கரிகாலனின் முடிவு
(மூலக் கதை – திரு. சாண்டில்யனின் சரித்திர நவீனம்
“மன்னன் மகள்”.
*************************
(இந்த சிறு கதையை உருவாக்க அடிப்படையான மூலக் கதையும், நான் என் சிந்தனைக்கு உரமாக எடுத்துக் கொண்ட சரித்திரக் கதா பாத்திரங்களின் பின்னனியைப் பற்றிய என்னுடைய முன்னடக்கம்.
சரித்திர காவியங்களை உருவாக்குவதில் ஈடு இணையற்ற மாமேதை அறிஞர் திருவாளர் சாண்டில்யனின் சரித்திரப் புகழ் பெற்ற நவீனமான “மன்னன் மகள்” என்ற காவியத்தின் முக்கியக் கதா பாத்திரமான “கரிகாலன்” என்ற ஒரு வீரனின் வாழ்வில் நடந்ததாக சித்தரிக்கப்பட்ட சில நிகழ்ச்கிகளின் தாக்கத்தால் என் சிரிய சிந்தனையில் பூத்த ஒரு சிறு மொட்டுத்தான் என்னுடைய இந்தக் கதையின் கரு. மாமேதையின் சிந்தனைக் கடலில் மூழ்கியதால் என்னுள் எழுந்த ஒரு சலனமே என்னை எழுதத் தூண்டியது. இதன் மூலம் எந்த வகையிலும் மூலக்கதை ஆசிரியருக்கும், அவரின் படைப்புகளுக்கும் கடுகளவுக்கூட அவமரியாதை செய்யும் எண்ணம் எனக்கு இல்லை. சொல்லப்போனால் என் மானசீக தமிழ் ஆசானே திரு. சாண்டியன் என்ற பெருந்தகைதான். எப்போழுதும் அவரின் நினைவுகளும், அவரின் சரித்திர நவீனங்களும் என் வணக்கத்திற்குரியவைகளாகும்.)
****************************
காஞ்சிமாநகரத்தில் உள்ள பல்லவச் சோழ அரச மாளிகையில் சந்தியா வேளையில் அங்கிருந்த நந்தவனத்தில் உலாவிக் கொண்டிருந்த கரிகாலனின் மனதில் யாதொருவிதமான சந்தோஷமோ குதூகலமோயில்லை. எந்த ஒரு உண்மையைத் தேடி வந்தானோ அந்தத் தன் பிறப்பின் மூலத்தை அறிந்த பின்பும் அவன் மனம் மீளாத துன்பத்திலேயே மூழ்கிக் கிடந்தது. அந்த ஒரு இரகசியத்தைத் தான் அறிய எடுத்துக்கொண்ட முயற்சிகள், அதை அறிய தான் செய்த பிரதிக்னை எல்லாம் அவன் நினைவில் சுற்றிச்சுற்றி வந்தவண்ணம் இருந்தன. தன்னை ஐந்து வயதில் பிரிந்த தன் அம்மாவைத் தான் இருபத்திரண்டு ஆண்டுகளுக்குப் பின் பார்த்தச் சூழ்நிலையும், அந்த சமயத்தில், தன் பிறப்பின் உண்மையை தனக்குச் சொல்லத் தன் தாய் இட்ட நிபந்தனையும், அத்தகைய நிபந்தனைகளுக்கு தான் கட்டுப்படவேண்டிய கட்டாயத்தையும் எண்ணிப் பார்த்த கரிகாலனுக்கு தன் வாழ்வில் மீளாத் துன்பத்தைத் தவிர வேரெதிற்கும் இடமில்லை என்ற உண்மை தெரிந்தது. அதே சமயம் காலையில் சோழ மன்னர் இராஜேந்திரனின் சொந்த முத்தாணி மண்டபத்தில் மன்னர் தன்னுடைய தாயாரிடம் தன் பிறப்பின் மூலத்தையும், தன் தகப்பனார் யாரென்றறிய செய்த முயற்சிகளையும், அந்த மாமேதையின் அத்தனை அஸ்திரங்களையும், தன் தாயார் மிக மென்மையாகவே ஆணித்தரமாக உடைத்துவிட்டதையும் எண்ணிப் பார்த்தான். தன் பிறப்பின் இரகசியத்தைத் தன் அம்மா அத்தனை தீவிரமாகக் காப்பாற்றும் காரணமும் அவனுக்குத் தெள்ளத் தெளிவாகப் புரிந்தது. சாகும் தருணத்தில் தன் தந்தையாருக்குச் செய்து கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றத் தன் வாழ்நாