத்த ஒரு சிறு இன்பம்தான் குழந்தை சந்தோஷ். பார்த்திபன், குழந்தை பிறந்த பின், அவனுடைய மொத்த கவனமும் குழந்தையின் மேல் வைத்தான். அதுவே அவனுக்கு நிம்மதியாக இருந்தது.
சந்தோஷின் முதல் ஆண்டு பிறந்த நாளுக்கு தன்னுடன் படித்த பள்ளி, காலேஜ் நண்பர்களை அழைக்க வேண்டுமென வாசுகி விரும்பினாள். பார்த்திபனுக்கு எந்த விதமான ஆடம்பரமான விழாக்கள் பிடிக்காதென்றாலும், வாசுகியின் பிடிவாதத்திற்கு பணிந்தான். இல்லையென்றால் வீட்டில் நிம்மதி இருக்காது. அப்பவும் சொன்னான் :வாசுகி, உன்னுடைய விருப்பத்திற்குத்தான் இந்த விழா நடக்கும். இதில் என்னுடைய நண்பர்கள் யாரும் வரமாட்டார்கள். உன் விருப்பப்படியே ஏற்பாடுகளைச் செய்.” எனச் சொல்லி விட்டு போனான். வாசுகியும் தன்னுடைய நண்பர்களை எல்லாரையும் அழைத்திருந்தாள். விழாவன்று எல்லாருமே வந்தார்கள். அவர்களில் ஒருவன் மோகன் என்பவன். அவனும் வாசுகியும் காலேஜில் கல்சுரல் விழாக்களில் இன்னிசை நிகழ்ச்சி நடத்துவார்கள். இருவர் இனைந்து பாடும் போது இருவரின் குரல்களும் கேட்பவர்களுக்கு மிகவும் ஆனந்தமாக இருக்கும். அதனால், அவர்கள் இருவரையும் காலேஜில் “இராஜா—ஜிக்கி” ஜோடி என்றே குறிப்பிடுவார்கள்.
..4..
மோகனுக்கும் வாசுகியின் மீது ஒரு தலைப் பட்சமான காதல் இருந்தது. ஆனால், வாசுகிக்கு அப்படி எந்த விதமான பற்றுதலும் இல்லை. அதனால், அவள் மோகன் தன்னுடன் பழகுவதை மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொண்டு, அதையும் நட்புத்தான் எனவும் இருந்தாள். அதனால்தான், வாசுகியின் பெற்றோர் பார்த்திபனுக்கு அவளைத் திருமணம் செய்ய முடிவு செய்தபோது, எந்தவிதமான மறுப்பும் சொல்லாமல், மணந்து கொண்டாள். தன்னை மறுத்து விட்டு, திடீரென்று பெற்றோர்கள் விருப்பப்படி வாசுகி கலியாணம் செய்து கொண்டது மோகனுக்கு ஒரு ஏமாற்றத்தையும், அதே சமயம் அவள் மீது கோபமும் ஏற்பட்டது. அவனுக்கு அவள் தன் முதல் குழந்தையின் பிறந்த நாள் விழாவுக்கு அழைத்தபோது, தன்னுடைய ஏமாற்றத்தைக் காட்டாது, விழாவிற்கு வந்தான்.
விழா ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்த வாசுகியிடம் “என்ன வாசுகி, உன்னுடைய குழந்தையின் பிறந்த நாளில் உன்னுடைய பாட்டில்லாமல் இருக்கலாமா? உன்னுடைய இனிமையான குரல் கேட்டு எத்தனை நாட்கள் ஆகிவிட்டது.” எனக் கேட்க, மற்றவர்களும் அவனுடன் சேர்ந்து வாசுகியைப் பாடும்படி கட்டாயப் படுத்தினார்கள். நண்பர்களின் விருப்பத்தை வாசுகியும் நிறைவேற்றினாள். முதலில் வாசுகி மட்டும் பாட, பிற்பாடு மற்றவர்களும் ஒவ்வோருவராக பாட ஆரம்பித்தார்கள். அதே சமயம், வந்திருந்த காலேஜ் நண்பர்கள் எல்லாரும், மோகனும் வாசுகியும் சேர்ந்து பாட வேண்டுமென கேட்க, இருவரும் பாடலானார்கள். பார்த்திபனுக்கு விருப்பம் இல்லையென்றாலும், வந்திருப்பவர்களை அவமதிக்கவோ, தன்னுடைய வெறுப்பைக் காண்பிப்பதோ நாகரீகமானது இல்லை என்பதால், மிகவும் பொறுமையாக இருந்தான்.
விழா முடியும் போது மோகன் பார்த்திபனிடம் “பார்த்திபன், நீங்கள் வாசுகியின் பாட்டை இன்றுதான் கேட்கிறீர்களா? எங்கள் காலெஜில் அவள்தான் இசைக்குயில் ஜிக்கி என எல்லாராலும் அன்பாக குறிப்பிடுவார்கள். அவளுடைய திறமையெல்லாம் ஏன் இப்படி அடங்கி இருக்க வேண்டும். நீங்கள் ஏன் இனியும் அவளை எங்களின் குழுவில் சேர்ந்து பாடுவதற்கு அனுமதிக்கக் கூடாது. வாசுகியின் திறமை நீங்கள் மறைக்கக்கூடாது.” எனச் சொல்லி விட்டு,
...5..
வாசுகியிடம் “வாசுகி, நீ எப்படியாவது பார்த்திபனிடம் அனுமதி வாங்கு, இப்பவெல்லாம் என்னுடைய குழுவில் பாடுபவர்களின் குரலில் எந்த விதமான இனிமையும், உணர்ச்சிகளும் இல்லை. அதனால், நான் எத்தனை முயற்சி எடுத்து பாடினாலும், என்னுடைய நிகழ்ச்சிகள் அவ்வளவு சிறப்பாக வருகிறதில்லை. நீ மட்டும் திரும்ப என்னுடன் இனைந்து பாட ஆரம்பித்தால், மீண்டும் என்னுடைய நிகழ்ச்சிகள் எல்லாராலும் பாராட்டப்படும். உன்னால் என்னுடைய குழுவில் இருப்பவர்களுக்கும் ஒரு பெருமை வரும், உன்னுடைய திறமைகளையும் வெளிச்சத்திற்கு கொண்டு வரவேண்டும்” எனச் சொன்னான். கடைசியில் எல்லாரும் கிளம்பும்போதும், மோகன் பார்த்திபனிடம் கேட்டான் “என்ன பார்த்திபன், நான் கேட்டதிற்கு நீங்கள் ஒன்றும் சொல்லவில்லையே. மௌனம் சம்மதம் என நான் எடுத்துக்கலாமா? “ எனக் கேட்டவுடன், பார்த்திபனுக்கும் சிறிது கோபம் வந்தது. அதைக் காட்டாமல், “மோகன், நீங்கள் எங்கள் திருமணத்திற்குப் பின் இன்றுதான் எங்களைச் சந்திக்கிறீர்கள். முதல்முதலாக நாம் சந்தித்த இன்றே நீங்கள் என்னிடம் இத்தனை உரிமை எடுப்பது எனக்கு சரியாகப் படவில்லை. நாங்கள் உங்களை எல்லாம் எங்களுடைய குழந்தையின் பிறந்த நாள் விழாவிற்குத்தான் அழைத்தோம். அப்படியிருக்க, திடீரென்று வந்த இடத்தில், வாசுகியை பாடச் சொன்னீர்கள். அவளூம் பாடினாள். அத்துடன் இந்த விஷயத்தை விட்டு விடுங்கள். அவள் என்னுடைய மனைவி, என் மனைவி மேடைகளில் பாட வேண்டுமா வேண்டாமா என முடிவு செய்வது என்னுடைய உரிமை. நீங்கள் கேட்டவுடனே, உங்களுக்கு பதில் சொல்ல எந்த விதமான அவசரமும், அவசியமும் இல்லை. நான் இது பற்றி யோசித்து. என்னுடைய முடிவை வாசுகியின் மூலம் சொல்லுகிறேன். இன்று எங்களின் அழைப்பை ஏற்று வந்திருந்த அனைவருக்கும் என்னுடைய நன்றி. விழா நன்றாக நடந்தது. சந்தோஷம்” எனச் சொல்லி, தன்னுடைய முடிவை நாகரீகமாகவும் சொல்லி விட்டான்.
அன்று இரவு படுக்கும்முன் வாசுகி பார்த்திபனிடம் “மோகன் சொன்னதைப் பற்றி யோசித்துப் பார்த்தீர்களா? என்னுடைய இளையகால கனவுகள்பற்றி அவன் நன்றாக அறிவான். அவன் சொல்லியபடியே நான் திரும்பவும் அவனுடைய குழுவில் சேர்ந்து பாடினால் என்ன? “ எனவும் கேட்டாள். அதற்கு
..6..
பதிலாக பார்த்திபன் “நான் ஏற்கெனவே அவனிடமே சொல்லி விட்டேன். நீ அவனோடு சேர்ந்து பாடியிருக்கலாம். அப்போ நீ என் மனைவி இல்லை. உனக்கு ஒரு குழந்தையும் இல்லை. அப்ப நிலைமை மாறியிருக்கிறது. உனக்கு ஒரு குடும்பம், பொறுப்பு உண்டு. அதனால், எதைப் பற்றியும் நன்றாக யோசித்து முடிவு செய். மோகன் சொன்னனான் என்பதற்காக, நீ உடனடியாக ஒரு முடிவுக்கு வரவேண்டியது இல்லை. நானும் தெளிவாக அவனிடமே சொல்லி விட்டேன். இன்று இனிமேல் அதைப் பற்றி பேச நான் விரும்பவில்லை. நாளைக்கு எனக்கு முக்கியமான வேலைகள் இருக்கு. நான் படுக்கனும்னு” சொல்லிவிட்டு, குழந்தையுடன் திரும்பி படுத்தான்.
அடுத்த இரு நாட்களுக்குள்ளாகவே மோகன் வாசுகிக்கு இருமுறை தொலைபேசியில் ஞாபகப்படுத்தி, சீக்கிரம் முடிவு எடுக்கவும் தூண்டினான். ஏற்கெனவே ஒரு முடிவில் இருந்தவளுக்கு அவனின் தூண்டுதல் மேலும் வலு கொடுத்தது. அதனால், அந்த வாரக்கடைசியில் பார்த்திபனுடன் திரும்பவும் தான் மோகனுடன் இசை நிகழ்ச்சிகளுக்குப் போவது பற்றி ஆரம்பித்தாள். அப்போதும் பார்த்திபன் ஒப்புதல் அளிக்கவில்லை. அந்த சமயம் வாசுகியின் பெற்றோரும் அவளைப் பார்க்க வந்தார்கள். அவர்களும் விஷயம் என்ன என தெரிந்து கொண்டு, வாசுகியிடம் “இப்போ உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலையெல்லாம். மோகந்தான் ஆகட்டும், வந்து விழாவிற்கு பங்கேற்று விட்டு பேசாமல் போகாமல், உன்னைத் திரும்பவும் பாடக் கூப்பிடுவானா? அப்போ நீ தனி மனுஷி, எங்களின் கட்டுப்பாட்டில் இருந்தாய். ஆனால் இப்போ உனக்கென்று ஒரு குடும்பம், குழந்தை, வாழ்க்கை இல்லையா? அவந்தான் சொன்னாலும், உனக்கு புத்தி இல்லையா? இதெல்லாம் தேவைதானா என யோசிக்க மாட்டாயா? எப்பவுமே உன்னுடைய விருப்பமே முக்கியம் எனக் இருக்கக் கூடாது. உன்னுடைய பொறுப்புக்களை உணர்ந்து கொண்டு நீ செயல் பட வேண்டும். மாப்பிள்ளையின் மனதைப் புரிந்து கொள். அவருக்கு விருப்பமில்லாததை செய்யாதே. நிம்மதியான வாழ்வில் வேண்டாத ஒரு இடைச்சிக்கல் வேண்டாம்” எனத் தீர்மானமாகச் சொன்னார்கள். அப்பவும் கூட வாசுகி அவர்களிடமே “இதில் நீங்கள்ஏன் தலையிடுகிறீர்கள். எனக்கென்று ஒரு ஆசை,விருப்பம், இலட்சியம் இருக்கக்கூடாதா? உங்களுக்கே நன்றாகத் தெரியும்
..7..
நான் சின்ன வயதிலிருந்தே திரைப் படப் பாடல்களில் எவ்வளவு ஆர்வம் கொண்டவள், அதனால் எப்பவுமே அந்த பாடல்களைப் பாடிக்கொண்டிருப்பேன் என்பதும். எனக்கும் வயதாகி விட்டது. இன்னமும் உங்கள் எல்லாருடைய யோசனைகளையும் கேட்டுதான் நான் செய்யவேண்டும் என்பது சரியல்ல. என்னுடைய வாழ்க்கை என் விருப்பப்படிதான் இருக்க வேண்டும். நான் முடிவு செய்து விட்டேன். திரும்பவும் மோகனுடன் சேர்ந்து பாடுவது என. நான் இப்போ பார்த்திபனிடம் கேட்பது என்ன தெரியுமா? நான் இசை நிகழ்ச்சிகளுக்குப் போகும் சமயம், பார்த்திபன் குழந்தையைக் கவனிக்கும் பொறுப்பை ஏற்க வேண்டும். அதுவும் தினமுமா போகப் போகிறேன். மாதத்தில் ஒரு நாள் அல்லது இருநாட்கள்தான். இது எங்களுக்குள் நாங்கள் முடிவு செய்வோம். நீங்கள் இதில் எதுவும் சொல்ல வேண்டாம்” என அவர்கள் முகத்தில் அடித்தது போல் சொல்லவும், பார்த்திபனுக்கு சிறிது கோபம் வந்தது. அவன் “மாமா, மாமி நீங்கள் ஏன் தேவையில்லாமல் வார்த்தைகளை வீணாக்குகிறீர்கள். நமக்கெல்லாம் தெரியாதா வாசுகியின் பிடிவாதமும், அவசர முடிவுகளும். நான் அவளிடம் தீர்மானமாக ஒரு முறை சொல்லி இருக்கிறேன். எப்ப என்னுடைய சம்மதம் இல்லாத ஒரு காரியத்தில் அவள் ஈடுபடுகிறாளோ, அதன்பின் அதனால் அவளுக்கு எதுவும் பிரச்சினை வந்தால், நான் தலையிட மாட்டேன். அதன் பலாபலங்களை அவளே சந்தித்து வரும் வினைகளை அனுபவிக்க வேண்டுமென. அதனால், இனிமேல் அவளிடம் இது விஷயமாக நாம் என்ன ;புத்தி சொன்னாலும், அதெல்லாம் அவள் காதிலோ, புத்தியிலோ ஏறாது. போதும் விட்டு விடுங்கள். அவள் வாழ்க்கை, அவள் விருப்பம். இப்ப இந்த விஷயத்தில் நான் உங்களுக்கு முன் அவளுக்கு கடைசியாக சொல்லும் ஒரு யோசனை என்ன தெரியுமா? அவள் பாடுவது, மேடையில் ஏறுவது என்பதெல்லாம் எனக்கு முக்கியமல்ல. ஆனால், அதன் காரணமாக அவளின் கவனம், சிந்தனை ஒரு நிமிஷமாவது குழந்தையிடமிருந்து விலகினால், அதனால் அவனுக்கு எந்தவிதமான பாதிப்பும் வந்தால், பிறகு பார்த்திபன் யார் என்பதை அவளுக்கு நான் புரிய வைப்பேன். எனக்கும் நாகரீகம் தெரியும். பெண்களில் சுதந்திரத்தை நானும் மதிப்பவன். அதனால், அவள் இல்லாத காலத்தில், சந்தோஷை என்னுடைய நேரடி பொறுப்பில் இருப்பான். என்னுடைய கடமையை நான் ஒரு
..8..
நாளும் தவற மாட்டேன். சந்தோஷ் என்னுடைய குழந்தை. என்னுடைய உரிமை. அதுபற்றி அவளுக்கு எந்தவிதமான மன வருத்தமும் வேண்டாம்” எனச் சொல்லி விட்டு, வந்தவர்களை வழி அனுப்பி வைத்தான். பிறகு வாசுகியிடம் ஒன்றும் பேசாமல், தன்னுடைய வேலைகளைப் பார்த்துவிட்டு, குழந்தையுடன் படுத்துக் கொண்டான்.
எத்தனை விதமான எதிர்ப்புக்கள் இருந்த போதிலும்,தன்னுடைய முடிவில் மாறாத வாசுகி, மறு நாளே மோகனுடன் பேசி, தானும் இனிமேல் அவனுடைய குழுவில் இடம் பெறுவதாகவும், சொல்லி விட்டாள். மோகனுக்கும் அதில் மிகவும் சந்தோஷம். இருக்காதா, அவன் விரித்த வலையில், வாசுகி வந்து வழுந்து விட்டாள் என. மோகனும் அடுத்தமூன்று வாரங்களுக்குள் ஓரிருநிகழ்ச்சிகளை முடிவு செய்து விட்டான். அது மட்டு மல்லாது, அந்த நிகழ்ச்சிகளில் வசுமதியும் பங்கேற்பாள் என்பதையும் விளம்பரப்படுத்தி விட்டான். அதனால், வசுமதியின் சந்தோஷம் எல்லையைக் கடந்தது. ஆரம்பத்தில் சில காலம் ஒரு மாதத்தில் ஒரு நிகழ்ச்சி என இருந்தது. அந்த தேதிகளில் வசுவும் முன்னதாக பார்த்திபனிடம் சொல்லி இருப்பாள். நிகழ்ச்சிகளும் இரவு 9மணிக்குள் முடிந்து, வசுமதியும் வீட்டிற்கு வந்து விடுவாள். அதனால், ஆரம்பத்தில் எந்த வித குழப்பமும் இல்லாமல் இருந்தது.
ஒரு முறை வசு நிகழ்ச்சிக்கு ;போய் விட்டு வெகு சந்தோஷமாக வந்தாள். வந்தவள் பார்த்திபனிடம் “இன்று நீங்கள் வந்து என் பாட்டைக் கேட்டிருக்க வேண்டும். நானும் மோகனும் புதிதாக வந்த ஒரு படத்திலிருந்து ஒரு பாடலைப் பாடினோம். அந்தப் பாட்டிற்கு இரசிகர்களிடமிருந்து ஏகப்பட்ட வரவேற்பு. மிகவும் நன்றாக இருந்ததால், அதே பாடலை நானும் மோகனும் மீண்டும் பாட வேண்டுமென ஒரு மனதாக எல்லாரும் கேட்க, நாங்களும் நிகழ்ச்சியின் கடைசியில் அதே பாடலைப் பாடி முடித்தோம். என்னுடைய பாடலுக்கு கிடைத்த வரவேற்ப்பைக் கண்டு நான் தினறிப் போய்விட்டேன். இன்றுதான், எனக்கு என் திறமையின் சக்தியை புரிந்து கொண்டேன். நான் மேடையை விட்டு இறங்கும் போது, அங்கு வந்திருந்த இளைஞர்கள் கூட்டம்
..9..
என்னைச் சுற்றிக் கொண்டு வழியே விடவில்லை. நான் அவர்களுக்கெல்லாம் கையை ஆட்டி, நன்றியைச் சொல்லிக் கொண்டே, வந்தேன். என் மனம் இப்ப பறக்கிறது” எனச் சொல்லி விட்டு, பார்த்திபனின் முகத்தைப் பார்த்தாள். பார்த்தவளின் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது. தான் அத்தனை ஆசையாகச் சொல்லி வந்ததை, பார்த்திபன் கொஞ்சம் கூட கேட்கவில்லை என்பதும், அவனுடைய முகத்தில் எந்த விதமான உணர்ச்சிகளும் இல்லை என்பதைப் புரிந்தவுடன் அவளுக்கு மிகவும் கோபம் வந்தது. அவனிடம், “நீங்கள் என்ன நான் சொன்னதைக் கேட்கவில்லையா? நான் எத்தனை சந்தோஷத்துடன் வந்து, உங்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறேன், பதிலுக்கு உங்களிடமிருந்து என்னைப் பாராட்டி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லையே. என்னுடைய பெருமையை மற்றவர்கள் புகழ்வது உங்களுக்குப் பிடிக்கவில்லையா? ஒரு நாள் கூட என்னுடைய சந்தோஷங்கள், ஆசைகள், என என்னுடன் நீங்கள் பகிர்ந்து கொள்வதில்லை. உங்களுக்கு இசையை இரசிக்கவும் தெரியாது, மனைவியின் மனதைப் புரிந்து கொள்ளவும் மாட்டீர்கள்” எனக் பெரிய குரல் எடுத்து அவனுடன் வாதாட ஆரம்பித்தாள்.
பார்த்திபன் அவளிடம் “இப்ப என்னவாச்சு. நீங்கள் பாடியதை இரசிகர்கள் பாராட்டினார்கள். மீண்டும் பாடச் சொல்லி, உங்களைக் கேட்க, நிங்களும் பாடி அவர்களை மகிழ்வித்தீர்கள். இதற்கு நான் என்ன சொல்ல வேண்டும்னு எதிர்பார்க்கிறாய். உனக்கு உன்னுடைய பெருமை, புகழ்தான் பெரியதாக இருக்கு. உன்னுடைய கடமைகளை நீ சரியாக செய்கிறாயா? இல்லையே. நீ என்னிடம் என்ன சொன்னாய், மாதத்தில் ஒரிரு நாட்கள்தான் நிகழ்ச்சிகள் இருக்கும் என். இப்போ, அடிக்கடி, வாரத்திற்கு இரு முறைகூட நிகழ்ச்சிகள் நடக்கிறது. நானும் உன்னிடம் ஒப்புக் கொண்டபடியே, நீ இல்லாத போது சந்தோஷைக் கவனித்துக் கொள்கிறேன். ஆனால், சந்தோஷின் வயது என்ன. இரண்டு கூட ஆகவில்லை. நேரம் ஆக ஆக அவன் உன்னைத் தேடுகிறான். இன்று நீ எத்தனை மணிக்கு வந்திருக்கிறாய். இரவு மணி பனிரென்றுக்கு மேல் ஆகிவிட்டது. இத்தனை நேரம் கழித்து வந்தவளுக்கு, உடம்பில், மனதில் ஒரு பயம் இருக்கா. ஏதடா, சின்னக் குழந்தையை விட்டு விட்டு இத்தனை நேரம் வெளியில் இருக்கோமே, குழந்தை நம்மைத் தேடமாட்டானா? என உனக்கு
..10....
உறுத்தல்கூட இல்லாமல், நான் உன்னுடைய சந்தோஷத்தில் பங்கு கொள்ளவில்லைஎன என்னுடன் வாதம் செய்கிறாய். இப்ப மணி என்ன தெரியுமா? இரவு ஒரு மணி ஆகப்போகிறது. எனக்கு நாளைக்கு ஆபீஸ் இருக்கு நான் போக வேண்டும். சந்தோஷும் இரவு பத்து மணிவரை உனக். காக ஏங்கி விட்டுத் தூங்கினான். தயவு செய்து எங்களுடைய தூக்கத்தைக் கெடுக்காதே. உன் வேலையைப் பார்?எனச் சொல்லிவிட்டு, குழந்தையைத் தூக்கிக் கொண்டு படுக்கை அறைக்குள் சென்றான்.
வாசுகிக்கு தான் செய்வது சரியா, தப்பா என்றெல்லாம் யோசிக்க வில்லை. பார்த்திபனுக்கு தன்னுடைய திறமையை மற்றவர்கள் பாராட்டுவதுஏற்றுக் கொள்ளமுடியவில்லை. பொராமை. ஒரு குழந்தையை பெற்று விட்டால் என்ன, எனக்கென்று ஒரு இலட்சியம் இருக்கக்கூடாதா? நான் மேடையில் பாடுவதற்கு என்னுடைய வீட்டில் யாரும் ஆதரவாக இல்லை. பெண் என்றால், மற்றவர்கள் சொல்வது போல்தான் இருக்க வேண்டுமா?இது 21 ஆவது நூற்றாண்டு. அதை அவர்கள் மறந்து விட்டார்கள். எப்படியிருந்தாலும், நான் என்னுடைய திறமையை, மோகனுடன் சேர்ந்து மேடைகளில் பாடி, பெருமை அடையத்தான் போகிறேன். என் பெயர் பிரபலமானதும், இன்று என்னை மதிக்காதவர்கள் எல்லாம் அப்போ என்னை எப்படி புகழ்வார்கள் எனவும் தெரியும். குழந்தைக்குத் தேவையானதை எல்லாம் நான் செய்து விட்டுத்தானே போகிறேன். மாலையில் ஒரு நான்கு மணி நேரம் குழந்தையைப் பார்த்துக் கொள்வது அத்தனை பெரிய விஷயமா?இன்று ஒரு நாள் கொஞ்ச நேரம் ஆகிவிட்டது. நாந்தான் வந்தவுடனே நேரம் ஆனதிற்கு காரணம் சொல்லிவிட்டேனே, எல்லாம் மேல்சாவனிஷம். எனப் பலவாறு தன் மனதில் எண்ணிக் கொண்டு, படுத்தாள். அவள் மனதில் அன்றைய நிகழ்ச்சியில் மக்களின் பாராட்டு மட்டும் தான் நின்றது. மகிழ்ச்சியோடு உறங்கினாள்.
பார்த்திபனுக்கு அவனுடைய அலுவலகத்தில் ஒரு நிர்வாகப் பயிற்சிக்காக கானடா செல்லும் உத்திரவு வந்தது. அந்த பயிற்சிக்காக, பார்த்திபன் குறைந்தது ஒரு வருட காலம், பலவிதமான சோதனைகள், நேர்முக தேர்வுகள், பாக்டரியில் சோதனைச் சாலைகளில் தேர்ச்சி என தொடர்ந்து பரீட்சைகள் நடத்தி,
..11..
இந்தியாவில் மட்டுமில்லாது, உலக நாடுகள் பத்திலும் சேர்த்து, மொத்தம் இருநூற்றுப் பேர்களில், பார்த்திபனை, இந்தியா நாட்டிலுள்ள அவர்களுடைய அலுவலகத்தின் சார்பாக தேர்வு செய்யப்பட்டிருந்தான். அந்த உத்திரவு தலைமை ஆபிசிலிருந்து இரு நாட்களுக்கு முன் வந்து, இன்றுதான் அவனிடம் கொடுத்தார்கள். அதைக் கொடுத்தபோது, அவனுடைய அலுவலக அதிகாரிகள் மிகவும் மகிழ்ச்சியாகவும், அவனுடைய திறமைக்கு கிடைத்த சந்தர்ப்பம் எனவும் அவனைப் பாராட்டினார்கள். கூட இருந்த அன்பர்களும் தங்களுடைய சந்தோஷத்தை அவனுடன் பகிர்ந்து கொண்டார்கள். பார்த்திபனும் மிகவும் சந்தோஷத்துடன் வீட்டிற்கு வந்தான். அந்தப் பயிற்சிக்கு அவன் தன்னுடைய குடும்பத்தையும் அழைத்துச் செல்லலாம். பயிற்சி ஒராண்டு காலம் இருக்கும். அந்த காலத்தில் அவனுடைய சம்பளமும் அதிகமாகும். அதைத்தவிர, வெளி நாட்டில் வசிக்கும் காலத்திற்கான, வீட்டு வசதி, குடும்பத்துடன் கானடா போக விமானச் சிலவுகள், மற்றவகையாம இதர சிலவினங்களையும் கம்பெனியே ஏற்றுக் கொள்ளும். அவனை உடனடியாக போக வேண்டுமெனச் சொன்னபோதும் பார்த்திபனும் தயங்காது இரு வாரங்களுக்குள் செல்வதற்கு சம்மதித்தான்.
வீட்டிற்கு வந்தவனுக்கு வாசுகி இல்லையென தெரிந்தவுடன், ஒரு ஏமாற்றம் வந்தது. குழந்தையை வேலைக்காரியிடம் விட்டுவிட்டு, மாலையிலேயே வாசுகி தன்னுடைய இசை நிகழ்ச்சி ஒத்திகைக்காக மோகன் வீட்டிற்குச் சென்று விட்டதாகவும், பார்த்திபன் வரும் வரை குழந்தையை பார்த்துக் கொள்ளச் சொல்லி சென்றதாகவும் வேலைக்காரி சொன்னாள். வழக்கம் போல் மௌனமாக குழந்தையினைத் துக்க்கிக் கொண்டு, வேலைக்காரியை வீட்டிற்கு அனுப்பி விட்டான். அவனுக்கு அப்போ வீட்டில் இருக்கவும் பிடிக்கவில்லை. அதனால், குழந்தையைத் தூக்கிக் கொண்டு பார்க்குக்குச் சென்று சிறிது நேரம் விளையாடினான். பிறகு நேரம் ஆனதால், சந்தோஷை தூக்கிக் கொண்டு வந்து, அவனுக்கு இரவு உணவைத் தயார் செய்து கொடுத்தான். தானும் கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு, வாசுகியின் வருகைக்காக காத்திருந்தான்.
..12..
வாசுகி வந்தவுடன், சந்தோஷமாக குழந்தையையும் தூக்கிக் கொண்டு, ஒரு ஸ்வீட் பாக்கெட்டையும் எடுத்து அவளிடம் கொடுத்தான். அதை வாங்கியவள் “இன்று என்ன விசேஷம், ஸ்வீட் கொடுக்கிறீர்கள்?” எனவும் கேட்டுக் கொண்டபடியே சந்தோஷை வாங்கிக் கொண்டு, ஸ்வீட்டையும் வாயில் போட்டுக் கொண்டாள். அதற்கு பார்த்திபன் “என்னுடைய ஆபிஸில் என்னை ஒரு பயிற்சிக்காக ஓராண்டு காலம் கானடாவிற்கு அனுப்புகிறார்கள். என்னை எங்கள் கம்பெனியில் எல்லா கிளைகளிலும் இருப்பவர்களிடையே திறமையானவர்களைச் தேர்ந்தெடுத்து, கடுமையான சோதனைகள் எல்லாம் செய்த பின், இந்தியா நாட்டின் சார்பாக, என்னைத் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். இன்றுதான், என்னுடைய அதிகாரிகள் இந்த அறிவிப்பை அதிகார பூர்வமாக சொல்லி, என்னை வாழ்த்தினார்கள். இந்த வாய்ப்பு என்னுடைய நீண்ட கால கனவாகும். நாமெல்லாரும் சேர்ந்து கானடா போகலாம். அங்கே நமக்கு வீடு, இங்கிருந்து போவதற்குத் தேவையான எல்லா சிலவினங்களையும், விமான பயணச் சிலவு, இன்ஷுரன்ஸ், மருத்துவச் சலுகை, என எல்லா விதமான சலுமைகளும் கிடைக்கும். இன்னும் இரண்டு வாரங்களுக்குள் நாமெல்லாம் போக வேண்டும்.” எனச் சொல்லி விட்டு, சந்தோஷ் மிகவும் அதிர்ஷ்டக்காரன். இப்பவே அவன் விமானத்தில், வெளி நாடு போகப் போகிறான்: எனச் சொல்லிக் கொண்டே, குழந்தை ஆசையுன் அனைத்துக் கொண்டான்.
அவன் எதிர்பார்த்தபடி, வாசுகியின் முகத்தில் எந்தவிதமான சந்தோஷமும் இல்லை. மாறாக, திடீரென்று கானடா போக வேண்டும் எனச் சொன்னவனைப் பார்த்து “இதென்ன, உங்கள் கம்பெனியில் உங்களுக்கு கால அவகாசம் சொடுக்க வேண்டாமா? திடீரென்று உங்களை வெளிநாட்டில் பயிற்சிக்கு அனுப்புவது சரியா? நீங்கள், இதற்கு எப்பச் சம்மதம் தெரிவித்தீர்கள். என்னிடம் எதுவும் இது பற்றி முன்பே சொல்லவில்லையே”? எனக் கேட்டவளுக்கு, “நான் இப் பயிற்சிக்குச் செல்ல ஓராண்டு காலத்திற்கு முன்பே என்னுடைய சம்மதத்தைத் தெரிவித்து விட்டேன். அப்போ, நீ என்னுடைய மனைவியாக மட்டும்தான் இருந்தாய். இப்போத்தான் மேடைகளில் பாடும் பாடகியாக ஈடுபாடு கொண்டு மோகனுடன் சென்று கொண்டிருக்கிறாய். உன்னிஷ்டப்படியே, நீயும் கொஞ்ச காலம் பாடி விட்டாய். போறும். நமக்கென்று ஒரு வாழ்க்கை இருக்கு. இந்த
..13..
மாதிரி வாய்ப்பு எல்லாருக்கும் சுலபத்தில் கிடைக்காது. இதில் நமக்கு எந்த விதமான கஷ்டமும் இல்லை. எல்லாம் கம்பெனியே கவனித்துக் கொள்ளும். நாமிருவரும் ஓராண்டு காலம், சந்தோஷமாக வெளி நாட்டில் இருக்கலாம், சுற்றிப் பார்க்கலாம். நம்முடன் சந்தோஷும் சந்தோஷமாக இருப்பான்” எனச் சொல்லி தன்னுடைய முடிவையும் சொல்லி விட்டான்.
அவனுடைய சந்தோஷத்தில் வாசுகி பங்கு கொள்ளவில்லை. மாறாக, தன்னிடம் முன்பே சொல்லாமல், அவனாக இந்த மாதிரி ஒரு முடிவு எடுத்தது சரியில்லை எனவும், இப்பத்தான் தனக்கு நல்ல சந்தர்ப்பங்கள் வருகிறது எனவும், இப்படி இருக்கும் போது, திடீரென்று பார்த்திபனுடன் தான் வெளி நாடு வரமுடியாது. அவளை நம்பித்தான், மோகன் நிறைய நிகழ்ச்சிகளில் ஒப்பந்தம் செய்திருக்கிறான். அவர்களுடைய குழுவை இப்பத்தான், நிறைய திரைப் பட இயக்குனர்கள் தெரிந்து கொண்டு, அவர்களின் நிகழ்ச்சிகளைப் பார்க்க வருகிறார்கள். அப்படி வருகிறவர்கள் தன்னுடைய குரலில் இனிமையும், பாடல்களை உணர்ச்சி பூர்வமாக பாடுவதைப் பார்த்தால், கட்டாயம் தன்னையும் திரைப் பட பின்னனி பாடகியாக்குவார்கள் எனவும் சொல்லி, அவனை இப்போது கானடா போகவேண்டாம் எனவும் தீர்மானமாகச் சொன்னாள். தன்னை முழுவதுமாக நம்பி இருக்கும் மோகனை தவிர்க்க முடியாது. அதனால் தன்னால் இப்போ பார்த்திபனுடன் வெளிநாட்டிற்குப் போக முடியாது. என்னுடைய எதிர்காலத்தில் என்னுடைய கனவுகள் கூடி வரும்போது, தான் விலகிவிட்டால், திரும்பவும் தனக்கு அப்படி ஒர் சந்தர்ப்பம் வரரது. நாளைக்கு இது பற்றி, மோகனுடன் பேசி ஒரு முடிவுக்கு வரலாம் என எண்ணிக் கொண்டே படுத்தாள்.
பார்த்திபனுக்கு வாசுகியிடமிருந்து எந்த விதமான சந்தோஷமும் பாராட்டும் கிடைக்கவில்லை. மாறாக, தன்னைக் கலந்து பேசாது,தானாகவே குடும்பத்துடன் ஒரு வருட காலம் வெளிநாடு போக சம்மதம் தெரிவித்ததையும் அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எப்படியாவது பார்த்திபனை வெளி நாடு போகாமல்தடுக்க முடியுமா என்றுதான் அவள் மனம் யோசித்தது.
..14..
மறு நாள் காலையில் பார்த்திபனைப் பார்க்க வாசுகியின் பெற்றோர் வந்தார்கள். அவர்களுக்கும் பார்த்திபன் கானடா பயிற்சிக்கு தேர்ந்தெடுத்து, கானடா போகும் விஷயம் தெரிந்து, மாப்பிள்ளையை பாராட்ட வந்தார்கள். அப்போதுதான் வாசுகி பார்த்திபனுடன் அவன் வெளி நாடு போவதில் தனக்கு ஒப்புதல் இல்லை எனவும், தன்னுடைய கனவாக் இருக்கும் திரைப்படப்பின்னனி பாடகி ஆவதற்கு சந்தர்ப்பங்கள் கூடி வரும்போது, தன்னால் எல்லவற்றையும் விட்டுவிட்டு அவனுடன் வரமுடியாதென்றும் உறுதியாகச் சொல்லிக் கொண்டிருந்தாள். அப்போ வந்தவர்களும், அவளிடம் “வாசுகி, நீ என்ன புத்தியுடன்தான் பேசுகிறாயா? மாப்பிள்ளைக்கு எப்படிப்பட்ட ஒரு கௌரவம் அவர்கள் கம்பெனியில் கொடுத்திருக்கிறார்கள் என்பதாவது உனக்குத் தெரிகிறதா. இந்த வாய்ப்பு, சும்மா கிடைக்கவில்லை. மாப்பிள்ளையின் நேர்மை, திறமை, கம்பெனியில் அவருக்கு இருக்கும் ஆர்வம், அவருடைய புத்திகூர்மை, நேர்முகதர்வில் அவர் காட்டிய ஆர்வம், திடமான முடிவுகள், அவரின் தொலைநோக்குப் பார்வை எல்லாமே அவர்களுக்கு மிகவும் திருப்தியாக இருந்த்தால்தான், அவர்களுக்கு உலகில் இருக்கும் அத்தனைப் பிரிவுகளில்இருக்கும் திறமையானவர்களை எல்லாம், பலவிதமான சோதனைகளுக்குப்பின், மாப்பிள்ளையை இந்தியா நாட்டில் சார்பில் தேர்வு செய்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கும், அவரை நீ பாராட்டாது, அவருடன் இனைந்து வெளிநாட்டிற்குப் போகத் துடிக்காமல், என்னவோ உன்னுடைய கனவு எனச் சொல்லி, அவரையும் போக்க்கூடாதென் று சொல்கிறாயே? உன்னைப்போல் ஒரு புத்தி கெட்டப் பெண்ணை நான் எங்கும் பார்த்த்தில்லை. ஒரு பெண்ணிற்கு அழகு, கணவனுடன் வாழவதுதான். அதை விட்டு, அவரையும் வெளிநாட்டில் பயிற்சிக்குப் போக வேண்டாமென தடுக்கும் உன் எண்ணம் சரியா? வேண்டாம், எங்களின் பேச்சைக் கேள். இத்தனைநாள்தான் யாருடைய புத்திமதியையும், கேளாமல், உன்னிஷ்டப்படியே இருந்தாய். இனியும் அப்படி இருக்காதே. இந்த வயதில், உன்னைப் போல் ஒரு வாய்ப்புக் கிடைக்காதா என எத்தனை பெண்கள் ஏங்குவார்கள் தெரியுமா? போறும் நீ மேடையில் பாடியது. எல்லாவற்றையும் மூட்டைக்கட்டி விட்டு, உன் எதிர்காலம் சீராக, சிறப்பாக இருக்க என்ன வழி என புரிந்து நடந்து கொள்.
..15..
எனப் பலவாறாகப் புத்திசொன்ன, தாயாரைப் பார்த்து “நான் உங்களிடம் எதும் யோசனை கேட்டேனா? எனக்குத் தெரியாமல், இவர் எப்படி தன்னுடைய கப்;பெனியில் வெளிநாட்டுப் பயிற்சிக்குப் போக சம்மதம் கொடுத்தார். என்னுடைய ஆசை என்ன எனத் தெரிந்தும், இப்படி ஒரு முடிவு எடுத்துவிட்டு, என்னையும் தன்னுடன் வரும்படிச் சொல்கிறாரே? சரியா. என்னுடைய சௌகரியங்கள் என்ன என்பதை இவர் யோசித்தாரா? இப்பத்தான், நான் மோகனுடன் நிறைய கச்சேரிகள் செய்து வருகிறேன். இப்பத்தான் மக்களிடைய என்னுடைய பெயரும் பரவி வருகிறது. எங்களுடைய நிகழ்ச்சிகளுக்கு நிறைய எதிர்பார்ப்பும் ஏற்படுகிறது. மோகனும் இப்பத்தான் நிறைய நிகழ்ச்சிகள வெளி ஊர்களில் நடத்தவும் ஒப்புக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில், நான் திடீரென்று அவருடைய குழுவில் இருந்து விலகி, வெளியூருக்குச் சென்றால், அது அவருக்கு எத்தனை சிரமம்,ஏமாற்றம் கொடுக்கும் தெரியுமா? என்னால் எல்லாருடைய எதிர்காலக்கனவுகளுக் சிதைந்து போகும். நான் அதற்குக் காரணாமாக இருக்க மாட்டேன். நான் இப்பத்தான் மோகனுடன் பேசினேன். அவன் என்ன சொன்னான் தெரியுமா “என்ன நீ திடீரென்று ஒரு வருடகாலத்திற்கு வெளீநாட்டுக்கு போகப் போகிறேன் எனச் சொன்னால், உன்னை நம்பி நான் இங்கே எத்தனை நிகழ்ச்சிகளுக்கு முன்பணம், வாங்கித் தேதிகளையும் ஒப்புக் கொண்டிருக்கிறேன். இப்போ அதெல்லாம் என்னால் முடியாது என நான் பின்வாங்கினால், என்னுடைய பெயர் எவ்வளவு கெட்டுப் போகும் தெரியும? உன்னால், நான் மட்டும் மல்ல, என்னையும் என் குழுவையும் நம்பி இருக்கும், மற்ற பாடகர்களுக்கும் எத்தனை கஷ்டம் வரும் என்றாவது உனக்குப் தெரியுமா? என்னால் எந்தவிதமான நஷ்ட்த்தையும், என்னுடைய நேர்மைக்கு, புகழுக்கு பாதிப்பு வருவதையும் தாங்க முடியாது. என்னுடைன் நீ இரண்டு ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்து கையெழுத்து போட்டிருக்கிறாய். ஒப்பந்த்த்தை முறித்தால், அதனால் வரும் பின்விளைவுகளைப் பற்றி உனக்குத் தெரியாதா? உன்னுடைய கனவு கூடிவரும் நேரத்தில், நீ போவது தப்பு. என்ன ஒரு வருஷம் தானே,சந்தோஷும் சின்னக் குழந்தை. இப்ப, பார்த்திபன் மட்டும் போய்விட்டு, வரட்டும். நீ இங்கேயே இருந்து, உன்னுடைய திறமையை வளர்த்துக் கொள். உன்னால் ஒரு வருடம் தனியாக இருக்க முடியாதா?எனவும் கேட்டான்.
..16..
நானும் நன்றாக யோசித்து விட்டேன். ஒருவருட காலம், நாங்கள் பிரிந்து இருப்பது ஒரு கஷ்டமும் இல்லை. எப்படி அவருடைய எதிர்காலம் அவருக்கு முக்கியமோ, அப்படித்தான் என்னுடைய ஆசைகளும். அவரால், தனியாக இருக்க முடியாதென்றால், தன்னுடைய பயிற்சியை மறுத்து விட்டு, இப்படி இருக்கும் அதே பதவியில் இருக்கட்டுமே. நான் இப்போ அவருடன் போக மாட்டேன்” எனத் தீர்மானமாகச் சொன்னதும், பார்த்திபனுக்கும் கோபம் வந்தது.
“நான் உன்னை என்னுடன் வா எனத்தான் கூப்பிட்டேன். உனக்கு இஷ்டமில்லை என்றால் அதனால் எனக்கு எந்த விதமான கஷ்டமும் இல்லை. என்னுடைய குழந்தையைப் பிரிந்து இருக்க வேண்டும் என்கிற வருத்தம் உண்டு. உன்னுடைய சொந்த ஆசைகளுக்காக, என்னுடைய வளர்ச்சியை தான் தியாகம் செய்ய மாட்டேன். உனக்காக இல்லாவிட்டாலும், என் சந்தோஷ் நன்றாக வளர, வசதியாக வாழ என்னுடைய நிலையை நான் திடமாக வைத்திருக்க வேண்டும். உன் இஷ்டப்படியே செய். நீ எடுக்கும் எந்த முடிவும் உன்னுடைய சொந்த புத்தியால் யோசித்து எடுக்கவில்லை. எல்லாம் மோகனின் ஆலோசனைதான். அவன் மனதில் என்ன கள்ளம் இருக்கு என்பது உனக்குத் தெரியாது. நாள் போகப் போக நீயே புரிந்து கொள்ளுவாய். அப்போ உனக்கு உதவியாக என்னுடைய கரம் ஒரு நாளும் வராது. இப்பக்கூட ஏதோ ஒப்பந்தம் எனச் சொல்கிறாயே, அதில் நீ கையெழுத்துப் போட்டது கூட எனக்கு இந்த நிமிஷம் வரைத் தெரியாது. அதில் என்னென்ன கண்டிஷன்ஸ் உள்ளதோ அதுவும் உனக்குப் புரிந்து இருக்கா இல்லை மோகன் சொன்னவுடனே கண்ணை மூடிக் கொண்டு கையெழுத்துப் போட்டுக் கொடுத்தாயா எனவும் எனக்கு கவலையில்லை.
மாமா, மாமி இனிமேல் நீங்கள் இவளிடம் பேசி மரியாதை இழக்க வேண்டாம். நான் உங்களிடம் ஒரு விஷயம்தான் கேட்டுக் கொள்கிறேன். எந்தச் சூழ்நிலையிலும் நீங்கள் வாசுகியையும், சந்தோஷையும் தனியாக இருக்க விட வேண்டாம். தயவு செய்து நான் திரும்பி வரும் வரையில் நீங்களிருவரும்
17
இங்கேயே இந்த வீட்டிலேயே இருந்தால்தான் எனக்கு மனம் நிம்மதியாக இருக்கும். நானும் அதிக கவலையின்றி என்னுடைய பயிற்சியை நல்லபடியாக முடித்துக் கொண்டு வருவேன்” என அவர்களிடம் கேட்க, அவர்களூம் :மாப்பிள்ளை. எங்களுக்கும் வாசுகி விஷயத்தில் அக்கறை உண்டு, இப்போ அவள் எதுவும் புரியாது, ஏதோ ஒரு மயக்கத்தில் இருக்கிறாள். நாங்கள் இருவருமே நீங்கள் வந்து அவர்களுடன் சேரும் வரை, இங்கேயே இருப்போம். கவலைப் படாதீர்கள்” எனச் சொல்லி விட்டு, வீடு திரும்பினார்கள்.
பார்த்திபன் தன்னுடைய பயிற்சிக்குப் போனான். அவனிடம் சொல்லியபடியே வாசுகியின் பெற்றோரும் அங்கேயே இருந்தார்கள். வாசுகியும் சந்தோஷைப் பற்றி அதிகம் கவலைப் படாமல், தன்னுடைய விருப்பப்படியே மோகனுடன் சேர்ந்து நிகழ்ச்சிகளுக்குச் சென்று வந்தாள். ஆரம்பத்தில் எந்த குழப்பமும் இல்லை. ஒரு சமயம் நிகழ்ச்சி முடிந்து வாசுகி வீடு திரும்ப அதிக நேரம் ஆகியது. வாசுகியின் அம்மாவிற்கு கவலையும், கோபமும் அதிகமாகியது. இரவு 12 மணிக்கு கிட்டத்தில், வாசுகி, மோகனுடன் காரில் வந்தாள். அவளுடன் வந்தவன், அம்மாவிடம் “அம்மா, இன்று எங்களின் நிகழ்ச்சியில் தலைமை தாங்குபவர் வருவதற்கு நேரம் ஆனதால், நிகழ்ச்சியை நான் குறிப்பிட்ட நேரத்தில் துவங்க முடியவில்லை. இரசிகர்களை ஏமாற்ற நாங்கள் விரும்பாததால், நேரம் ஆனாளும நாங்கள் அவர்களின் விருப்பப்படியே நிறைய பாடல்களைப் பாடி, எல்லாம் முடிய இத்தனை நேரம் ஆகிவிட்டது. நேரம் ஆனதால், நீங்கள் கவலைப் பட வேண்டாம். எத்தனை நேரமானாலும், நானே என்னுடைய காரில் வாசுகியை கொண்டு வந்து உங்கள் விட்டில் விட்டுவிடுவேன்” எனச் சொல்லி விட்டுச் சென்றான். வாசுகியின் செயல் அவளுடைய பெற்றோருக்கு சம்மதமில்லை என்றாலும், இரவு அதிக நேரம் கழித்து வந்தவளிடம், வாதாட மனமில்லாமல், மௌனமாக இருந்தார்கள்.
மறுநாள் காலையிலேயே வாசுகி கிளம்புவதற்குத் தயாராக இருந்தாள். அதைக் கவனித்த அவளுடைய அம்மா “எங்கே இத்தனைச் சீக்கிரம் கிளம்புகிறாய்? ஏதும் சினேகிதி வீட்டிற்குப் போகப்போகிறாயா? “எனக் கேட்க, அவளிடம் “இல்லை. இன்று நாங்கள் ஒரு நிகழ்ச்சிக்காக சேலம் வரைப் போகப்
18
போகிறோம். மாலையில்தான் நிகழ்ச்சி ஒரு கல்லூரியில். ஆனால், எல்லாரும் சேர்ந்து ஒரு வண்டி ஏற்பாடு செய்து கொண்டு போக வேண்டுமென்பதால்,
சீக்கிரமே கிளம்பி விட்டேன். இரவு எத்தனை நேரமானாலும், வந்து விடுவேன். நீங்கள் கவலைப் படாமல் இருங்கள். நான் மட்டும் தனியாகப் போகவில்லை. எல்லாருடனும் சேர்ந்து போவதால், நீங்கள் தைரியமாக இருங்கள்” எனச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, மோகன் மட்டும் தனியாக காரில் வந்தான். அவனைப் பார்த்த வாசுகி, “என்ன மோகன் மற்றவர்கள் எல்லாம் எங்கே? நீ மட்டும் தனியாக வருகிறாயா? நீ ஏற்பாடு செய்த வண்டி என்னாவாயிற்று?எனக் கேட்டாள்.
அவளுக்கு அவன் மிகவும் சாதாரணமாக “ வாசுகி, வண்டியில் மற்றவர்களை எல்லாம் அனுப்பி விட்டேன். நீயும் நானும் மட்டும் சவுகரியமாக செல்லனும்னுதான், என்னுடைய காரை எடுத்து வந்தேன். வண்டியில் எல்லாருடனும் சேர்ந்து போனால், உன்னால் நிம்மதியாக இருக்க முடியாது. சத்தமும் கூப்பாடும் அதிகம் இருக்கும். அப்படிப் போனால், எனக்குத் தலைவலி வந்து விடும். அப்புறம் நிகழ்ச்சியில் கவனம் செலுத்த முடியாது. அதனால்தான் நான் அவர்களிடம் சொல்லி, நான் உன்னுடன் வருவதாக்ச் சொல்லி அனுப்பி விட்டேன். வா, நாமிருவரும் சௌகரியமாகப் போகலாம்” எனச் சொல்ல, வாசுகியின் தகப்பனாருக்கு மிகவும் கோபம் வந்தது அவர் மோகனிடம் “என்னப்பா மோகன், நீ செய்வது சரியா? குழுவில் இருப்பவர்கள் எல்லாரும் சேர்ந்து போவதுதான் முறை. அப்படியிருக்க, நீங்களிருவர் மட்டும் காரில் தனியாகப் போவது சரியல்ல. வாசுகி மற்றவருடைய மனைவி, அவள் உன்னுடன் படித்த சினேகிதி என்றாலும், இப்போ அவளுக்கு என ஒரு அந்தஸ்து, மரியாதை இருக்கு. அப்படியே, நீயும் அவளும் போவதாக முடிவு செய்யும் முன், என்னுடன் ஒரு வார்த்தை பேசி, என்னுடைய சம்மதத்தை நீங்கள் கேட்கவேண்டாமா?நான் அவளுடைய அப்பா. இப்போ, மாப்பிள்ளை என்னுடைய பொறுப்பில்தான் அவளை விட்டு விட்டுச் சென்றிருக்கிறார். அப்படியிருக்க, இன்று நீங்கள் இருவரும் தனியாகச் சென்றதைப் பற்றி அவர் திரும்பி வந்து
19
என்னிடம் “எப்படி நீங்கள் வாசுகியை மோகனுடன் தனியாக அனுப்பலாம்” எனக் கேட்டால், நான் என்ன பதில் சொல்வேன். வேண்டாம் உன்னுடைய வண்டியில் வருபவர்கள் இன்னும் கிளம்பி இருக்கமாட்டர்கள். அப்படியே கிளம்பி இருந்தாலும் நீ இப்பவே அவர்களுக்குப் போன் பண்ணி, அவர்களை வழியில் ஒரு இடத்தில் காத்திருக்கச் சொல். வழியில் அவர்களுடன் வாசுகியை அனுப்பிவிட்டு, நீ மட்டும் உன் சௌகரியப்படியே போ? எனத் தீர்மானமாகச் சொன்னார். அதைக் கேட்ட மோகன் வாசுகியிடம் “என்ன வாசுகி உன் அப்பா இப்படிப் பேசுகிறார். நான் என்ன இன்றுதான் உன்னுடன் பழகுகிறேனா? நாமிருவரும் சின்ன வயதிலிருந்தே ஒரே பள்ளியிலும், பிறகு ஒரே காலேஜிலும் படித்தவர்கள் தானே. அவர்களுக்குத் தெரியாதா நீ என்னுடன் எத்தனை இடங்களுக்குப் பாட வந்திருக்கிறாயென. இப்போ புதிதாக, நீ என்னுடன் வருவதற்குத் தடை போடுகிறாரே? இது என்ன அந்தக் காலமா? நீ இன்னும் எல்.கே.ஜி குழந்தையா? நீயும் படித்தவள் உனக்கு ஒரு சுதந்திரம் இல்லையா? அவர்கள் உன்னனைப் பற்றி இப்படி நினப்பது எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. நான் தான் நேற்றே உன்னிடம் சொன்னேனே, நாமிருவரும் தனியாகப் போகலாம் என. அப்போ நீ ஒன்றும் சொல்லாமல், நான் வந்தபின் உன் தகப்பனார் இப்படிப்பேசினால் என்ன செய்ய முடியும். என்னுடன் நீ வருவதற்குச் சம்மதம் சொன்னதால்தானே, நான் காலையிலேயே அந்த வண்டியை அனுப்பி விட்டு வந்தேன். இப்போ அவர்களிடம் போல் வழியில் காத்திருக்கச் சொன்னால், அவர்கள் என்னைப் பற்றி எத்தனை கேவலமாக நினப்பார்கள்.” எனக் கோபமாக கேட்டான்.
மோகனின் கோபத்தைப் பார்த்த வாசுகிக்கு ஒரு பயமும் ஏற்பட்டது. அவளின் முகத்தில் இருக்கும் கலக்கத்தைப் பார்த்தவன் மேலும் அவளிடம் “இப்ப ஒன்றும் கெட்டு விடவில்லை. முடிவாகச் சொல் என்னுடன் இசை நிகழ்ச்சிக்கு வருகிறாயா இல்லையா என. அப்படி உன் அப்பாவின் சம்மதம் இல்லாததால் நீ வரவில்லை என்றால், நான் இனிமேல் என்னுடைய குழுவில் இருக்கும் தாரா,சந்திரா போன்றவர்களைத் தயார் படுத்தில் கொள்வேன். என்ன இன்று திடீரென்று நீ இல்லை என்பதை நிகழ்ச்சியில் தெரிந்தால், கொஞ்சம்
20
ஏமாற்றமாகத்தான் இருக்கும். அதற்கெல்லாம் நான் காரணம் சொல்லி சமாளித்துக் கொள்வேன். இன்று நீ வரவேண்டாம். என்னுடைய எல்லா ஏற்பாடுகளும் வீணாகிவிட்டது.” என வருத்தத்துடனும், சிறிது கோபத்துடனும் சொன்னவனைப் பார்த்து வாசுகி :பிளீஸ் மோகன் கோபம் வேண்டாம். நான்
அப்பாவிடம் சமாதானம் சொல்லிக் கொள்கிறேன். நாமிருவரும் இப்பவே போகலாம். ஏற்கெனவே நேரம் ஆகி விட்டது. நீ காரில் இரு வருகிறேன்: எனச் சொல்லிவிட்டு, அப்பாவை நோக்கி “அப்பா, நீங்களும் அம்மாவும் இன்னமும் என்னைச் சிறு பெண் என்றுதானே நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். என்னுடைய வயதில் இருக்கும் பெண்கள் எல்லாரும் எத்தனை சுதந்திரமாக இருக்கிறார்கள் தெரியுமா? என்னை விட சின்னவர்கள் எல்லாரும், படிப்பிற்காக, வேலைக்காக என வீட்டை விட்டு வெளி நாட்டுக்குக்கூட போகிறார்கள். நீங்கள் இருவரும் என்னை ஒரே பெண் என்பதால், வெளியூர் காலேஜில் கூட சேர்த்தாமல் வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்துக் கொண்டிருந்தீர்கள். திருமணமானபின், வந்தவோ உங்களை விட பத்தாம்பசலி. அவருடை அதிகாரம்தான் செல்ல வேண்டும்., மனைவியிடம் எந்தவிதமான விஷயத்திலும் கலந்து முடிவு எடுக்க அவருடைய தன்மானம் இடம் தராது. தான் எடுத்த முடிவுக்குத்தான் நான் வரவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார். நான் மறுத்த போதெல்லாம், ஏதொ என்னுடைய அறிவுக்கு எதுவும் தெரியாது, என்னால்சுயமாக முடிவு செய்ய முடியாது என நினைத்து, என்னுடைய எல்லா ஆசைகளுக்குமே தடை போடுவார். என்னுடைய ஒவ்வோரு ஆசைகளையும் நான் அவருடன் பெரிய போராட்டம் நடத்தின பிறகுதான், அவர் என்னுடைய இஷ்டப்படியே இருக்க விடுவார். எனக்கு சுதந்திரமான வாழ்வுதான் வேண்டும். சதா மற்றவர்களின் கட்டுப் பாட்டில் நான் இருக்க விரும்பவில்லை. என்னுடைய ஆசைகளுக்குத்தான் நான் முக்கியத்துவம் கொடுப்பேன். மற்றவர்கள் என்னைப்பற்றி என்ன நினைத்தாலும், எனக்கு கவலையில்லை. இந்த அவசர உலகத்தில், அவரவர்கள் வேலைகளைப் பார்த்துக் கொள்ளவே நேரம் இல்லாமல் இருக்கும் போது, மற்றவர்களின் வாழ்க்கையில் என்ன செய்கிறார்கள் என்பதை பார்க்க யாருக்கு நேரம் இருக்கும். எல்லாம்
21
நீங்களாகவே கற்பனை பண்ணிக் கொண்டு, என்னை தடுக்கிறீர்கள். நான் மோகனுடன் போவதில் எனக்கு ஒன்றும் தப்பாகத் தெரியவில்லை. ஒரு நல்ல நண்பருடன் செல்வது என்ன தவறு. தயவு செய்து, நீங்கள் என்னை அதிகம் கட்டுப் படுத்தாமல், என்னுடைய இஷடப்படியே இருக்க விடுங்கள். அப்படி
இருக்கமுடியாதென்றால், நீங்கள் தாராளமாக உங்களுடைய விட்டிற்கே போகலாம். நான் ஒன்றும் உங்களை என்னுடன் இருக்க வாருங்கள் எனக் கூப்பிடவில்லை. எல்லாம் உங்களின் அருமை மாப்பிள்ளையின் யோசனை. அதனால் நீங்கள் வந்தீர்கள். நானும் உங்களை ஒன்றும் கஷ்டப்படுத்த வேண்டாமென இருந்தேன். இனியும் ஒருமுறை என்னுடைய சொந்த விஷயத்தில் நீங்களோ, அம்மாவோ தலையிட்டால், நான் இந்த வீட்டை விட்டே சந்தோஷுடன் வேறு இடம் பார்த்துக் கொண்டு போய் விடுவேன். உங்களின் மாப்பிள்ளை வீட்டில் நீங்கள் இருங்கள்”எனச் சொல்லிவிட்டு, கோபமாக, குழந்தையைக் கூட பார்க்காமல், வெளியே சென்று காரில் ஏறி விட்டாள்.
வாசுகியின் அப்பாவிற்கு இப்போ எழுபது வயது முடிந்து விட்டது. அவர் 40 வருடத்திற்கு மேலாக, மத்திய அரசில் ஒரு துறையின் முதன்மை அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். அவருடைய பணிக்காலத்தில், அவர் ஒரு நாள் கூட மற்றவர்களுடைய குற்றச்சாட்டுக்கோ, கோபத்திற்கோ ஆளானதில்லை. மாறாக, அலுவலகத்தில் இருக்கும் அவருக்குக் கீழ் பணிபுரியும் அத்தனை பேரும் அவருடைய கோபத்திற்கும், கண்டிப்புக்கும் பயந்து வேலை செய்தார்கள். அப்படியிருக்க தான் பெற்ற பெண்ணாயிருந்தாலும், வாசுகி அவரிடம் அப்படி மரியாதையின்றி பேசியதைப் பார்த்த, வாசுகியின் அம்மாவுக்கு அதிகம் கோபம் வந்தது. கணவரிடம் “உங்களுக்கு என்ன தலையெழுத்து? இந்தப் புத்தி கெட்ட பெண்ணிடம் வார்த்தை வாங்கிக் கட்டிக் கொள்ள. நமக்கு என ஒரு மரியாதை இல்லையா? இனிமேலும் நாம் இங்கு இருக்கக் கூடாது. மாப்பிள்ளையிடம் விவரத்தைச் சொல்லி விட்டு, நாம் இன்றே நம்முடைய வீட்டிற்குப் போகலாம். உங்களுக்கு ஒரு அந்தஸ்து உண்டு. நமக்கு வேண்டிய பணம், வீடு, சொத்து என எல்லாம் இருக்கு. என்னை அவள் எத்தனையோ தடவைகள் கோபமாக, மரியாதையின்றி உதாசீனப்படுத்தி பேசி
இருக்கிறாள். அப்பவெல்லாம், அவள் நம்முடைய பெண்தானே என நினைத்து நான் பாராட்டவில்லை. ஆனால், இன்று உங்களிடமே அவள் அ;ப்படி நடந்து
கொண்டபின், என்னால் பொறுக்க முடியாது. உங்களை யார் மரியாதை இன்றி பேசினாலும், அவர்களை நான் என்றுமே மன்னிக்க மாட்டேன். நாம் முதலில் இந்த வீட்டை விட்டுப் போக வேண்டும். இன்று ஒரு இரவு மட்டும் நாமிருவரும் குழந்தைக்காக் இருந்து விட்டு, நாளைக் காலையில் முதலில் கிளம்பி விட வேண்டும்: எனச் சொல்லி விட்டு, வருத்தத்துடன், குழந்தையை எடுத்துக் கொண்டு போனாள்.
மறுநாள் காலையில் கூடத்தில் எடுத்து வைக்கப்பட்ட பெட்டிகள், அப்பாவின் புஸ்தகங்களைக் கண்டாள் வாசுகி. அதைப் பார்த்தவுடன், அப்பாவிற்கும் அம்மாவிற்கும் தன் மீது அதிகக் கோபம் போல இருக்கு, அதனால்தான் அவர்கள் கிளம்பத் தயாராகி விட்டார்கள் எனவும் புரிந்து கொண்டாள். அவளுள் ஒரு மனம், தான் செய்வது பேசுவது எதுவும் சரியில்லை. அவர்களின் மனம் நோக பேசியது மிகப் பெரிய குற்றமாகும். அவர்களிடம், மன்னிப்புக் கேட்பதுதான் சரி.எனச் சொன்னாலும், மற்றோரு மனம் தன்னுடைய வயதைக் கூட யோசிக்காமல், மோகனின் எதிரில் தன்னை ஒரு சின்னப் பெண் போல நினைத்து, அவர்களுடைய அனுமதி இல்லாமல், நான் என் நண்பர்களுடன் பழகுவோ, வெளியில் போவதொ குற்றமாக நினைத்தது அவளால் தாங்க முடியவில்லி. நான் கட்டுப்பாடு இல்லாத பெண்ணா? நண்பர்களுடன் நாகரீகமாக பழகத்தெரியாதா? அவர்களுடைய கோபம் எல்லாம் கொஞ்ச நேரம்தான் இருக்கும். சமாதானமாகி விடுவார்கள் எனவும் நினைத்துக் கொண்டு அவர்களிடம் எதுவும் பேசாமல் காலை வேலைகளைப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
கூடத்திலிருந்து வாசுகியின் அப்பா அவளைக் கூப்பிட்டார். “வாசுகி, நானும் அம்மாவும் எங்களுடைய வீட்டிற்குப் போகிறோம். இனிமேல் நாங்கள் உன்னுடைய எந்த விஷயத்திலும் தலையிட மாட்டோம். மாப்பிள்ளையிடம் நாங்கள் சொல்லி விட்டோம். இனிமேல் நீ எப்படி உன் குழந்தையைப் பார்த்துப்பாயோ, அதைப் பற்றியெல்லாம் எங்களுக்கு எந்தக் கவலையும்
23
இல்லை. உன் குழந்தை, உன் வீடு, உன் வாழ்க்கை இனி உன்னிஷ்டம்போல் இருந்து கொள்.”எனச் சொல்லி விட்டு, வீட்டிலிருந்து தன்னுடைய காரைக்
கொண்டு வந்த டிரைவருடன் வெளியேச் சென்று விட்டார்கள். வீட்டிலிருந்து இருவரும் போனதும், ஒரு நிமிஷம் வாசுகி தடுமாறினாள். இனிமேல் நாம் எப்படித் தனியாக இருப்பது அதுவும் ஒரு சின்னக் குழந்தையை வைத்துக்
இனிமேல் மோகனுடன் வெளியே போய் நிகழ்ச்சிகளை முடித்து விட்டு, வீட்டிற்கு வரும்வரை குழந்தையை யார் பாதுகாப்பில் விடுவது எனவும் கலங்கினாள். அப்போது மோகன் வந்தான். வந்தவனிடம் தன்னுடைய பெற்றோர் அவளிடம் கோபித்துக் கொண்டு, அவர்களுடைய வீட்டிற்கேச் சென்று விட்டதையும். இனிமேல் தன்னுடைய குழந்தையை எப்படித் தனியாக வைத்துக் கொண்டு இருப்பேன் எனவும் கவலையுடன் சொன்னாள். அதற்கு “என்ன நீ இந்த சின்ன விஷயத்திற்குப் போய் இப்படி கலங்குகிறாய்? வீட்டோடு ஒரு வேலைக்காரியை வைத்துக் கொண்டால், அவளையே வீட்டையும், குழந்தையையும் பார்த்துக் கொள்ளச் சொல்லலாம். அவளுக்கும் இருக்க இடமும், துணியும், உணவும் கொடுத்தால் போதும் உன் கூடவே நாள் பூராவும் இருப்பாள். உனக்கும் வீட்டோடு ஒரு துனையும் இருக்கும். எனக்குத் தெரிந்த நண்பரிகளின் மூலம் இன்றே உனக்கு ஒருவரை அனுப்பி வைக்கிறேன். அவளுக்கு என்ன சம்பளம் என்பதையும் நானே பேசி விடுகிறேன். நீ எந்தக் கவலையும் பட வேண்டாம்.: எனச் சொல்லி விட்டு, உடனேயே ஒரு சினேகிதியிடம் சொல்லி, அன்று மாலைக்குள் ஒருவரை ஏற்பாடு பண்ணிக் கொடுக்கவும் சொல்லி வைத்தான். மோகனின் உடனடியான உதவியைப் பார்த்து வாசுகிக்கும் மனதில் தைரியம் வந்தது. என்ன ஒருவரும் இல்லாவிட்டாலும், தன்னால் குழந்தை சந்தோஷைப் பார்த்து, வளர்க்க முடியாதா என எண்ணியதை நினைத்து வெட்கப்பட்டாள். அவளுடன் சிறுது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு, மாலையில் திரும்பவும் வருவதாகச் சொல்லி சென்றான். அவன் சொன்னபடியே, அன்று பிற்பகலிலேயே ஒரு பெண் தன்னுடன் ஒரு நடுத்தர வயது பெண்மனியைக் கூட்டிக் கொண்டு வந்து, மோகன் சொன்னபடியே நான் இவர்களை ஏற்பாடு பண்ணி விட்டேன். நீ
24
இவர்களுக்கு இங்கு என்ன வேலை என்பதை மட்டும் சொல் போறும். எனவும் சொல்லிச் சென்றாள். வாசுகியும் அவளுடைய பெயர், முகவரி எல்லாம் கேட்டுக் கொண்டு, தன்னுடைய வீட்டில் செய்ய வேண்டிய வேலைகளைச் சொல்லி, அவளையும் தன்னுடனே தங்க வைத்துக் கொள்ளவும், தேவையான வசதிகளையும் செய்து கொடுக்கவும் செய்தாள். வந்தவளுக்கும் வீடும், மற்ற விஷயங்களும் திருப்தியாக இருந்தததால், உடனடியாக வேலையைக் கவனித்துக் கொள்ள ஆரம்பித்தாள்.
வீட்டோடு வேலைக்கு ஒருவரை வைத்துக் கொண்டதால், வாசுகிக்கும் தன்னுடைய வேலைகளை நிதானமாக கவனிக்க முடிந்தது. குழந்தையைப் பற்றிய கவலை இல்லாது, அவளும் அடிக்கடி மோகனுடன் இசை நிகழ்ச்சிகளில் கது கொண்டாள். குழந்தையோ தன்னுடைய பாட்டியின் அனைப்பைத் தேடி, தேடி, உடலளவில் இளைத்தான். சரியாக சாப்பிடுவதும் இல்லை, சரியாக உறங்கவும் இல்லை. வேலைக்காரி நேரம் தவறாமல் குழந்தைக்கு ஆகாரம் கொடுத்தாலும், பாசத்தைக் காட்ட வில்லை. கடமைக்காக நன்றாகக் கவனித்துக் கொண்டாள். துறுதுறுப்பாக விளையாடிக் கொண்டிருந்த குழந்தை சோர்ந்து இருப்பதையும், சதா ஒரு ஏக்கத்துடன் இருப்பதையும், தாயான வாசுகியின் கண்களுக்குத் தெரியவில்லை. அவளைப் பொறுத்தவரை, குழந்தை வேளைக்கு சாப்பிட்டால் போதும், எதோ கொஞ்ச நேரம் தன்னுடன் விளையாடினால் போறும் என இருந்து விட்டாள். சின்னக் குழந்தையுடன் அதிக நேரம் செலவழித்து, அவனுடன் பேச்சுக் கொடுத்து, அவனுக்குப் பேசவும் பயிற்சி கொடுப்பதும் தாயின் கடமை. அதையும் வாசுகி மறந்து விட்டாள். விளைவு, குழந்தை வரண்ட, நீரற்ற நிலம் போல் ஒளி மங்கி வளரத் தொடங்கினான். அதன் விளைவாக, அவனுடைய ஆரோக்கியமும் பாதித்தது. அடிக்கடி அவனுக்கு சளி, கபம், சுரம், அஜீரணம் என ஒன்று மாற்றி ஒன்று வந்து படுத்தியது. வேலைக்காரியும் வாசுகியின் உத்திரவுப்படியே, பக்கத்தில் இருக்கும் ஒரு குழந்தைகளைக் கவனிக்கும் டாக்டரிடம் அழைத்துச் சென்று மருந்து வாங்கிக் கொடுத்தாள். முதலில் சில தடவைகள். கொஞ்சம் கொஞ்சம் குணமாகிய உடல், நாளாவட்டத்தில் மருத்துக்கும் கட்டுப் படி வில்லை. மாற்றி மாற்றி மருந்து கொடுத்தும் பலனில்லை. ஒரு முறை டாக்டர்,
25
வேலைக்காரியிடம் அந்தக் குழந்தையின் தாயார் யார் என கேட்க, வேலைகாரியும் அந்தக் குழந்தையின் தாயார் இசை நிகழ்ச்சிகளில் பாடுபவர், வெளியே சென்று விடுவார் அதனால் குழந்தையையும், விட்டையும் கவனித்துக் கொள்ளுவது தாந்தான் எனவும் சொன்னாள். அப்போதுதான் குழந்தைக்குத் தாயின் பரிவோ, பாசமோ கிடையாதென்பதை டாக்டர் புரிந்து கொண்டார். அதனால், வேலைகாரியிடம் “நீங்கள் அடுத்த முறை குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்று எடுத்து, நீங்கள் மட்டும் வந்தால், நான் வைத்தியம் பார்க்க மாட்டேன். குழந்தையின் உடல் நிலையைப் பற்றி, விவரமாக அதனுடைய தாய்க்குச் சொல்ல வேண்டும். அதனால், நீங்கள் உங்கள் எஜமானியிடம் சொல்லி, இனி ஒரு முறை குழந்தைக்கு உடல் நிலை கெட்டால், அவர்களே நேரில் வரவேண்டும் என் நான் கட்டாயமாகச் சொன்னதாக் சொல்லி விடுங்கள்.” எனச் சொல்லி விட்டு, குழந்தைக்குத் தேவையான மருந்தை எழுதிக் கொடுத்து அனுப்பினார். வேலைகாரியும் வாசுகியிடம் டாக்டர் தன்னிடம் சொல்லியதைச் சொல்லி விட்டாள். அது பற்றி வாசுகி அதிகம் கவலைப் பட வில்லை. மாறாக வேலைக்காரியிடம், “சரி, அடுத்த முறை சந்தோஷிக்கு உடல் சரியில்லை என்றால், நானும் உங்கூட வருகிறேன். குழந்தைக்கு ஒன்றும் இருக்காது. கவலைப் பட வேண்டாம்:” என அவளுக்கும், தனக்குமாக சமாதானம் செய்து கொண்டாள்.
ஒரு வாரம் சந்தோஷ் சாதாரணமாக இருந்தான். திரும்பவும் அவனுக்குச் சளியும் ஜுரமும் வர, வேலைக்காரி வாசுகியிடம் “அம்மா, நீங்கள் இன்று சந்தோஷைக் தூக்கிக் கொண்டு டாக்டரிடம் போய் வாருங்கள். இனிமேல் நீங்கள் இல்லாமல் நான் போனால், டாக்டர் அவனைப் பார்க்க மாட்டார்” எனச் சொன்னவுடன், வாசுகியும் குழந்தையைத் தொட்டுப் பார்த்து ஜுரம் அதிகமாக இருப்பதை உணர்ந்தாள். அதனால், மோகனுக்குப் போன் பேசி விட்டு, வேலைகாரியுடன் டாக்டரைப் பார்க்கப் போனாள். டாக்டரின் கிளிக்கில் அவகளுக்கு முன்பே மூன்று பேர் காத்திருக்க, வாசுகியும் அமர்ந்திருந்தாள். வெளியே வந்த டாக்டர் சந்தோஷைப் பார்த்தவுடன் “என்னடா, மீண்டும் ஜுரம் வந்திருக்கா?” எனக் கேட்டுக் கொண்டே குழந்தையைப் பார்த்தார். சந்தோஷைத் தூக்கிக் கொண்டிருந்த வாசுகியைப் பார்த்தவர், :நீங்கள்தான் சந்தோஷின்
26
அம்மாவா?” எனக் கேட்டுக் கொண்டே, “ஒரு பத்து நிமிஷம் காத்திருங்கள். நான் உங்களைக் கூப்பிடுகிறேன்” எனச் சொல்லி விட்டுப் போனார்.
பத்து நிமிஷங்களில், டாக்டர் கூப்பிட்டவுடன் வாசுகி சந்தோஷை எடுத்துக் கொண்டு உள்ளே போனாள். கூடவே வேலைக்காரியும் சென்றாள். முதலில் குழந்தையைப் பார்க்காமல், வாசுகியிடம் “உங்களுக்கு உங்கள் குழந்தை முக்கியமில்லையா? அவனுக்கு என்ன நோய் தாக்கி இருக்கிறதென்றாவது உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் என்ன வேலை பார்க்கிறீர்கள், எங்கு பார்க்கிறீர்கள் எனபதெல்லாம் எனக்குக் கவலை இல்லை. என்னுடைய கவனம் குழந்தையின் ஆரோக்கியம்தான். இந்தக் குழந்தை பிறந்தபோது நன்றாகத்தான் இருந்தான். நாளடைவில் அவனுடைய உடல் நிலை சீர் குறைந்து வருகிறது. உங்களுக்கு அவனுடைய உடல் இளைத்துப் போவதும், அவன் அடிக்கடி சோர்வாக படுத்துக் கொண்டு விடுவதும் தெரியுமா? நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பிர்கள், உங்களுடைய குழந்தையை கவனித்துக் கொள்ள வீட்டோடு ஒரு வரை ஏற்பாடு பண்ணி விட்டால், உங்களின் கடமை முடிந்து விட்டதா? நீங்கள் ஏற்பாடு செய்தவர் குழந்தையை எவ்வளவுதான் நன்றாக கவனித்துக் கொண்டாலும், குழந்தைக்குத் தாயின் அரவனைப்பும், அன்பும், பரிவும், பாசமும் தேவை. அவையில்லாமல், வேளா வேளைக்கு ஆகாரம், மற்றபடி, நேரம் தவறாமல் தூங்க வைப்பது என இருந்தால் போதும் என இருக்கிறீர்கள். உங்களின் குழந்தைக்கு இப்போ பிரைமரி காமப்லெஃஸ் எனும் பாதிப்பு இருக்கிறது. இது இருக்கும் குழந்தைகளின் உடல் நாளாவட்டத்தில் சீர் கெட்டு, நாம் அதைக் கவனித்து மருந்து கொடுத்து, குழந்தையை சீராட்டாது போனால், அவனுடைய உடலில் மற்ற குழந்தைகளுக்கு இருக்கும் வளர்ச்சி இருக்காது. அதனால், அவனுடைய மூளைத் திறனும் பாதிக்கும். நீங்கள் உங்களின் குழந்தையுடன் எத்தனை நேரம் செலவிட முடியுமோ, அத்தனை நேரமும் செலவிடுங்கள். என்னைக் கேட்டால், உங்களுடைய நிலையில் நானிருந்தால், என் குழந்தைக்குப் பிந்தான் என்னுடைய தொழில் என இருப்பேன். உங்களுக்குத் தெரியுமா? நான் முதலில் அரசு மருத்துவராக
27
இருந்தேன். என்னுடைய குழந்தை பிறவிலிலேயே கேட்கும் திறன் பாதித்துப் பிறந்ததால், நான் என்னுடைய குழந்தையை என்னுடைய நேரடி பார்வையில் நாள் பூராவும் வைத்துக் கொள்வதற்காக, என்னுடைய அரசு வேலையை விட்டு வட்டேன். இப்போ என்னுடைய குழந்தை நல்ல முறையில் பாராமரித்ததால், அவனுடைய செவித்திறனும் ஓரளவுக்கு வளர்ந்து வந்து, ஒரு சின்ன அறுவை சிகிச்சைக்குப் பின் ஓரளவு கேட்கும் திறன் வந்துள்ளது.
இப்பவும்கூட அவனை நான் தனியாக அதிக நேரம் விட்டு விட்டு இருக்க முடியாது. எனக்குத்தான் அவனுடைய உணர்வுகள், பேச்சு எல்லாம் புரியும். அதனால், அவனை ஒரு ஸ்பெஷல் பள்ளியில் சேர்த்து இருக்கிறேன். அவன் பள்ளிக்குச் செல்லும் நேரம் மட்டும் நான் இங்கு வந்து பகுதி நேரமாக வேலை பார்க்கிறேன். இதெல்லாம் நான் ஏன் சொல்லுகிறேன் என உங்களுக்குப் புரிகிறதா? நம்முடைய முதல் கடமை நம்முடைய குடும்பம்தான். முக்கியமாக குழந்தைகள். அதிலும், இந்த மாதிரி குறைகளுடன் இருக்கும் குழந்தைகளைத்தான் அதிகம் கவனிக்க வேண்டும்.
சந்தோஷின் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி மிகவும் குறைவாக இருக்கிறது. அவனுக்கு குறைந்தது மூன்றாண்டுகளாவது தனிக் கவனம் கொண்டு பார்த்தால்தான், அவனுடைய உடலும், மனதளவிலும் பலம் வரும். அவனுடைய உடலில் வலுவில்லாததால், அவனுடைய செயல் திறனும், பார்ப்பவைகளையெல்லாம் புரிந்து கொள்ளும் திறனும் இல்லை. அதனால் நாம் தான் அவனுக்கு ஒவ்வோரு பொருளையும் காட்டி, பெயர், நிறம், எனச் சொல்லிப் புரிய வைக்க வேண்டும். நீங்கள் இன்று முதல் உங்களின் எல்லா வேலைகளையும் ஒதுக்கி வைத்து விட்டு, நாள் பூராவும் சந்தோஷைக் கவனித்துக் கொள்ள வேண்டும். அதுதான் ஒரு தாயின் கடமையும் உரிமையும் ஆகும்: எனச்
28
சொல்லி விட்டு, சந்தோஷிக்கு சில மருத்துவ பரிசோதனைகளைச் செய்யவும் எழுதிக் கொடுத்து விட்டு, அவளை அனுப்பினார்.
வீட்டிற்கு வந்தவளுக்கு என்ன செய்வது என ஒன்றும் தெரியவில்லை. ஒரு சமயம், தன்னுடைய அம்மாவையும், அப்பாவையும் திரும்ப தன்னுடன் அழைத்துக் கொண்டு வரலாமா? அல்லது டாக்டர் சொன்னபடியே, தன்னுடைய வேலைகளை எல்லாம் சிலகாலங்களுக்கு ஒதுக்கி வைத்து விட்டு, சந்தோஷை முழுநேரமும் கவனித்துக் கொண்டு இருக்கலாமா? என பலவிதமாக மனதிற்குள் நினைத்துக் கொண்டே இருந்தாள். அவளுடைய சுய கௌரவம் தன்னை நிராகரித்து விட்டுச் சென்ற பெற்றோரை அழைக்கவும் இடம் கொடுக்க வில்லை. அதே சமயம், தன்னுடைய நீண்ட நாள் கனவான திரை இசைப் பாடகி என மின்னும் காலம் தெருங்கி வரும்போது, இப்படி ஒரு சோதனை எனவும் கலங்கினாள். அந்த சமயம்தான் மோகன் அவளுடைய வீட்டிற்கு வந்தான். வரும்போதே மிகவும் சந்தோஷத்துடன் வந்தான். “வாசுகி, நம்முடைய நீண்ட நாள் கனவு பலிக்கும் நேரம் வந்து விட்டது. நம்முடைய தஞ்சாவூரூக்குச் சென்றது நல்ல பலன் அளித்து விட்டது. அன்று நம்முடைய நிகழ்ச்சிக்கு தலைமை தாங்க வந்த பிரபல திரை இசை பாட இயக்குனர் திரு காமேஸ்வரன் இன்று என்னுடன் போனின் பேசினார். அவர் என்ன சொன்னார் தெரியுமா? நம் இருவருடைய குரலும் அவருக்கு மிகவும் பிடித்து விட்டதால், இன்றே நம் இருவருக்கும் அவருடைய ஸ்டுடியோவிலேயே வாய்ஸ் டெஸ்ட் ஏற்பாடு செய்திருக்கிறார். நாமிருவரும் இப்பவே அதற்குத் தயாராகப் போக வேண்டும். நீ உடனே கிளம்பு: என வேகமாகச் சொன்னவன், வாசுகியிடமிருந்து எந்த விதமான பதிலோ, சந்தோஷத்திற்கு அறிகுறியோ இல்லை என்பதைக் கண்டு, “என்னாச்சு உனக்கு. நான் எத்தனை சந்தோஷமானச் செய்தியை சொல்கிறேன். நீ என்னவோ மாதிரி இருக்கிறாயே. உனக்கு உடம்பு சரியில்லை? சொல்” எனக் கேட்டவுடன், இத்தனை நேரம்
29
தன்னுடைய துக்கத்தை அடக்கி வைத்திருந்த, வாசுகி மோகனிடம் டாக்டர் சந்தோஷின் உடல் நிலையைப் பற்றி சொல்லியதைச் சொல்லி, டாக்டர் தன்னை அவனை விட்டு ஒரு நாள் கூட பிரியாது அவனுடனே இருந்து கவனித்துக் கொண்டால்தான், சந்தோஷ் மற்றக் குழந்தைகளைப் போல ஆரோக்கியமாக இருப்பான் என்பதைச் சொன்னதைச் சொன்னான். அதைக் கேட்டவுடன், மோகனுக்கும் ஒரு நிமிஷம் என்ன சொல்வது எனத் தயக்கம் ஏற்பட்டது. சிறிது நேரம் யோசனை செய்து விட்டு, “வாசுகி, நான் உனக்கு ஒரு யோசனை சொல்வேன். அதைக் கேட்பாயா?”எனக் கேட்டான். அதற்கு அவளும் “நான் இப்போ மிகவும் கலங்கி இருக்கிறேன். உன்னைத் தவிர எனக்கு இந்த சமயத்தில் துனையாக இருக்கவோ, ஆலோசனை சொல்லவோ யாருமில்லை. சொல்” எனச் சொன்னவுடன், மோகன் சொல்ல ஆரம்பித்தான்.
சந்தோஷ் உனக்கு மட்டும் குழந்தையல்ல. அவன் பார்த்திபனுக்கும் குழந்தைதான். பார்த்திபன், தன்னுடைய எதிர்காலம் பிரகாசமாக இருக்க, கம்பெனி அவனை கானடா அனுப்பிய போது, நீதானே அவனை வெளிநாடு அனுப்பிவிட்டு, சந்தோஷை உன் பொறுப்பில் வைத்துக் கொண்டாய். இப்போ, உனக்கு உன்னுடைய நீண்ட கால ஆசை நிறைவேறும் சமயம் நெருங்கி வந்துள்ளது. என்னுடைய யோசனை, இப்ப்த்தான் பார்த்திபன் திரும்பி வந்து விட்டான். நீங்கள் இருவரும் தனித்தனியாக இருப்பது உங்களுடைய சொந்த விஷயம். ஆனால், இப்ப அவன் சந்தோஷை ஒரு வருட காலம், தன்னுடைய நேரடி பராமரிப்பில் வைத்துக் கொண்டால், உன்னால், உன்னுடைய ஆசைகளை நிறை வேற்றிக் கொள்ள முடியும். இந்த ஒரு ஆசைக்காகத்தானே, நீ அவனுடன் கானடா செல்லாமல், தனியே இருந்தாய். நீ அவனுக்கு உதவியது போல், அவனும் உனக்கு உதவ வேண்டிய நேரம் இது. நீ இது பற்றி அவனுடன் விபரமாகப் பேசு. சந்தோஷ் அவனுடன் இருந்தால், உன்னால் முடிந்த போது நீயும்
30
அவனைப் போய்ப் பார்த்துக் கொள்ளலாம். இன்னும் ஒரு வருடம் கஷ்டப்பட்டால், நிச்சயமாக நீயும் ஒரு திரைப் பட பின்னனி பாடகியாக பிரபலம் அடைந்து விடலாம். உனக்கு ஒரு பெயரும் அங்கீகாரமும் கிடைத்து விட்டால், பிறகு நீ நீண்ட நாட்களுக்கு புகழோடு இருக்கலாம். உன் கனவும் பலித்து விடும். நன்றாக யோசித்து சீக்கிரம் முடிவு எடு. நீ இப்போ உன் குழந்தை, குடும்பம் எனப் போய் விட்டால், நான் உனக்காக இத்தனை நாட்கள் பட்ட சிரமங்கள் எல்லாம் வீணாகி விடும். எனக்கு எப்படியும், அவர் மூலம் திரையில் பாடுவதற்குச் சந்தர்ப்பம் வந்து விடும். உன் விஷயம் தான் சிக்கலாக இருக்கிறது. இதை நிதான் சரி செய்து கொள்ள வேண்டும். நன்றாக யோசித்து, கூடிய சீக்கிரம் பார்த்திபனுடன் பேசி, ஒரு நல்ல முடிவுக்கு வந்து, எனக்குச் சொல். நான் அதற்குத் தகுந்தபடி ஏற்பாடுகளைச் செய்ய முடியும்” எனச் சொல்லி விட்டு, வீட்டிற்குச் சென்றான்.
மோகன் சென்றவுடன், அவன் சொல்லியவைகளை வாசுகியும் யோசித்துப் பார்த்தாள். அவளுக்கும் மோகன் சொல்லியதில் எந்த விதமான தவறும் தெரியவில்லை. பார்த்திபன் வெளி நாடு போன போது, தான் தனியாக சந்தோஷைக் கவனித்துக் கொள்ளவில்லையா அதே போல், இப்போ என்னுடைய திறமையை வெளிக் கொண்டு வர எனக்குச் சந்தர்ப்பங்கள் வரும்போது, சந்தோஷின் உடல் நிலைக்காக அதையெல்லாம் விட்டு விட்டு வீட்டிலேயே இருந்தால், பிறகு அப்படி ஒரு சந்தர்ப்பம் தனக்கு கிடைக்காது. மேலும், இந்த நிலையை அடைவதற்காக அவள் கணவருடன் கூட வெளி நாடு போகாமல் தவிர்த்தாள். இப்பவும், தனக்கு அவனுடைய முழு ஒத்துழைப்பு இல்லை என்பதால், தனியாக, தாயும் தந்தையும் தன்னை விட்டுப் போனபின்பும், ஒரு வேலைக்காரியின் துனையில் குழந்தையுடன் இருக்கிறாள். இத்தனை கஷ்டங்களுக்குப் பின், தனக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்க இருக்கும் போது, அதை தவற விடுவது சரியல்ல. அதனால், தனக்கு மட்டு மல்ல, தன்னை அந்த
31
நிலைக்கு உயர்த்திக் கொண்டு போன மோகனின் உழைப்பும், கரிசனமும் பயனற்றதாகி விடும். மோகன் சொன்னதுபோல், பார்த்திபனிடம் பேசிப் பார்க்க வேண்டும் எனவும் தீர்மானித்து, உடனேயே பார்த்திபனுடன் ஃபோனில் பேசி, அவனும் உடனே வருவதாகச் சொல்லிவிட்டான். இன்று இன்னும் சிறிது நேரத்தில் கட்டாயம் பார்த்திபன் வந்து விடுவான். அவன் வந்த பின், தன்னுடைய கோரிக்கையை எப்படி எடுத்துக் கொள்வான் எனவும் யோசித்து காத்திருந்தாள்.
மறுநாள் காலையில் பார்த்திபன் வருவதற்குள் தன்னுடைய வேலைகளை முடித்துக் கொள்ள வாசுகி குளிக்கச் சென்றாள். செல்லும் முன் குழந்தையை வேலைக்காரியுடன் வெளியில் கொஞ்சம் வெயில் படும்படி வைத்துக் கொள்ளச் சொல்லி உள்ளேச் சென்றாள். வீட்டு வாசலில் ஒரு கார் வந்து அதிலிருந்து ஒருவர் இறங்கி வருவதை வேலைக்காரி பாத்தாள். வந்தவர் யாரென்று தெரியாதவளுக்கு, தன் கையில் இருந்த சந்தோஷை திடீரென்று சந்தோஷத்துடன் “அப்பா” எனக் கூவிக் கொண்டே அவனை நோக்கித் தாவினான். அதைப் பார்த்தவுடன் அவளும் புரிந்து கொண்டான் வந்திருப்பவர் வாசுகியின் கணவர் என. அவரை மரியாதையுடன் அழைத்துக் கொண்டு உள்ளே அழைத்துச் சென்றாள். உடனேயே வாசுகியிடம் சென்று சந்தோஷின் அப்பா வந்திருப்பதையும் தெரிவித்தாள். வாசுகியும் விரைவிலேயே தன்னை தயார் செய்து கொண்டு வந்தாள்.
தன்னைத் நோக்கித் தாவிய சந்தோஷை தன்னுடன் சேர்த்து இறுக்கி அனைத்துக் கொண்டு அவனுடன் பேசிக் கொண்டிருந்த பார்த்திபனைப் பார்த்து “வாருங்கள். நன்றாக இருக்கிறீர்களா?” எனவும் கேட்டுக் கொண்டே, அவனுக்கு குடிக்க காப்பியும் எடுத்து வந்தாள், அவளிடமிருந்து காபியை வாங்கி அருந்தியவண்ணம்,
32
அவளையும் தன் மடியில் இருந்த சந்தோஷையும் சில வினாடிகள் பார்த்துக் கொண்டே இருந்தான். அவன் கண்களில் சந்தோஷின் வாடிய தோற்றமும், அவனுடைய கண்களில் மங்கிய ஒளியும் தெரிந்தது. நேரடியாகவே வாசுகியிடம் கேட்டான் “குழந்தைக்கு என்ன உடம்பு? ஏன் இப்படி இளைத்து இருக்கிறான்?” என. அதற்கு வாசுகியும், சென்ற மூன்று மாதங்களாக அவனுக்கு அடிக்கடி சளி ஜுரம், இருமல், பேதி வாந்தி என ஒன்று மாற்றி ஒன்றாக அடிக்கடி பாதித்தது. நானும் அவனை இங்குள்ள குழந்தைகளின் மருத்துவரிடம் அழைத்துச் சென்று காட்டி, அவ்வப்போது மருந்து மாத்திரை எனக் கொடுத்து வந்தேன். இருந்த போதிலும், அவனுடைய உடலில் முன்னேற்றம் இல்லை. கடைசியாக என்னைப் பார்த்த டாக்டர் “அவனுக்கு ப்ரைமரி காப்ப்லெஃஸ் எனும் பாதிப்பு இருப்பதாகவும், அந்த மாதிரி நோய் பாதித்த குழந்தைகளை நாம் தனிக் கவனத்துடன் கவனிக்க வேண்டும் எனவும், இப்பவே அவனை நன்றாக கருத்தாக கவனிக்காமல் விட்டு விட்டால், பிற்பாடு அவனுடைய செயல் திறன் எல்லாம் குறைந்து போய் விடும், அவனுக்கு சுயமாக எந்த விதமான விளையாட்டுக்கூட விளையாட முடியாது, சதா நோயில் விழுந்து கொண்டிருப்பான். அப்ப ஒருவர் அவனை தன்னுடைய நேரடி பொறுப்பில் வைத்துக் கொண்டு, நாள் பூராவும், அவனுக்காகவே இருக்க வேண்டுமாம். என்னுடைய நிலையை நான் சொல்லி விடுகிறேன். என்னுடைய நீண்ட கால கனவான, திரைப் படத்தில் பின்னனி பாடுவதற்கு இப்பத்தான் சந்தர்ப்பங்கள் கூடி வருகின்றன. நாங்கள் நடத்திய ஒரு நிகழ்ச்சிக்கு தலைமை தாங்க வந்திருந்த திரை இசை பட இயக்குனர் திரு காமேஸ்வரன் என்னுடைய இனிமையான, குரல் வளத்தையும், என் பாடல்களில் நான் வெளிபடுத்தும் உணர்ச்சிகளையும் கவனித்து மிகவும் புகழ்ந்து, என்னையும் மோகனையும் தங்களுடைய குழுவில் இனைத்துக் கொள்ள முன் வந்திருக்கிறார். எங்களுக்கு இந்த வாரத்தில் ஒரு நாள் அவர்களுடைய ஸ்டுடியோவுக்குச் சென்று
33
பாடப் பயிற்சியும் அளிக்க இருக்கிறார். அதற்காக, நானும் மோகனும் தனியாகவும் சில பயிற்சிகள் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. இப்பப் பார்த்து, டாக்டர் என்னிடம் சந்தோஷை நான் அவனுடனேயே இருந்து கொண்டு, நாள் ;பூராவும் இருக்க வேண்டுமனவும் கூறி விட்டார். என்னால், இப்ப அப்படி இருக்க முடியாது. என்னுடைய எத்தனையோ ஆண்டுகளாக ஆசைப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு விஷயம் இப்பத்தான் எனக்குக் கிடைக்க இருக்கிறது. இந்தச் சமயத்தில், சந்தோஷுடைய உடல் நிலையால், என்னுடைய ஆசைகள் நிராசையாவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால் நான் மோகனிடம் யோசனை கேட்டேன். அவனுடைய யோசனையால் தான், இன்று உங்களுடன் பேசுவதற்காக உங்களை வரவழைத்தேன்” எனச் சொல்லி விட்டு, தொடர்ந்தாள்
“நான் நீங்கள் கானடா செல்லும் போது, உங்களுடன் வரவில்லை ஆனால், என்னுடனே சந்தோஷை வைத்துக் கொண்டேன். கொஞ்ச நாட்கள் கழித்து, என்னுடைய அம்மா, அப்பா அவர்கள் இருவரும் அவர்களுடைய வீட்டிற்கேச் சென்று விட்டார்கள்” எனச் சொன்ன போது, பார்த்திபன் அவளைக் குறுக்கிட்டு, அதுவும் உன்னுடைய செயலாலதான். மாமா மாமி இங்கிருந்து எந்தமாதிரி சூழ்நிலையில் பிரிந்து சென்றார்கள் என்பதை அவர்களே எனக்குக் காடனாவிற்குப் போன் பண்ணிச் சொன்னார்கள். அதனால், அவர்கள் உன்னை விட்டுப் போனதிற்கு அவர்கள் காரணமல்ல. நீதான் என்பதை புரிந்து கொள்.” எனச் சொல்லிவிட்டு, :இப்ப, உன்னுடைய தீர்மானம் என்ன. உனக்கு மோகன் சொல்லிக் கொடுத்த புத்திமதி என்ன?எனக் கோபத்துடனும், அதே சமயம் இன்னும் உலகத்தைப் புரிந்து கொள்ளாத பெண்ணாக இருக்கிறாளே என தாபத்துடனும் கேட்டான்.
34
அவனுடைய கோபத்தையோ, வருத்தத்தையோ பாராட்டாது, தன்னுடைய நோக்கத்திலேயே மனதைச் செலுத்திக் கொண்டிருந்த வாசுகி அவனிடம் “உங்களிடம் ஒரு உதவி கேட்கத்தான் உங்களைக் கூப்பிட்டேன். உதவி எனபது கூட சரியல்ல. சந்தோஷிடம் உங்களுக்கும் கடமைகள் உண்டு. அதனால், இந்த சமயத்தில் என்னால் சந்தோஷைப் பார்த்துக் கொள்ள முடியாது. அதனால்,நீங்கள் இனிமேல் சந்தோஷின் உடல் நிலை நன்றாக வரும் வரையில், உங்களுடைய பொறுப்பில் அவனை எடுத்துக் கொண்டு பார்த்துக் கொள்ளுங்கள்” எனக் கேட்கத்தான் உங்களுக்குப் போன் பண்ணினேன்.
தன் எதிரில் அமர்ந்து இருக்கும் வாசுகியை ஒரு முறை பார்த்தான் பார்த்திபன். அவளை சுயநலக்காரி என்பதா, தன்னுடைய ஆசைகளை மட்டும் நினைத்துக் கொண்டு, தன்னைச் சுற்றி இருப்பவர்களின் மனதை புரியாமல் இத்தனை நாட்கள் இருந்தாள் இப்ப, அவளுடன் இருப்பது அவள் பெற்ற குழந்தை, அதுவும் உடல் நிலை சரியில்லாத குழந்தை. இப்பத்தான் தாயின் ஆதரவும், அரவனைப்பும் அவனுக்குத் தேவை. இதெல்லாம் யாரும் சொல்லாமலேயே அவளுக்கு உணர்த்தி இருக்க வேண்டிய தாய்மை அடைந்தவள். அப்படி இருக்க, டாக்டர் அவளிடம் முடிவாகச் சொல்லிய பின்பும், தன்னுடைய குழந்தையை விட, தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை, அதில் அடைய நினைக்கும் நிலை, அதனால் தனக்கு வர இருக்கும் புகழ், பெருமை, பாராட்டுக்களென்பதிலேயேயே கவனம் செலுத்துக் கொண்டிருக்கும் அவளைப் பார்க்கக்கூட அவனுக்கு வெறுப்பாக இருந்தது. உண்மையிலேயே அவள் தாய்தான, அல்ல. அவள் ஒரு குடும்ப பெண்கூட இல்லை எனவும் மனதிற்குள் குமைந்தான். அதனால், உடனேயே அந்த இடத்தை விட்டுப் போக வேண்டுமெனவும் நினைத்து “இப்ப என்ன உனக்கு சந்தோஷை என்னுடன் வைத்துக் கொள்ளவேண்டும். இதற்காக, நீ இத்தனை கஷ்டப்பட்டிருக்க
35
வேண்டாம். நான் இப்பவே அவனை என்னுடன் கூட்டிக் கொண்டு போகிறேன். எனக்கும் அவனுடன் பிடிப்பும், கடமையும் உண்டு. அதை நீ சொல்லித்தான் நான் செய்ய வேண்டுமென இல்லை. நான் இந்த ஊருக்குத் திரும்பியவுடனேயே அவனையும் என்னுடன் எடுத்துச் செல்லத்தான் இருந்தேன். ஆனால், ஊரில் இருக்கும் என் தாயார் என்னிடம் “தாயையும், பிள்ளையையும் பிரிக்கக் கூடாது. அதனால், சந்தோஷ் அவளுடனேயே இருக்கட்டும். நீ அவ்வப்போது போய் குழந்தைக்கு வேண்டியதைச் செய்து, பார்த்துக் கொள்” எனச் சொன்னாதால், இத்தனை நாட்கள் நான் அவனை உன்னிடம் விட்டு வைத்திருந்தேன். இனிமேல் நீ அவனைப் பற்றி எதுவும் எண்ணிக் கவலைப் பட வேண்டாம். அவன் இனிமேல் உனக்குச் சுமையாக இருக்க மாட்டான்” எனச் சொல்லி விட்டு, எனக்கு சந்தோஷின் மெடிக்கல் ரிபோர்ட், டாக்டர் எழுதிக் கொடுத்த சிகிச்சை முறைகள், மருந்துகள் அடங்கிய குறிப்புக்களைக் கொடு. நான் எடுத்துப் போகிறேன்” எனச் சொல்லி விட்டு, அங்கிருந்த வேலைக்காரியை பார்த்து “அம்மா, நீதான் இந்த விட்டோடு இருந்து சந்தோஷைப் பார்த்துக் கொண்டாயா. நல்ல காலம், அவனை என்னிடம் உயிரோடு கொடுத்ததற்கு நன்றியம்மா. நீ மட்டும் அவனிடம் ஏதோ கொஞ்சம் பரிவுடன், பாசத்துடன் இருந்ததற்கும் நன்றியம்மா.. நி கொஞ்சம் வெளியில் இருக்கிறாயா? .நான் சந்தோஷின் தாயாருடன் சில விஷயங்களைப் பேச வேண்டும்” எனச் சொல்லி அவளை அனுப்பி விட்டு, வாசுகியிடன் திரும்பினான்.
வாசுகி, எனக்கு இப்பவும் உன் மீது கோபம் வரவில்லை, மாறாக வருத்தமே வருகிறது. உன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை, ஆசைகள் என ஏதோ கனவு கண்டுகொண்டு உன்னுடைய
உறவுகளைஎல்லாம் நீ வெட்டி விடுகிறாய். ஒரு பெண்ணிற்கு கணவன், குழந்தை குடும்பம் எனக் கூட்டில் தான் சுகம், இன்பம்,
36
பெருமை எல்லாம் இருக்கு. அதை நீ புரிந்து கொள்ள மறுக்கிறாய். நாங்கள் யார் சொல்வதையும் உன் மனம் ஏற்க மறுக்கிறது. உனக்காகவும் சுயமாக யோசித்து முடிவு எடுக்கவும் புத்தி இல்லை. உன்னைப் பொறுத்த வரை மோகன் ஒருவன் தான் உன் நம்பிக்கைக்கு பாத்திரமானவன். அவன் மனதில் என்ன கள்ளம் இருக்கிறது என்பதை உன்னால் அறிய முடியாது. இப்பவும் சொல்கிறேன் என்னைப் பொறுத்த வரை நீ சந்தோஷின் தாயார். அவனிடம் உனக்குள்ள எந்த உரிமையையும் நான் தடுக்க மாட்டேன். நீ எப்ப வேண்டுமானாலும், வந்து, சந்தோஷை பார்த்துச் செல்லலாம். ஆனால், உனக்கும் எனக்கும் இருந்த உறவு உடைந்து விட்டது. நீ இனி எந்தக் காலத்திலும், என் மணைவி என உரிமையோடு அந்த வீட்டிற்கு வர முடியாது. என்னைப் பொறுத்த வரை, என் மணவாழ்வு முடிந்து விட்டது. அதனால்தான், நான் உன்னிடம் என்னுடன் நீ வந்துதான் ஆக வேண்டுமென ஒரு நாளூம் உன்னைக் கட்டாயப் படுத்த மாட்டேன்.. உறவென்பது இருவருக்குள்ளும் இருக்க வேண்டியது. என் மனதில் மட்டும் நாம் இனைந்து வாழ வேண்டுமென நினைத்துக் கொண்டு, அதற்கு நீ ஒத்து வராததால், மனதிற்குள் ஏங்குவது முட்டாள்த்தனம், அதனால், என் வரையில் நான் முடிவாக இருக்கிறேன். இனி என் வாழ்வு சந்தோஷுடந்தான். என்னுடைய தாயாரின் கண்கானிப்பில், இனி அவன் நன்றாக வளர்வான். முடிந்தால், எந்த விஷயத்திலும் நியாகவே சுயமாக யோசித்து பார்த்து முடிவு எடு. மோகன் சொல்வதைக் கேட்டு முடிவு செய்வது, உன் வாழ்க்கைக்கு நல்ல தல்ல. இனிமேல் உன் ;புத்தி நீ புரிந்து நடந்து கொள்” வருகிறேன்” எனச் சொல்லி விட்டு, குழந்தையை எடுத்துக் கொண்டு காருக்குச் சென்றான்.
காரில் ஏறியவன், ஒரு நிமிஷம் என்ன செய்வது எனவும் யோசித்தான். பிறகு ஒரு முடிவுக்கு வந்தவன், “சந்தோஷ், நாம் இப்போ பாட்டியைப் பார்க்கப்போகலாமா?” எனக் கேட்டபடியே,
37
காரை தன்னுடைய கிராமத்திற்குச் செலுத்தினான். விரைவில் இரு மணி நேரங்களுக்குள்ளகவே தன்னுடைய அம்மாவின் இடத்தை அடைந்தான். காரிலிருந்து குழந்தையுடன் இறங்கிய பார்த்திபனுடன் சந்தோஷும் கூட இருப்பதைப் பார்த்தவளுக்கு ஆனந்தம் தாங்கமுடியவில்லை. உடனேயே ஓடி சென்று, பிள்ளையிடமிருந்து பேரனை வாங்கிக் கொண்டே. “என் செல்லக்கண்ணூ, எத்தனை நாளாச்சுடா உன்னைப் பார்த்து. உன்னை என்னிடம் காட்ட இப்பத்தான் உன் அப்பாவுக்கு மனம் வந்ததா? “ எனக் கொஞ்சிக்கொண்டே எடுத்துக் கொண்டாள். அவளைத் தொடர்ந்து வந்த பார்த்திபன் “அம்மா, குழந்தைக்கு முதலில் சாதம் ஊட்டு. அவனைக் நான் காலையிலேயே எடுத்துக் கொண்டு வந்து விட்டேன்: என மட்டும் சொல்லி விட்டு அமர்ந்தான். பாட்டியும் உடனடியாக குழந்தைக்கு சாதம், பருப்பு நெய் என சேர்த்து பிசைந்து வந்து, அவனையும் பார்த்திபன் மடியிலிருத்தியே, சாதம் ஊட்டினாள். குழந்தையும் அவளின் முகத்தையேப் பார்த்துக் கொண்டு, சமத்தாகச் சாப்பிட்டான். ஏற்கெனவே நோயினால் பாதித்தவன், அப்பாவுடன் நீண்ட நேரம் காரில் வந்த அலுப்பும் சேர்ந்து, அப்படியே பார்த்திபனின் மடியிலேயே தூங்கலானான்.
குழந்தையை எடுத்துக் சென்று, தன்னுடைய கட்டிலில் படுக்க வைத்து விட்டு, வந்தவளிடம் பார்த்திபன் தனக்கும், வாசுகிக்கும் காலையில் நடந்த பேச்சு வார்த்தைகளையும், குழந்தையின் நோயின் தன்மையையும் சொல்லி விட்டு, இனிமேல் அவளால் குழந்தையை கவனித்துக் கொள்ள முடியாதென்றும், இனிமேல் அவனை நாந்தான் பார்த்துக் கொள்ள வேண்டுமெனவும் தீர்மானமாகச் சொல்லி விட்டள்”என வருத்தத்துடன் சொன்னான். வாசுகியின் பிடிவாதத்தை நன்றாகச் தெரிந்திருந்தவள் அவனிடம் “இதெல்லாம் நடக்கனும்னு நம்முடைய தலையெழுத்து. இல்லையென்றால், நன்றாக சந்தோஷமாக வாழ்ந்தவளுக்கு திடீரென்று இப்படி ஒரு ஆசை
38
வருமா? சுயமாகவும் யோசிக்கத் தெரியவில்லை. நாம் சொல்லுவதையும் கேட்பதில்லை. என்ன செய்வது” என தனக்குள் வருத்தப்பட்டாள்.
அதற்கும் பதிலாக பார்த்திபன் சொன்னான் “அவளுக்கு இப்ப் மோகன் சொல்லுவதுதான் வேத வாக்கு. என்ன ஆசையோ? தன்னைச் சுற்றி இருக்கும் அத்தனை உறவுகளையும் பகைத்துக் கொண்டாள். சிலருக்குப் பட்டால்தான் தெரியும். இப்ப நான் வந்தது உன்னையும் என்னுடன் அழைத்துச் செல்லத்தான். நீதான் இப்போ சந்தோஷை கவனித்துக் கொள்ள வேண்டும். நமக்கு அவனுடைய ஆரோக்கியம்தான் முக்கியம். என்னைப் பொறுத்தவரை எனக்கு சந்தோஷும், நீயும்தான். நாமிருவரும் சாப்பிட்டு விட்டு, உடனேயே கிளம்பி விடலாம். நீயும் தயாராகி விடு” எனச் சொல்லிக் கொண்டே, அம்மாவுடன் சாப்பிட அமர்ந்தான். நீண்ட நாட்களுக்குப் பின் அம்மா கையால் சாப்பிட்டதே அவனுக்கு மிகவும் திருப்தியாக இருந்தது. தன்னை எப்படி அம்மா அக்கறையோடு வளர்த்தாளோ அப்படியே இனியும் சந்தோஷை வளர்ப்பாள். இனிமேல் தான் குழந்தையைப் பற்றி எந்தக் கவலையும் பட வேண்டாமென மனதிற்குள் நினைத்துக் கொண்டே, அவனும் காரில் வந்த அலுப்புத் தீர பிள்ளையுடனே படுத்துத் தூங்கலானான். மாலையிலேயே மூவரும் காரில் திரும்பி வந்தார்கள்.
பார்த்திபன் தன்னுடைய லீவு நாளில், குழந்தையை, அம்மாவுடன் கூட்டிக் கொண்டு டாக்டரிடம் சென்றான். அவர்களைப் பார்த்த டாக்டர் “என்ன சந்தோஷ் இன்று அப்பாவுடன் வந்திருக்கிறான். என்னடா, இன்னும் உனக்கு ஜுரம் வருகிறதா?: எனக் கேட்டுக் கொண்ட படியே, அவனைப் பரிசோசித்தார். அதற்கு பார்த்திபன் “டாக்டர், இன்று அவனுக்கு ஜுரம் இல்லை. நாங்கள், அவனுடைய உடல் நிலையைப் பற்றி உங்களிடமே நேரில் கேட்டுத் தெரிந்து கொள்ளத்தான் வந்தோம். இவர் என்னுடைய தாயார்.
39
இனிமேல் இவரின் கவனிப்பில்தான் சந்தோஷ் இருப்பான்” எனச் சொல்ல, டாக்டரும் :எனக்கு இப்பத்தான் நிம்மதியாக இருக்கிறது. நான் சென்ற முறை உங்களின் மனைவி வந்தபோது, கொஞ்சம் கண்டிப்பாகவே சொல்லி விட்டேன், இனி மேல் சந்தோஷை அவனுடைய தாயார் நேரடியாக நாள் பூராவும் தன்னுடைய கவனிப்பில் வைத்துக் கொள்ள வேண்டும் என.”. பிறகு, பாட்டியிடம் “உங்களுக்கு நான் சொல்லத்தேவையில்லை. சந்தோஷுக்கு அதிகம் வெளிக் காற்றில் இருக்கக்கூடாது. வெளியில் சீதோஷணம் கொஞ்சம் மாறினாலும், அவனுக்கு பாதிக்கும். அதனால், அதை மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள். மற்றபடி, உங்களின் கைப்பட நீங்கள் செய்யும் பத்தியமே சரி. நான் கொடுத்த மருந்துகளைத் தவறாமல் கொடுத்து வாருங்கள். அவன் நன்றாக இருந்தாலும், இரு வாரத்திற்கு ஒரு முறை அவனை நாம் பரிசோதித்துக் கொண்டிருக்க வேண்டும். அப்பத்தான் அவனுடைய உடலில் வளர்ச்சியை நாம் கவனித்துக் கொள்ள முடியும். “ எனச் சொல்லி விட்டு, அவர்களை அனுப்பி வைத்தார். அன்று முதல், சந்தோஷ் பாட்டி, அப்பா இருவரின் நேரடி கவனிப்பில் இருந்தததால், அவனின் உடல் நிலை சீராக இருந்தது. பாட்டியும், அவனுடன் மதிய நேரத்தில் அமர்ந்து கொண்டு, அவனுக்கு பேச்சுக் கொடுத்துப் பேசவும் பழக்கினாள். அதனால், சந்தோஷ் காக்கா, கிளி, குயில் போல் குரல் எழுப்பிக் காட்டவும் தெரிந்து கொண்டு அதைப் போலவே பார்த்திபனுடன் குரல் எழுப்பி விளையாடவும் செய்தான். அவர்களின் வீட்டில், சந்தோஷுடன் சந்தோஷமும் நிறைந்து இருந்தது. அவர்கள் இருவரும் ஒரு முறை குழந்தையுடன் வாசுகியின் பெற்றோரையும் போய் பார்த்து சிறிது நேரம் அவர்களுடன் இருந்து விட்டு வந்தார்கள். அவர்களுக்கும், குழந்தையின் உடல் நிலை கெட்டதும், அதனால், அவனைப் பார்த்துக் கொள்ள முடியாதென்று, வாசுகி முடிவு செய்து, பார்த்திபனின் பொறுப்பில் குழந்தையை விட்டு
40
விட்டதையும் தெரிந்து கொண்டு, மகளின் குணத்தால், மனதிற்குள் வருத்தமடைந்தாலும், இப்போ சந்தோஷின் உடலும், மனமும் சீராகி வருவதைப் பார்த்துமனம் தேறினார்கள்.
குழந்தையை பார்த்திபனுடன் அனுப்பி விட்டு, வாசுகி தன்னுடைய முன்னேற்றத்தில் கவனம் செலுத்தினாள். அவள் ஒரு நாள் மோகனைத் தேடி அவனுடைய வீட்டிற்குச் சென்றாள். அங்கே, மோகன் தன்னுடைய படுக்கை அறையில் வேறு ஒரு பெண்ணிடம் சிரித்து பேசிக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டது. எப்பவும் வாசுகி வரும்போது, கூடத்தைத்தாண்டி, அவனுடைய வீட்டிற்க்குள் செல்ல மாட்டாள். அவனுடன், கூடத்தில் அமர்ந்து பேசிவிட்டு, திரும்பி விடுவாள். அதே போல் அன்றும் அவனுக்காக காத்திருந்தாள். அப்போதுதான், மோகனும் மற்றோரு பெண்ணும் பேசிக் கொண்டிருந்தவைகள் அவளின் செவியில் விழுந்தது.
சாரு: என்ன மோகன், நான் கேட்டதற்கு இன்னும் நீ சரியான பதிலைச் சொல்லவில்லையே? இனிமேல், வாசுகி உன்னுடைய குழுவில் இனைந்து பாடுவாளா இல்லையா. நீ என்னிடம் சொன்னது போல், என்னை எப்ப உன்னுடன் இனைந்து பாட வைப்பாய். நீ சொல்வதைப் பார்த்தால், இனிமேல் அவளால் குழந்தையை விட்டுவிட்டு வரமுடியாதென்றாய். ஆனால் என்ன நடந்தது பார். அவளோ குழந்தையை அவனுடைய அப்பாவின் போறுப்பில் விட்டு விட்டாள். இனிமேல், அவளால் முழு நேரமும் உன்னுடன் இருக்க முடியும். அப்படியிருக்க, நீ எப்படி என்னை உன் குழுவில் முதன்மைப் படுத்துவாய்? எனக் கேட்டதற்கு மோகன் சொன்னான் :என்னுடைய திட்டம் இப்பத்தான் சரியாக வந்திருக்கு. என்னுடைய நோக்கம் வாசுகியைத் தனிமைப் படுத்துவதுதான். அதற்காகத்தான் அவளை நான் என்னுடன் இனைந்து பாட வேண்டுமெனக் கேட்டு, அவளை அவளுடைய குடும்பத்திலிருந்து
41
பிரித்தேன். எனக்குத் தெரியும், பார்த்திபனுக்கு அவள் மேடை ஏறி பாடுவது பிடிக்காதென்று. அதே போல், பார்த்திபன் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தவுடன், அவள் என்னுடைய யோசனையைக் கேட்டதற்கு, நான் அவளை உன்னுடைய இலட்சியியம் நிறை வேறவேண்டுமென்றால், நீ உன் குடும்பத்தை தியாகம் செய்யனும்னு சொன்னப்போ, அதை அவள் வேதவாக்காக எடுத்துக் கொண்டு, பார்த்திபனுடன் கானடா போகாமல், தனியாக இருந்தாள். அப்ப அவளுடன் இருந்த அவளுடைய அப்பா, அம்மாவையும் என்னுடைய உறவுக்காக வெறுத்துப் போகச் செய்தாள். அதனால், அவர்களும் அவளை விட்டுப் பிரிந்து விட்டார்கள். கடைசியில் குழந்தை மட்டும் இருந்தது. அதற்கும் என்னுடைய அதிர்ஷ்டம் போல. உடம்புக்குச் சரியில்லாமல் ;போனதும், டாக்டர் அவளிடம் மிகவும் கண்டிப்பாகச் சொன்னதாகச் சொல்லி, தான் இனிமேல் குழந்தையை வேறு யாருடைய பாதுகாப்பில் விட முடியாது, எனவும், அவனைப் பார்த்துக் கொள்ளநாள் ;பூராவும் அவனுடனேயே இருக்க வேண்டுமெனச் சொல்லி, வருத்தப்பட்ட போது, அப்போதும் அவள் என்னுடைய யோசனையைத்தான் கேட்டாள். அதற்கும் நான் அவளிடம் குழந்தையை நீ இப்போ பார்த்திபன் பொறுப்பில் விட்டுவிட முயற்சி செய் எனச் சொல்லி, அவளைப் பார்த்திபனிடம் பேசவும் செய்யச் சொன்னேன். அந்த முட்டாளும் அவளை எந்தவிதமாகவும் கண்டிக்காமல், குழந்தையை தன்னுடைய நேரடி பொறுப்பில் வைத்துக் கொள்ளுவதாகச் சொல்லி, எடுத்துக் கொண்டு சென்று விட்டான். இப்பப்பார், என்னுடைய திட்டப்படியே, அவள் இப்போ யாருமற்றவள். என்னைத் தவிர அவளுக்கு உறவெனச் சொல்லி வருபவர் யாருமில்லை. அவள் என்னை வேண்டாமெனச் சொல்லி, சென்றபோதே, நான் தீர்மானித்துக் கொண்டே, எப்படியும் அவளை என்னுடைய நிழலில் வந்து நிற்கச் செய்ய வேண்டுமென. இப்பப்பார், அவளுக்கு என்னைத் தவிர வேறு யாருடைய ஆதரவோ,
42
உதவியோ இல்லை. ;இனிமேல் நான் என்ன சொன்னாலும், அதற்குக் கட்டுப்பட்டுத்தான் அவள் இருக்க வேண்டும். என்னுடைய வர்மம் தீர்ந்தது.: எனச் சொல்லி, கள்ளத்தனமாகச் சிரித்தான் அவனுடன் சேர்ந்து சாருவும் சிரித்தாள். பிறகு சாரு கேட்டாள் :மோகன், என்ன காரணத்தால், உனக்கு வாசுகியின் மீது இத்தனை வர்மம், வெறுப்பு?” என.
அதற்கும் பதில் சொன்னான். “நாங்கள் இருவரும் பள்ளிக் காலத்திலிருந்தே இனைந்து படித்து வந்தவர்கள். அப்பத்திலிருந்தே, இருவரும் பள்ளி, கல்லூரியில் நடந்த எல்லா நிகழ்ச்சிகளிளும் இனைந்தே பாடுவோம். எங்களின் நண்பர்களும், ஆசிரியர்களும் எங்களுடைய இசையை மிகவும் இரசிப்பார்கள். அவர்கள் எல்லாம் எங்களைக் கல்லூரி “இராஜா—ஜிக்கி” எனச் செல்லமாக அழைக்கவும் செய்தார்கள். அதிலிருந்தே எனக்கும் வாசுகியின் மீது ஒரு காதல் வந்தது. நான் அவளூடன் பழகும் போதும் வாசுகி எந்தவிதமான மறுப்பும் சொல்லவில்லை. அதனால், நான் அவளும் என்னைக் காதலிக்கிறாள் என நினைத்துன் மனம் மகிழ்திருந்தேன். ஆனால், ஒரு நாள் அவள் என்னிடம் அவள் வீட்டில் ஒரு விசேஷம் எனச் சொல்லி என்னையும் அழைத்தாள். நானும் மிகவும் சந்தோஷத்துடன் அவளுடைய வீட்டிற்குச் சென்றேன். அங்கே அவளுடைய அப்பா என்னை மிகவும் அன்புடன் வரவேற்றார். என்ன விசேஷம் என நான் கேட்க, அவரோ மிகவும் சந்தோஷத்துடன் “வாசுகி உன்னிடம் சொல்ல வில்லையா, இன்று அவளுக்கு இங்கே திருமண நிச்சயம் செய்யப் போகிறோம். அவளுடைய நண்பர்களையெல்லாம் அழைத்து வா என நான் சொன்னேனே.:எனச் சொன்னப்போ, என்னுடைய தலையில் இடி விழுந்தது போல் தான் திகைத்துப் போய்விட்டேன். என்னுடைய இத்தனை ஆசையாக பழகியவள், திடீரென்று எப்படி திருமணம் செய்து கொள்ள சம்மதித்தால், எங்களுடைய காதலைப் பற்றி அவளுடைய அப்பா
43
அம்மாவிடம் ஒன்றும் சொல்லவில்லையா, அல்லது அவர்கள் அதற்கு ஒப்பவில்லையா என எதுவும் தெரியாமல் தவித்தேன். என் எதிர்பார்ப்புக்கு மாறாக, வாசுகியோ மிகவும் சந்தோஷத்துடன் இருந்தாள். அவளைப் பார்த்தவுடன் எனக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது. எப்படி என்னுடைய காதலைப் புரிந்து கொண்டவள், என்னை மறக்க முடியும், வேறு ஒருவருடன் வாழ எப்படி முடிவு செய்தாள்: என என் மனம் கொதித்தது. ஆனால், அன்று அங்கு என்னால் ஒன்றும் செய்ய முடியாது. மௌனமாக இருந்து விட்டு வேதனையுடன் வீட்டை அடைந்தேன். அன்று முழுவதும் ஒரு வினாடிகூட என்னால் அவளை மறக்கவோ, அவளின் நிச்சயதார்த்த்தில் சிறிது நேரம் இருந்து விட்டு, யாரிடமும் சொல்லிக் கொள்ளாம வீட்டிற்குத் திரும்பி விட்டேன். எனக்கு சின்ன வயதிலேயே அப்பா, அம்மா இறந்து விட்டார்கள். என்னுடைய அத்தைதான் என்னை வளர்த்தார். அவரும் நான்கு ஆன்டுகளுக்கு முன் இறந்து விட்டார்கள். இனிமேல், என்னைத் திருமணம் செய்து கொள்ளத் தூண்டிவிட யாருமில்லை. நான் என் விருப்பப்படியே யாரை வேண்டுமானாலும், மணந்து கொள்ளலாம். ஆனால், என் மனதில் வாசுகி இருக்கும் போது, என்னால் வேறு யாரையும் ஏற்றுக்கொள்ள விருப்பமில்லை. அதனால், என் கவனம் பூராவும் என்னுடைய இசை நிகழ்ச்சிகளில் செலுத்தினேன். அப்பொதான் வாசுகி எனக்கு ஃபொனெ பண்ணி, தன்னுடைய குழந்தையின் முதல் பிறந்த நாள் விழாவிற்கு அழைத்தாள். அவளின் அழைப்பைக் கேட்டவுடன், நான் எப்படி துடித்தேன் தெரியுமா? என் மனதில் இருப்பவள், வேறு ஒருவருடன் குடும்பம் நடத்தி, ஒரு குழந்தை பெற்று, அதற்கு பிறந்த நாள் என என்னை அழைக்கும் தைரியம் அவளுக்கு எப்படி வந்தது. நானும் எப்படியாவது அவளுடைய வாழ்வில் அமைதியைக் குலைத்து, அவளைத் தனிமை படுத்துவது எனக் காலத்தை எதிர்பார்த்து
44
காத்திருந்தேன். வசதியாக, அவளே என்னைக் கூப்பிட்டவுடன், நான் சரியாக சந்தர்ப்பத்தை பயன் படுத்திக் கொண்டேன். கொஞ்சம் கொஞ்சமாக காயை நகர்த்தி, அவளை முழுமையாக என்னையே நம்பச் செய்து. இப்பப் பார், அவளை தனியாளாக்கி விட்டேன். இனி என்னைத் தவிர வேறு யாருமில்லை. இப்பவும் அவள் நான் என்ன சொன்னாலும், அதை வேதவாக்காக நினைத்து அப்படியே செய்வாள். என்னைப் பொறுத்த வரை அவள் ஒரு கூண்டுக்கிளி. என்னுடைய கைகளில் இருப்பவள், நான் அவளை எப்படி வேணாலும் ஆட்ட முடியும். இப்ப என்ன சொல்கிறாய் என்னை வேண்டாமெனச் சொன்னவள், இப்போ என்னைத் தவிர வேறு யாருமற்ற ஆனாதையாகி விட்டாள். இது போறும். இனிமேல் அவளுக்கு சமூகத்திலும் ஒரு கெட்ட பெயர் வந்து விடும். திருமணமானவள், பாடுவதற்காக, தன்னுடைய கணவன், பெற்றோர், குழந்தை என எல்லாரையும் பிரிந்து விட்டு, என்னையே முழுமையாக வந்தாள், எனக்கும் அவளுக்கும் எதோ ஒரு உறவு இருக்கும் என மற்றவர்கள் நம்புவார்கள். அது ஒன்றே போரும்.: எனச் சொல்லி, அரக்கத்தனமாகச் சிரித்தவனைப் பார்த்த சாருவுக்கும் மனதில் பயம் ஏற்பட்டது.
“மோகன், என்னதான் நீ உன் செயல்களுக்கு காரணம் சொன்னாலும், நீ செய்தது மிகவும் பாவமான ஒன்று. பாவம், நீ மிகவும் நல்லவென முழுமையாக நம்பித்தானே அவள் உன்னுடைய எல்லா யோசனைகளையும் ஏற்றாள். அவள் உன்னை தன்னுடைய உண்மையான நண்பன் என் எண்ணித்தானே, உன்னுடன் இத்தனைதூரம் மனம் நெருங்கிப் பழகினாள். உன்னையே முழுவதுமாக நம்பி, தன்னுடைய எல்லா உறவுகளையும் பகைத்துக் கொண்டாள். அப்படிப்பட்டவளுக்கு நீ துரோகம் செய்யலாமா? நீதான் அவளைக் காதலித்தானே தவிர, அவள் ஒரு நாள் கூட உன்னுடன் அப்படிப்பட்ட ஒரு உறவில் பழகவில்லையே.
45
கொஞ்சமும் கள்ளம் இல்லாது, தனக்குத் திருமணம் நிச்சயத்தவுடன் உன்னிடம்தான் முதலில் சொன்னாள். நீ அவளுடன் உண்மையான நண்பனாக பழகவில்லையே, மாறாக, உன் மனதில் வர்மத்தை மறைத்துக் கொண்டு, ஒரு பெண்ணின் வாழ்க்கையில் எத்தனை கொடூரமாக விளையாடி இருக்கிறாய். உனக்கு மனச்சாட்சி இல்லையா? தயவு செய்து அவளிடம் போய் உண்மையைச் சொல்லி, அவளை அவள் குடும்பத்துடன் சேர்த்து வை. இதுவரை நீ செய்த பாவங்களுக்குப் பரிகாரம் தேடிக் கொள். நான் உன்னை நல்லவன் என எண்ணித்தான், இங்கு வந்து உன்னுடன் சினேகமாக இருந்தேன். எப்பநீ வாசுகி விஷயத்தில் இத்தனை வஞ்சனையுடன் இருக்கிறதைப் பார்த்தபின், என்னால் உன்னுடன் பழக முடியாது. நல்ல வேலை, நான் உன்னையே முழுவதுமாக நம்ப வில்லை. என்னுடைய அம்மாவின் விருப்பப்படியே, நான் என் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுகிறேன். மேடையில் பாடுவது என்பது எனக்கு ஒரு போழுது போக்குத்தான். அதனால், நான் இனிமேல் உன்னைத் தேடி வரமாட்டேன். உன் வலையில் வீழ மாட்டேன். என்னால், முடிந்தால், வாசுகியை காப்பாற்ற முயற்சிக்கிறேன்: எனச் சொல்லிக் கொண்டே, அந்த அறையைன்விட்டு வெளியேறினாள்.
அதற்குள்ளாகவே, ஹாலில் அமர்ந்திருந்த வாசுகியும், மோகனின் முழு பேச்சையும் கேட்டாள். அவளுக்கு ஒரு நிமிஷம் ஒன்றும் புரியவில்லை. யாரை தனக்கு உண்மையான நண்பன் என் நினைத்து, தன்னுடைய உறவினர்களை எல்லாம் ஒதுக்கிக் கொண்டேனோ, அப்படிப்பட்டவன் மனதில் இத்தனை வர்மம் இருந்தது என் நினைக்கும்போதே, அவளின் மனமும் உடலும் பயத்தால் துடித்தது. அவளின் கண் முன் பார்த்திபனின் முகம் தோன்றியது. அவன் சொன்னதும் காதில் ஒலித்தது. மோகன் தன் மனதில் என்ன கள்ளத்ததனைதை வைத்துக் கொண்டு, உன்னிடம் பழகுகிறானோ, உனக்குத் தெரியவில்லை. நீ அவனை முழுமையாக நம்பிக் கொண்டிருக்கிறாய். நீயே ஒரு நாள் அவனின்
46
வஞ்சனையைப் புரிந்து கொள்ளுவாய்” எனச் சொன்னதும் திரும்பவும் அவளின் காதில் பட்டது. உடனடியாக, அந்த இடத்தை விட்டுப் போக வேண்டுமென பறந்தாள். அதனால், யாரிடமும் சொல்லாமல், வெளியே வந்து, அங்கிருந்த ஒரு ஆட்டோவில் ஏறி, அமர்ந்தாள். தன்னிச்சையாகவே, தனனுடைய தாயின் வீட்டிற்கு விடச் சொல்லி, வந்து சேர்ந்தாள். ஆட்டோவிலிருந்து இறங்கிய வாசுகியைப் பார்த்த அவளின் அம்மா :வாம்மா, நன்றாக இருக்கிறாயா?” எனக் கூப்பிட்டுக் கொண்டே, உள்ளே அழைத்துச் சென்றாள்.
உள்ளே வந்தவள், அங்கிருந்த சோபாவில் அமர்ந்து தன்னுடைய முகத்தைக் கைகளால் மூடிக் கொண்டு, விம்மி விம்மி அழலானாள். சின்னக் குழந்தையைப் போல் தன்னிலை மறந்து அழும் வாசுகியைத் தன்னுடன் அனைத்துக் கொண்டு சமாதானம் செய்தாள் அவளுடைய அம்மா. அவள் அழுவதைப்பார்த்து வாசுகியின் அப்பாவும் அவளிடம் “என்னம்மா நடந்தது? சந்தோஷ் இப்போ நன்றாகத்தானே இருக்கிறான். நாங்கள் நேற்றுத்தானே அவனைப் போய் பார்த்து வந்தோம். இப்போ அவன் நிறையவே பேசுகிறான். எங்களைப் பார்த்தவுடன் “தாத்தா, பாட்டி வாங்கோ” எனக் கூப்பிட்டான் தெரியுமா? அவனுடைய பாட்டி இப்போ அவனுடன் அதிக நேரம் இருப்பதால், அவனும் நிறையவே பேச ஆரம்பித்திருக்கிறான்” எனச் சொல்லிக் கொண்டே, அவளின் அருகில் போய் உட்கார்ந்தார். பிறகு அவளிடம் “நீ எப்போ சாப்பிட்டாய்?” எனவும் கேட்க, அவளோ ஒன்றும் சொல்லாது தலையை மட்டும் இல்லையேன அசைத்தாள். உடனே அவர் தன் மனைவியிடம், “முதலில் வந்தவளுக்கு சாப்பாடு போடு. பிறகு மற்றதையெல்லாமவிசாரிக்கலாம்” எனச் சொல்ல அவளும் வாசுகியை சாப்பிட கூட்டிக் கொண்டு போனாள். அவள் சாப்பிட்டு வந்தவுடனே அம்மா அவளிடம் விபரம் கேட்க ஆரம்பித்தாள். அப்பவும் அவளுடைய அப்பா “இப்ப அதெல்லாம் ஒன்றும் கேட்க
47
வேண்டாம். முதலில் அவள் சிறிது நேரம் தூங்கட்டும். நன்றாகத் தூங்கி எழுந்தபின், அவளுடைய மனம் சிறிது சமாதானம் அடைந்தபின், அவளாகவே நமக்குச் சொல்லுவாள்: எனச் சொல்லி, அவளைப் படுப்பதற்கு அனுப்பிவிட்டு, மனைவியிடம் “இப்போ அவள் ஏதோ ஒரு மனக் கஷ்டத்தில், இங்கு வந்திருக்கிறாள். அவளாக நம்மிடம் எதுவும் சொல்லும்போது நாம் கேட்டுக் கொள்ளலாம். இப்போ அவள் நம்முடன் இங்கு இருப்பது போதும். நீயாக அவளிடம் எதுவும் கேட்டு, அவள் மனம் கஷ்டப்படக்கூடாது.” எனச் சொல்லிவிட்டு, அவரும் தன்னுடைய வேலையைக் கவனிக்கச் சென்று விட்டார்.
தன்னுடைய அப்பா சொனபடியே, நன்றாகச் தூங்கி எழுந்த வாசுகியின் மனதும் சிறிது தெளிவடைந்தது. நல்ல வேளை நாம் மோகனின் வலையில் முழுமையாகச் சிக்க வில்லை. என்ன ஒரு முட்டாள்த்தனம். பாடுவது நமக்கு பிடித்தமான ஒன்று என்பதற்காக, நாம் எத்தனை சந்தோஷங்களை இழக்க இருந்தோம், எல்லாரும் மோகனைப் பற்றி நன்றாக அறிந்திருந்தாலும், நாமட்டும் அவனை முழுவதுமாக நம்பி இருந்தோம். இனிமேல் நாம் தனியாக இருக்கக்கூடாது.. நாளைக்கே சந்தோஷைப் போய் பார்த்துக் கூட்டிக் கொண்டு வரவேண்டும்” எனவும் நினைத்துக் கொண்டே இருந்தாள்.
அப்போது உள்ளே வந்த அம்மாவிடம் “அம்மா நான் ஏன் திடீரென்று வந்தேன் என உனக்குள் ஒரு சந்தேஹம் இருக்கா. ஆமாம் நான் இன்றுதான் நீங்கள் எல்லாரும் என்னிடம் மோகனைப் பற்றிச் சொன்னதன் உட்கருத்தை தெரிந்து கொண்டேன். இன்று அவனைப் பார்க்க நான் அவன் வீட்டிற்குச் சென்றபோது, அவன் அங்கே இன்னோரு பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்ததை கேட்டேன். அப்பத்தான் எனக்கு அவனுடைய கெட்ட எண்ணம் தெரிந்தது. நான் அவனை இன் உண்மையான நண்பன் என
48
நினைத்துத்தான், இத்தனை நாட்கள் அவன் சொன்னதையெல்லாம் என்னுடைய நன்மைக்காகவே என எண்ணியிருந்தேன். அதனால்தான் நான் எதைப்பற்றியும் யோசிக்காமல், அவன் சொன்னதை அப்படியே செய்தேன். அதனால்தான் நான் உங்களின் எல்லாருடைய மனதில் இருக்கும் கரிசனத்தையும் அவமதித்தேன். எனக்கு மோகனைத் தவிர யாருமே என்னுடைய ஆசைகளை நிறைவேற்ற உதவ மாட்டீர்கள் என தீர்மானமாக இருந்ததால்தான், உங்களுடைய எல்லா யோசனைகளையும் நான் நிராகரித்தேன். இப்பத்தான் மோகனின் அந்தரங்க எண்ணத்தைத் தெரிந்து கொண்டேன். அம்மா, என்னால் நம்பக்கூட முடியவில்லையம்மா. நானும் அவனும் சின்ன வயதிலிருந்தே பழகியவர்கள். அவனுக்கு என் மீது ஒரு தலைப் பட்சமாக அன்பு இருந்தது என்பதைக் கூட நான் இந்த நிமிஷம் வரை புரிந்து கொள்ளவில்லையம்மா. என் மனதில் யாரும் இல்லாததால்தான், நீங்கள் எனக்குத் திருமணம் செய்ய முடிவு செய்தபோதும் நான் எந்த மறுப்பும் சொல்லாமல், நீங்கள் தேர்ந்தெடுத்தவரையே மணந்தும் கொண்டேன். அவரும் என்னிடம் அன்பாகத்தான் இருந்தார். நாந்தான் பல சமயம் என்னுடைய பிடிவாதத்தால் அவரை துன்பப் படுத்தினேன். அப்பக்கூட அவர் என்னிடம் நான் செய்ய இருப்பதில் இருக்கும் கஷ்டங்களைச் சொன்னார். அப்பக்கூட நான் அவரை என் விருப்பத்தை நிறைவேற்ற மாட்டார் என நினைத்து, என் இஷடப்படியே இருந்தேன். இப்பத்தான் எனக்குப் புரிகிறது.நான் எத்தனை முட்டாளாக இருந்திருக்கிறேன் என” தன்னுள் ஒரு குற்ற உணர்வுடன் சொன்னாள். அதற்கு அவளூடைய அம்மாவும் “நல்ல வேளை நீ சீக்கிரமே மோகனைப் புரிந்து கொண்டாய். எங்களுக்கும் கூடத் தோணவில்லை அவனுக்குள் உன் மீது அப்படி ஒரு ஆசை இருக்குமென. ஒருவேளை அவன் தன்னுடைய ஆசையை முன்னமேயே உன்னிடம் சொல்லி இருந்தால், நாங்களும் அதைப்பற்றி யோசித்திருப்போம். யாருக்கு யார் என தீர்மானிப்பது
49
அவனுடைய சித்தம். நடந்ததெல்லாம் நல்லதிற்கே என எடுத்துக் கொள். இனிமேல் சென்றதைப் பற்றி யோசித்து மனம் வருந்தாமல்,
இனிமேல் என்ன செய்யனும்னு யோசித்து செய். நீ தாராளமாக உன் . வீட்டிற்குச் செல்லலாம். பார்த்திபனும் எங்களிடம் சொல்லி இருக்கிறார் உனக்கு எப்ப உன் குழந்தையுடன் இருக்கனும்னு ஆசை இருக்கோ அப்பவே நீ அங்கே வரலாம் என. உன் குழந்தை உனக்குத்தான். அவனிடமிருந்து உன்னைப் பிரிக்கும் எண்ணம் யாருக்கும் இல்லை. மாறாக, நீ எப்ப உன் குழந்தையைத் தேடி வருவாய் எனத்தான் எல்லாரும் காத்திருக்கிறேம். இப்பத்தான் உனக்கு நல்ல காலம் பிறந்திருக்கு. அதனால் நீ கவலைப் படாதே. இன்றே நாம் மூவரும் அங்கே போய் சந்தோஷைப் பார்க்கலாம். நீயும் தயாராக இரு. நானும் அப்பாவிடம் சொல்லிவிட்டு அவரையும் தயாராக இருக்கச் சொல்கிறேன். டிரைவரையும் வரச் சொல்லி போன் செய்கிறேன்: எனச் சொல்லி வெளியேச் சென்றாள். அவள் சொன்னபடியே, அடுத்த அரை மணி நேரத்தில், எல்லாரும் பார்த்திபன் வீட்டிற்குச் சென்றார்கள்.
பார்த்திபனுடன் பந்து விளையாடிக் கொண்டிருந்த சந்தோஷ், காரில் இருந்து அம்மா இறங்கி வருவதைப்பார்த்தவுடன் “அம்மா அம்மா” எனக் கத்திக் கொண்டே அவளை நோக்கி ஓடினான். தன்னைப் பார்த்தவுடன் ஓடி வந்த குழந்தையை ஆவலுடன் தூக்கிக் கொண்டு மார்போடு அனைத்துக் கொண்டாள் வாசுகி. அவளுக்கு ஒரு நிமிஷம் சந்தோஷத்தால் மனம் ஆடியது. தன்னுடைய குழந்தையின் ஸ்பரிசத்தை உணர்ந்து எத்தனை நாட்களாகி விட்டது எனவும் ஒரு ஏக்கம் மனதில் வந்தது. இத்தனை நாட்கள் பிரிந்திருந்த மகனைத் திரும்பவும் இழக்கக்கூடாது என எண்ணத்தில் அவனை மேலுக் இறுக்கிக் கட்டிக் கொண்டு உள்ளே வந்தாள். அங்கிருந்தவர்களுக்கு வாசுகியும் குழந்தையும் ஒரு சேர அனைத்துக்
50
கொண்டு ஒருவர் முகத்தில் ஒருவர் முகம் பதிததுக் கொஞ்சிய காட்சி காண்பதற்கு மிகவும் திருப்தியாக இருந்தது. வந்தவர்களை பார்த்திபனும் அவனுடைய அம்மாவும் வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார்கள். வாசுகியோ, குழந்தையுடன் தன்னுடைய அறைக்குள் சென்று விட்டாள். அதனால், அவளுடைய அப்பா அவர்களிடம் வாசுகி காலையில் வந்தபின், தெரிந்த விஷயங்களைச் சொல்லி, அவள் இனிமேல் மோகனின் மீது கண்மூடித்தனமான நம்பிக்கை வைக்க மாட்டாள். அவனுடைய கள்ளத்தனத்தை அவளும் ;புரிந்து கொண்டு விட்டாள். இதனால், பார்த்திபன் பெரிய மனசு வைத்து, திரும்பவும் வாசுகியை தன்னுடைய மனைவியாகவும், சந்தோஷின் அம்மாவாகவும் ஏற்றுக் கொள்ள வேண்டுமெனவும் வேண்டிக் கொண்டார். அதற்கு பார்த்திபனும் “நான் எப்பவும் வாசுகி இங்கு வருவதையோ, அவள் குழந்தையுடன் உரிமையாகப் பழகுவதையோ தடுக்க விரும்பவில்லை. மாறாக, அவள் தன்னுடைய உரிமைகளை அனுபவிக்க் எல்லாச் சுதந்திரமும் அவளுக்கு உண்டு. அவளாகத்தான் குழந்தையை பிரிந்து இருப்பதாகச் சொன்னாளே தவிர, நானாகப் போய் சந்தோஷை அவளிடமிருந்து பிரித்து கொண்டு வரவில்லை. சந்தோஷின் உடல் நிலை சீர் கெட்டபோது, அவனைத் தனியாக நாள் பூராவும் தன்னால் கவனிக்க இயயாது எனச் சொல்லித்தான், அவனை என்னுடன் அனுப்பினாள். நானும், அவளின் மனசுப்படியே, சந்தோஷை என்னுடன் அழைத்துக் கொண்டு வந்து விட்டேன். அப்பக்கூட அவளிடம் நான் சொல்லித்தான் வந்தேன். எ;ப்ப வேண்டுமானாலும், அவள் இந்த விட்டிற்கு வரலாம். அவள்தான் சந்தொஷின் தாயார். அந்த உரிமைக்கு எந்தவிதமான தடங்கலும் இல்லை. இது அவளுடைய வீடு: எனச் சொல்லி இருக்கிறேன். அதனால், நீங்கள் என்னிடம் இதற்காக இத்தனை வருத்தப்பட்டு கேட்க வேண்டாம். இனிமேல் நான் அவளுக்குத் தேவையானவற்றை பார்த்துக்
51
கொள்ளுவேன்” எனச் சொல்லி, அவருக்குச் சமாதானம் சொன்னான். அவனுடைய தாயாரும் அவர்களிடம் “வாசுகிக்கு ஒன்றும் தெரியாது மிகவும் வெகுளிப் பெண். என்ன சின்ன விஷயத்திற்கெல்லாம் பிடிவாதம் செய்வாள். இப்போ அவளுக்கும் புரிந்து இருக்கும். இனிமேல் அவளின் போக்கில் கட்டாயம் மாற்றம் ஏற்படும். எல்லாரையும் நம்பி விடுவாள். மிகவும் பயந்தவள்தான். நாங்கள் பார்த்துக் கொள்ளுவோம். நீங்கள் கவலைப் பட வேண்டாம்” எனவும் தைரியம் சொல்லி, அவகளின் மனதை தெளிவு படுத்தினாள். அவர்கள் கிளம்பும் போது, வாசுகியைக் கூப்பிட்டு, “வாசுகி, நாங்கள் கிளம்புகிறோம். நீ இப்ப எங்களுடன் வருகிறாயா இல்லை இங்கேயே சந்தோஷுடன் இருக்கிறாயா?” எனக் கேட்டவுடன், பார்த்திபன் அவர்களிடம் “மாமா, வாசுகி இன்று இங்கு இருக்கட்டும். நான், அவள் வரவேண்டுமென விரும்பினால், நாளை காலையில் கொண்டு வந்து விடுகிறேன்” எனச் சொல்லி, அவர்களை வழி அனுப்பி வைத்தான்.
சாயங்கால வேளையில் வாசுகி பழகியபடியே ஸ்வாமி விளக்கு ஏற்றி விட்டு, வாசல் மாடத்திற்கும் ஒரு அகல் விளக்கை ஏற்றி வைத்தாள். பிறகு தன் அத்தையுடன் இரவு உணவு தயாரிக்க உதவினாள். சந்தோஷுக்கு இரவுஏழு மணிக்கு கொஞ்சம் சாதம் பிசைந்து ஊட்டி விட்டு, அவனுடன் விளையாடினாள். அப்படியே அவனுக்கு தூக்கம் வந்தவுடன், அவனை எடுத்து தங்களுடைய படுக்கை அறைக்குள் சென்று அவனுடன் படுத்து விட்டாள். கூடத்தில் பார்த்திபனின் அம்மா அவனிடம் பேச ஆரம்பித்தாள்..
பார்த்திபா, இப்பத்தான் எனக்குச் சந்தோஷமாக இருக்கு. எங்கே அவர்கள் வாசுகியைத் தங்களுடன் வருகிறாயா எனக் கேட்டவுடன், நீயும் அவளை அனுப்பிவிடுவாயோ எனப் பயந்தேன். நல்ல வேளை, நீ அவர்களிடம் வாசுகி இங்கேயே இருக்கட்டுமெனச்
52
சொல்லிவிட்டாய். என்ன இருந்தாலும் அவள் நம்மவிட்டுக்கு வாழ வந்தவள். குற்றம் குறைகள் இருந்தாலும், நாம் தான் அநுசரித்துக் கொண்டு போகவேண்டும். சின்னப் பெண். ஆசைப்படுகிறாள். அதை தப்பென்று சொல்லுக்கூடாது.” எனச் சொன்னவளை தடை செய்து “நீ அவளுக்குச்சார்பாக பேசாதே. அவளை ஒரு தாய் எனச் சொல்ல முடியுமா? அப்படி ஒரு எண்ணம் அவளுக்குள் இருந்தால், சந்தோஷைக் கவனிக்க முடியாது, என்னுடைய ஆசைகள் தான் முக்கியம், அவனை நீ அழைத்துக் கொண்டு போ” எனக் கொஞ்சமும் அந்தக் குழந்தையிடம் பாசமில்லாது சொல்வாளா? இப்பவும் என்ன காரணத்திற்காக அவள் இங்கு வந்திருக்கிறாளென உனக்கோ, எனக்கோத் தெரியாது. நான் அவள இன்று இங்கு இருக்கச் சொன்னது சந்தோஷுக்காகத்தான். பார், அவன் அவளைப் பார்த்தவுடன் அப்படி ஒரு ஆசையுடன் தாவிப் போனானே, அப்படிபட்ட் குழந்தையைத்தான் அவள் வேண்டாமென நிராகரித்தாள் இல்லையா. அந்தக் குழந்தையின் சந்தோஷத்தைக் கெடுக்கக்கூடாதென்றுதான், அவளை இங்கே ஒரு இரவு இருக்கச் சொன்னேன். நாளை அவளே போய் விடுவாள். அவள் இங்கு வந்ததற்கும் மோகந்தான் காரணகாக இருப்பான். அவன் சொல்வதைத்தானே இவள் செய்கிறாள்” என வருத்தத்துடன் சொல்லி உள்ளே போகத் திரும்பினான். அ;ப்பவும் அவனை அம்மகூப்பிட்டாள் “உன் நினைப்பு சரியில்லை. அவள் இங்கே வந்தது சந்தோஷைப் பார்த்து, அவனுடன் இருக்கத்தான். ஏதோ ஒரு நாள் தன்னுடைய நீண்ட நாள் ஆசை நிறைவேறப்போகும் சூழ்நிலையில் சந்தோஷின் உடல் நிலை கெட்டதால், உன்னுடைய உதவியைக் கேட்டாள். அதை எப்படி தப்பாக எடுக்க முடியும். நியும்தான் ,உன் பயிற்சிக்காக வெளிநாடு போக முடிவு செய்தாய். அப்போ அந்தப் பெண் ;உன்னுடன் வந்திருந்தால், இத்தனை பிரச்சினைகளும் வந்திருக்காது. கெட்ட வேளை, அவளுடைய புத்தி
53
அன்றுசரியில்லை. மேலும் மோகனும் அவளுக்கு தப்பான யோசனைகளையே சொல்லி வந்தான். சின்ன வயதிலிருந்தே பழகியவன் நல்லவன் என்றே வாசுகி மோகனை நம்பி இருக்கிறாள். ஆனால், எப்போ அவனுக்குள் ஒரு தப்பான எண்ணம் இருந்தது எனத் தெரிந்து கொண்ட உடனேயே அவள் அவனை விட்டு வந்து விட்டாள். அவள் மனதில் கள்ளம் இல்லை. அதனால்தான், இன்று இங்கு வந்தவுடனேயே என்னிடம் தான் மோகனின் பேச்சைக் கேட்டு அதிர்ச்சி அடைந்ததையும், அதன் பிறகுதான் அவனை முழுமையாக நம்பியது மன்னிக்க முடியாத ஒன்று எனவும் புரிந்து கொண்டாள். அதனால்தான், அவனுடைய உள்ளத்தில் இருந்த திருட்டுத்தனத்தைப் புரிந்து கொண்டவுடன், இனியும் அவள் தனியாக இருப்பது சரியல்ல என உணர்ந்து உடனேயே அவளுடைய அப்பா, அம்மா விட்டிற்குப் போய் அங்கும் விஷயத்தைச் சொல்லி இருக்கிறாள். அவளுக்கு தப்பு செய்யனும்னு எண்ணம் இருந்தால், தான் மோகனைப் பற்றித் தப்பாக நினைத்துக் கொண்டு, மற்றவர்களை எல்லாம் உதறித்தள்ளியதை எண்ணி, மன வருத்தம் அடைய மாட்டாள். அவளுக்கு தான் சிறந்த ஒரு பின்னனி பாடகி ஆகவேண்டும் என்கிற ஆசைதான் இருக்கிறது. அதை அடைவதற்க்காகத்தான் இத்த்னை நாளும் மோகனின் பேச்சைக் கேட்டு அப்படியே செய்து வந்திருக்கிறாள். தன்னுடைய நியாயமான ஆசையை நிறைவேற்ற உதவிசெய்வதுபோல் நாடகமாடி, தன்னுடைய சொந்த வாழ்வில் அவன் செய்த அத்தனைக் குழப்பத்தையும் இப்போது நன்றாகப் ;புரிந்து கொண்டு விட்டாள்> இனிமேல் அவள் மோகனின் கைப்பாவையாக இருக்க மாட்டாள். அதனால், சென்றதைக் காரணம் காட்டி, இனியும் அவளை நாம் கஷ்டப்படுத்தக் கூடாது. என்னைக் கேட்டால், தப்பு முழுவதும் அவள் மேல் மட்டும் இல்லை. உன்னிடமும்தான் இருக்கு: எனச் சொன்னவளை திரும்பி பார்த்த பார்த்திபன் :என்ன அம்மா, எதோ உன் மருமகளுக்கு ஒன்று மே தெரியாது, அவள் மிகவும் நல்லவள், நான் தான் எதோ
54
செய்யக்கூடாததைச் செய்த மாதிரி என்மீதே திருப்புகிறாய். நான் என்ன செய்தேன்?: எனக் கேட்டவனை பார்த்து அவனுடைய அம்மாவும் விபரமாகவேசொல்லத் தொடங்கினாள்.
“ஆமாம். ஒரு கணவனுடைய கடமை என்ன. தன்னுடைய மனைவிக்கு தன் வாழ்வில் சம பங்கு கொடுப்பது மட்டுமல்ல. அவளுடைய தேவைகளையெல்லாம் குறைவறநிறைவேற்ற வேண்டும். அது மட்டுமல்ல, அவளுடைய மனதில் இருக்கும் ஆசைகள், ஏக்கங்கள் எல்லாவற்றையும் புரிந்து கொள்ள வேண்டும். உன்னுடைய மணமான நாளிலிருந்து, ஒரு நாளாவது நீ அவளிடம் உன்னுடைய ஆசைகள் என்ன? உன் சின்ன வயதில் நீ ஆசைப்பட்டது எல்லாம் உனக்குக் கிடைத்திருக்கா? எந்த விதமான வாழ்க்கை உனக்கு வேண்டுமென நீ எதிர்பார்த்தாய்? என எப்பாவாவது அவளீடம் நீ கேட்டதுண்டா. மாறாக, உன்னுடைய ஆசைகள், உன்னுடைய எதிர்பார்ப்புக்கள் என உனக்குத் தேவையான எல்லாவற்றையும் அவளிடமிருந்து நீ பெற்றுக் கொண்டாய். ஒரு முறையாவது அவளுக்காக நீ முழு மனதுடன் விட்டுக் கொடுத்திருக்கிறாயா? என்ன, அவளுடைய பிடிவாதம் பிடிக்காது, நீ கண்டு கொள்ளாமல் போய் விடுவாய். அது சரியா? அவளின் விருப்பங்களில் எதெது உனக்கு பிடிக்கவில்லை எனவாவது நீ யோசித்துப் பார்த்திருப்பாயா இல்லையே. உனக்கும் தெரிந்ததுதானே அவள் சின்ன வயதில், பள்ளியில், காலேஜில் எல்லா கலை நிகழ்ச்சிகளீலும் பங்கேற்றூ பரிசுகள் பெற்று வந்திருக்கிறாள் என. அவளின் ஆசை ஒன்றும் முறையற்றதல்லவே. அவளுக்கு இயற்கையாகவே நல்ல குரல் வளம், ஞானம் இருக்கு. சங்கீதத்தில் அவளுக்கு மாளாத ஆசையும் இருக்கு. திருமணமானபின், ஒரு நாளாவது அவளைப்பாடச் சொல்லிக் கேட்டு ஆனந்தப்பட்டாயா? இல்லையே, நீ என்ன சங்கீதம் பிடிக்காதவனா? நீயும்தான் சின்ன வயதில் விசல் அடித்துக் கொண்டே, எதாவது பாடிக்கொண்டிருப்பாய் அல்லவா? அப்படியே நீயும் அவளுடன்
55
சேர்ந்து அவள் விரும்பும் பாட்டுக்களை விசில் அடித்து பாடிக் காண்பித்தாயா அல்லது அளைப் பாடச் சொல்லி, கேட்டு மகிழ்ந்தாயா? தன்னுடைய ஆசையான பாடுவதைக் கூட உனக்காக, மறைத்து மறந்திருக்கிறாள். நம் வீட்டு விசேஷத்திற்கு வந்தவன், அவளிடம் மறைந்திருந்த ஆசையைத் தூண்டிவிட்டான். அவளும் அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, தானும் தன்னுடைய திறமையை வெளி உலகுக்குக் காட்ட விரும்பினாள். அது ஒன்றும் தப்பானது அல்ல. அவளுடைய ஆசைகள் திரும்பவும் அவளிடம் துளிர் விட்டபோதாவது, நீ அவளுக்கு அநுசரனையாக இருந்திருந்தால், அவள் ஏன் உன்னைவிட்டு மோகனின் துனையை நாடி போவாள். அவளுக்குத் தேவை பட்டபோது, நீ உன் உதவிக்கரத்தை நீட்டவில்லை. மாறாக, மோகன் நீட்டினான். அதை அவள் பற்றிக் கொண்டாள். தான் பற்றிக் கொண்டது உண்மையான உதவும் கரங்கள் இல்லை என்பதை, எந்த நிமிஷம் உணர்ந்தாலோ, அந்த நொடியிலேயே அவனையும், அவனுடைய உதவிகளையும் உதறி விட்டு வந்து விட்டாள். இப்போ, பாவம் பாதிக் கிணறு தாண்டியவள் போல், தன்னுடைய சின்ன வயதுக் கனவுகள் கூடி வரும்போது, மேலும் அந்தப் பாதையில் போக முடியாது தவித்துக் கொண்டிருக்கிறாள். அதை நீ புரிந்து கொள். அவளின் மனதில் இருக்கும் ஏக்கத்திப் போக்கப் பார்.” எனச் சொன்னவளை மறித்து :என்னா, என்னை அவளுக்கு பாடுவதற்கு ஏற்றபடி தம்பூரா மீட்டிக் கொண்டு, அவளுடனேயே போகச் சொல்கிறாயா? எனக் கோபத்துடனும், ஏளனத்துடனும் கேட்டான். அதற்கும் அம்மா அசரவில்லை.
“ஏன், அப்படிப் போனால்தான என்ன தப்பு. ஒரு சதாசிவம் தூண்டிவிடவில்லை என்றால், இப்போ எத்தனைபேர் எம். எஸ் என்ற பெயரை தெரிந்திருப்பார்கள். அவருடைய மாற்றுக் குறையாத அன்பினால் தானே அந்த இசைஅரசியின் திறமை உலகெங்கும் பரவி, இன்றும் இந்த பூவுலகில் வீசும் காற்றில் அவருடைய இனிய
56
நாதம் கலந்து வீசக்கொண்டிருக்குமா? ஒவ்வோரு ஆணின் வெற்றிக்குப் பின் ஒரு பெண் இருப்பாள் என்பது எத்தனை உண்மையோ, அத்தனை உண்மையானது ஒவ்வோரு பெண்ணின் திறமைக்கும், புகழுக்கும் பின்னால் அவளுடைய கணவர் இருப்பது. உன்னுடன் வாழ்வில் பங்கேற்று வாழ வந்தவளுக்கு எல்லா விஷயத்திலும் மாறாமல் அன்பும் பரிவும் பாசமும் காட்டுபவந்தான் உண்மையான கணவன். மற்றவர்கள் எல்லாம், சந்தர்ப்பவாதிகள்தான். உன்னால் ஏன் அப்படி ஒரு சதாசிவம் மாதிரி இருக்க முடியாதா? உன் மனம் சிறிது இடம் கொடுத்து, வாசுகியின் திறமையையும், அவளின் தளரா உழைப்பையும் நீ புரிந்து கொண்டு, முன்வந்து, அவளுக்கு உதவியாக இருந்தால், அவளும் ஒரு புகழ் மிக்க திறமையான இசைஅரசியாக வளருவாள். நம் மனம்தான் காரணம். ஏற்றுக் கொள்ள வேண்டுமென நீ நினைத்தால், எதுவுமே தப்பாகாது. மாறாக, உங்களிருவருக்குள் ஒரு புரிதலும், விட்டுக் கொடுத்தலும் வரவேண்டும். நீ அவளை மட்டும் குற்றம் சொல்லாது, ஒரு நிமிஷம் நான் சொன்னதை யோசித்துப் பார். இன்று எம். எஸ் எனப் புகழ்பவர்கள் எல்லாரும் தங்களின் மனதிற்குள் அந்த இசை அரசியை வெளி உலகத்திற்குக் காட்டிய, ஒளி விளக்கு எனத்தான் சதாசிவத்தை பற்றி பெருமையாக நினைப்பார்கள். உன் மனைவியின் வாழ்வும், தாழ்வும் உன் கையில்தான். புரிந்து போ. கடைசியாக ஒன்றும் சொல்லி விடுகிறேன். அன்று என்னிடம் சொன்னாய், அவளின் தாய்மையை மதிக்கிறேன். அதனால், அவள்தான் எப்பவும் சந்தோஷின் தாய். அந்த உரிமையை நான் தடுக்க மாட்டேன், மறுக்கவும் மாட்டேன் என்றாய். ஒரு மணைவிதான் தாயாக முடியும். அதை நீ சுலபமாக மறந்து அன்று கோபத்தில் பேசினாய். இன்று சொல்கிறேன் கேட்டுக் கொள்.
56
உன்னால்தான் அவள் தாயானாள். அதனால், முதலில் அவள் உன் மணைவி. அடுத்துதான் அவள் சந்தோஷின் அம்மா. முதல் உரியையை மறுத்து விட்டு, இரண்டாம் உரிமை கொடுப்பது, அதைப் பற்றிப் பெசுவதும் முட்டாள்த்தனம். வேண்டாம். அந்த எண்ணம். நீ அவள் உன்னைத் திருமணம் செய்து வந்த அன்று உனக்கு அவள் மீது எத்தனை ஆசையும், பாசமும், காதலும் இருந்ததோ, அதில் ஒரு கடுகுமுனைகூட குறையாமல், இன்றும் உனக்கு அவள் மீது இருக்கவேண்டும். உன்னை நம்பி வந்தவள். அவளின் நம்பிக்கையை சிதைத்து விடாதே. சென்றவைகளை கெட்ட கனவாக நினைத்து மறந்து விடு. அவளை முழு மனதுடன் மன்னித்து, ஏற்றுக் கொள். இன்று முதல், மீண்டும் உங்களின் வாழ்க்கைத் தொடங்கட்டும். கணவன் என்கிற உன்னுடைய உரிமைகளை நீ எப்பவும் இழக்கக்கூடாது. உன்னுடைய கடமைகளையும் மறந்து விட்டாதே. உன்னால் முடிந்தால், அவளின் ஆசைகளை ;பூர்த்திசெய்ய முயற்சி செய். அவளின் மனம் நோக இனிமேல் எதுவும் பேசாதே. அவளும் உன்னை நன்றாகப் புரிந்து கொண்டீருக்கிறாள். இனிமேல், நீ புத்தம்புதிய வாசுகியைதான் பார்க்கப் போகிறாய். புதியவனாக, நல்லவனாக போ” எனச் சொல்லி அவனையும் உள்ளே அனுப்பி விட்டு, அவளும் படுத்துக் கொண்டாள்.
தாயுடன் பேசிவிட்டு பார்த்திபனும் தன்னுடைய படுக்கை அறைக்குச் சென்றான். படுக்கை அறையின் பக்கத்தில் இருந்த மொட்டை மாடிக்குச் சென்றான். அங்கிருந்த ஒரு சின்ன சோபாவில் அமர்ந்து, வானத்தில் ஒளி வீசிக் கொண்டிருந்த முழு நிலவையும் பார்த்துக் கொண்டிருந்தான். அவனின் மனதில் அம்மாவின் சொற்கள் நிணைவோடிக் கொண்டிருந்தன. தன்னுடைய தாயார்தான் எத்தனை பரந்த நோக்கங்களுடன் உலகைப் பார்க்கிறான். அவள் மனதில் எந்த விஷயமுமே தவறாகப் பட வில்லையே. ஒரு வேளை நாம் தான் சில மூட பழக்கத்திற்கு
57
ஆளாகி, பழைய வரட்டுக் கவுரவத்தை பிடித்துக் கொண்டிருக்கிறோமோ? அம்மாவின் கோணத்தில் பார்த்தால், வாசுகி செய்தது ஒன்றும் பெரிய குற்றமல்ல. அவளுடைய சுய ஆசைகளைத்தான் நிறைவேற்ற விரும்பினாள். ஒரு வேளை நாம் மட்டும் அவளின் ஆசைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவளின் மனதில் இருந்த சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றி வந்திருந்தால், அவளும் நம்மிடம் தன் மனதை திறந்து தன்னுடைய பள்ளிக் கனவுகளைச் சொல்லி இருப்பாளோ. நாம் தான் அத்தகைய எண்ணத்திற்கு ஒரு நாளும் இடம் அளிக்க வில்லையே. நம்மிடமும்தான் குற்றம் இருந்திருக்கு. பாவம், இப்போ, வாசுகி மிகவும் மனம் நொந்துதான் வந்திருக்கிறாள். இனிமேல் நாம் அவளிடம் சென்றதைப் பற்றிப் பேசி, அவளின் மனதை துன்புறுத்த வேண்டாம். மாறாக, அவளின் மனதில் இருக்கும், குற்ற உணர்ச்சிகளை மாற்ற வேண்டும். இத்தனை நாட்கள் நம்முடன் வாழ்ந்திருப்பவள், ஒரு முறைகூட தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்றாமல் இல்லை. எனக்குத் தேவையானதெல்லாம் முழு மனசுடன் எனக்குக் கொடுத்திருக்கிறாள். அம்மா சொன்னது போல், நான் மட்டும் கணவன் என்கிற ஒரு அதிகாரத்தை அவளிடம் காட்டாது இருந்திருந்தால், அவளும் என்னை நம்பி தன்னுடைய ஆசைகளை வெளியிட்டு, அதனை நிறைவேற என் துனையை நாடி இருப்பாள். என்னுடைய உதவிக் கரம் அவளுக்குக் கிடைக்காத காரணத்தால்தான், அவள் தன்னுடைய பள்ளிச் சினேகிதனை நம்பினாள். அதில் என்னுடைய குற்றமும் உண்டு. இனிமேல், நாம்தான் பழையபடியே அவளுடைய அன்புக்கும், நம்பிக்கைக்கும் பாத்திரமாக வேண்டும். இனிமேல், அம்மாவின் விருப்பப்படியே, எங்களுடைய வாழ்க்கையும் சந்தோஷுடன் ஆனந்தமாக இருக்க வேண்டும். இனி இது ஒன்றுதான் என்னுடைய நோக்கமாக இருக்கும்: என தன் மனதிற்குள் தீர்மானித்துக் கொண்டு, உள்ளேப் போகத் திரும்பினான்.
57
திரும்பியவனின் கண்களில் வாசுகி பட்டாள். அவள் அவனை நோக்கி வரவும் செய்தாள். தலையைக் குனிந்தபடியே வந்தவள், அவனருகில் வந்தவுடன், தரையில் உட்கார்ந்து, அவனுடைய இரு பாதங்களையும் பற்றிக் கொண்டு, தன்னுடைய துக்கத்தை அடக்க முடியாமல், விம்மிக் கொண்டே “என்னை மன்னித்து விடுங்கள், சாதாரணமாக நான் செய்த ஒரு செயல் எத்த்னை தூரம் என்னுடைய வாழ்க்கையைச் சிதைக்க இருந்தது என்பதை நான் இப்பத்தான் புரிந்து கொண்டேன். நீங்கள் எல்லாரும் என்னிடம் மோகனைப் பற்றிச் குறித்துச் சொன்னபோதெல்லாம், என்னுடைய ஆசைகளை நான் அடையக் கூடாதெங்கிற ஒரு கெட்ட எண்ணத்தால்தான், நீங்கள் எல்லாருமே எனக்கு எதிராக இருந்து, எனக்கு ஒரே உதவியாக இருந்தவனைப் பற்றித் தப்பாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்களென்றுதான் நான் இத்தனை நாட்களும் இருந்தேன். நேற்றுக் காலையில் நான் மோகனைப் பார்க்க அவன் வீட்டிற்குப் போனப்பதான், அவன் இன்னோரு பெண்ணிடம் என்னைப் பற்றி பேசியதையும், அதிருலிருந்து அவனுக்கு என் மீது இருந்த ஒரு வர்மமத்தையும் தெரிந்து கொண்டேன். முதலில் என்னால் நம்பவே முடியவில்லை. சின்ன வயதிலிருந்து ஒரு நல்ல நண்பனாக தான் அவனை நான் நினைத்துப் பழகி வந்தேன். அதனால், அவனுக்குள் என் மீது ஒரு தப்பான ஆசையை வைத்துக் கொண்டிருந்தான் என்பதையும், அதை நிராசையானதான், என்னுடைய வாழ்க்கையை சீர்குலைக்க அவன் ஒரு வர்மத்துடன், சந்தர்ப்பத்திற்காக காத்த்ருந்தது தெரியாமல், நானே அவனுக்கு அத்தகைய ஒரு சந்தர்ப்பத்தையும் அளித்து விட்டது தெரிந்தவுடன், நான் துடித்தது அந்தப் பகவானுக்குத்தான் தெரியும். உடனேயே, நான் அவனுடைய வீட்டை விட்டு வெளியே வந்து என்னுடைய பெற்றோரைத்தேடி சென்றேன். அங்கு என் அம்மாவிடம் என்னுடைய எல்லாத் தப்புக்களையும் சொல்லி, அவர்களின் மன்னிப்பை வேண்டினேன். பிறகு, இனியும் நான் உங்களை விட்டுத்
58
தனியாக இருப்பது முறையல்ல எனப் ;புரிந்து கொண்டு, என்னுடைய அம்மா, அ;ப்பாவுடன் இங்கு வந்தேன். வரும்போதே பயத்துடன் தான் வந்தேன். ஏற்கெனவே நீங்கள் தீர்மானமாகச் சொல்லி இருக்கிறீர்கள். என்னை சந்தோஷின் அம்மாவாகத்தான் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என்றும், உங்களுடைய மனைவியாக நீங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள் என்வும். எனக்கும் உங்களுடைய மனைவி என்கிற உரிமையுடன் இங்கு வர தகுதியும் இல்லை. நான் தான் உங்களை விட்டுப் பிரிந்து போனேன். உங்களுடன் நீங்கள் கானடா கூப்பிட்ட ;போதே, நான் வந்திருக்கனும். அப்ப என் புத்தி என் வசத்தில் இல்லை. எல்லாம் அந்தக் கெட்ட புத்திக்காரன் சொல்வதை வேதவாக்காக நினைத்துக் கொண்டிருந்தேன். இப்பக்கூட நான் உங்களிடம் எந்த விதமான உரிமையையும் கேட்க முடியாது. குற்றம் செய்தவள் தான். என்னால் உங்களிடம் ஒரே ஒரு சொல் “என்னை மன்னித்து விட்டேன்” எனச் சொல் கேட்டால் போதும். வாழ்நாள் பூராவும், உங்களுக்குப் பணிவிடை செய்து கொண்டு, உங்களின் அம்மாவின் அன்பாலும், சந்தோஷின் கருனையாலும் நான் இங்கேயே இருந்து விடுகிறேன். இந்த வீட்டில் மட்டும் எனக்கு இடம் கொடுங்கள். உங்கள் உள்ளத்தில் இடம் கேட்கும் தகுதியையும் நான் இழந்து விட்டேன். ஏதோ ஒரு கானல் நீருக்காக, என் வாழ்வையே இழந்து நிற்கிறேன். இந்த அபலையை ஏற்றுக் கொள்ளுங்கள்” எனத் துன்பத்துடனும், விம்மலுடனும் சொல்லி, அவனின் பாதங்களில் தலையை வைத்துக் கொண்டவன் மயங்கி விட்டாள்.
வாசுகியின் துன்பமான வார்த்தைகளைக் கேட்டவனின் மனமும் துக்கத்தால் துடித்தது. தன் காலில் விழுந்து மயங்கியவளைத் தன்னுடன் சேர்த்து அனைத்துக் தூக்கிக் கொண்டு, படுக்கைக்குச் சென்று, அதில் அவளை படுக்க வைத்தான். அங்கிருந்த தண்ணீரை அவள் முகத்தில் தெளித்து, அவளைத்
59
தெளிய வைத்தான். தன் கண்களை விழித்தவளை அன்புடன் அனைத்துக் கொண்டு, “கண்ணம்மா, நீ கலங்காதே. நீ மட்டும் குற்றம் செய்தவள் இல்லை. நானும் அந்தக் குற்றத்திற்கு துனையாகத்தான் இருந்தேன். நான் ஒரு முட்டாள்தான், என் மனைவியின் ஆசைகளைக் கேட்டறியாத ஒரு கணவன். நான் உன்னுடைய விருப்பத்திற்கு தூண்டு கோலாக இல்லாததால்தான், நீ உன்னுடைய பள்ளிக் காலத்திலிருந்தே பழகிய சினேகிதனைத் துனை கொண்டாய். அப்பவாவது, நான் என்னை மாற்றிக் கொண்டிருக்க வேண்டும். வரட்டுக் கௌரவம். என் பேச்சைக் கேட்காத மனைவி எப்படிப் போனால் எனக்கென்ன என இறுமாப்புடன் இருந்து விட்டேன். விளைவு, நம்மிருவருக்கும் இடையே பிரிவு. நம்முடைய பெற்றோர்களுக்குள் ஒரு வேதனை. குழந்தையின் உடல் நிலையில் சீர்குறைவு. எல்லாம் ஒரு கெட்ட சூறாவளியாக நமக்குள் வீசி விட்டது. இப்போ வானமும் தெளிவாகி சூறாவளி போய், இதமான காற்றும், முழு மதியும் வெளி வந்து விட்டது. நம் வாழ்விலும், இனி தேனும், பாலும் நிரம்பி ஓடும். நமக்கு இனி வரும் நாளெல்லாம் இன்பங்கள்தான். கண்ணைத் துடைத்துக் கொள்.” எனப் பரிவுடன் அவளுக்குச் சமாதானம் சொல்லி, அவளை அனைத்துக் கொண்டே தானும் படுத்தான். கட்டிலில் இருந்த சந்தோஷை எடுத்து, வாசுகிக்கும்சுவற்றுக்கும் இடையில் விட்டு விட்டு, வாசுகியைத் தன்னுடன் அனைத்துக் கொண்டடு படுத்தான்..
தன்னை அனைத்துக் கொண்டு படுத்திருந்தவனிடம் வாசுகி மெதுவாகக் கேட்டாள் “என்னைப் பிரிந்து இருக்கும்போது சந்தோஷ் உங்களுக்குத் தொல்லைக் கொடுத்தானா?என்னைத் தேடினானா?” என். அதற்கு பார்த்திபனும், பகலில் அவன் அம்மாவுடன் இருந்து விடுவதால் அதிகம் கஷ்டமில்லை. விளையாட்டும், தூக்கமுமாக நேரம் சென்று விடும். இரவில் அவனை நான் என்னுடன் தான் படுக்க வைத்துக்கொள்வேன்.
..60..
அப்போதான் அவனுக்கு உன்னுடைய தேவைப்படும். சுற்றிச் சுற்றிப் பார்ப்பான், பிறகு கண்களில் ஏக்கத்துடன் என்னை அனைத்துக் கொண்டு படுத்துக் கொள்வான். அப்போதும் அவனுடைய கண்களில் நீர்வழியும். நானும் அவனை அனைத்துக் கொண்டு, சமாதானம் படுத்துவேன். அப்போ அவன் என்ன செய்வான் தெரியுமா?” எனக் கேட்டுவிட்டுச் சிரித்தான். அதற்குக் காரணம் புரியாமல், வாசுகி அவனுடைய முகத்தையேப் பார்த்துக் கொண்டிருந்தாள். பிறகு கேட்டாள் “எதற்குச் சிரிக்கிறீர்கள்” என. அப்போ அவன் மெதுவாகச் சொன்னான் “நான் மற்ற போதெல்லாம் அவனுக்கு அப்பாவாக இருந்தாலும், இரவில் அவனுடைய தேவைக்கு அம்மாவாக மாறுவேன். உண்மையிலேயே தாய்மையின் சுகமும், மகிழ்வும் எனக்கு அப்போதான் தெரிந்தது. அவன் மட்டுமல்ல, நானும் உன்னை நினைத்து ஏங்கித்தான் இருந்தேன். அவனுக்கு அம்மாவாக மாறி, என்னுடைய ஏக்கத்தையும் தீர்த்துக் கொள்வேன். அவனையும் மெதுவாகத் தூங்கப் பண்ணுவேன்” எனச் சொல்லி சிரித்தான். அப்படியும் அவனின் சிரிப்புக்குக் காரணம் புரியாமல் திரும்பவும் “எனக்குப் புரியும்படியாகத்தான் சொன்னால் என்ன. பூடகமாகச் சொன்னால் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை” எனஏக்கத்துடன் சொன்னவளைத் தன்னுடன் இறுக்கிக் கொண்டு, அவளுடைய காதில் சந்தோஷை திருப்தி படுத்தியது எப்படி எனச் சொல்லவும், அதைக் கேட்டு வாசுகியும் தாங்கமுடியாமல் சிரித்து விட்டாள்.
தன்னை அனைத்துக் கொண்டு படுத்தவனிடம் “நீங்கள் என்னை மன்னித்து விட்டீர்களா?”எனக் குழந்தையைப் போல் கேட்டவளை நோக்கி, “:அசடே, இப்ப நாம் இருவரும் ஒருவரையோருவர் அனைத்துக் கொண்டிருப்பதில் இருந்தே, அது உனக்குப் புரியவில்லை. வாய் விட்டுச் சொல்ல வேண்டுமா” எனக் கேட்டுக் கொண்டே, அவளுடைய காதில் இரகசியமாகச் சொன்னான். அதைக் கேட்டவள் வெட்கத்துடன் அவனைப் பார்த்துச் சிரித்தாள்.
60
சிரித்தவளின் கண்களில், வானில் பவனி வந்த நிலவு ஒளிவிட்டது.. அதைப் பார்த்து பார்த்திபன் மனம் விட்டுச் சிரித்தான். அவர்களின் சிரிப்புச் சத்தத்தைக் கேட்ட, சந்தோஷின் பாட்டியும் மனம் நிறைந்து சிரித்தாள் தனக்குள். உலகத்தில் எல்லா உறவுகளுக்குள் ஒரு நாள் பிரிவு வரும். ஆனால், தாம்பத்தியத்திற்கும், தாய்மைக்கும் என்றுமே பிரிவு கூடாது. எனவும் அவளின் மனமும் சொல்லியது..
இன்ப உறவுகள் தொடர்ந்தன.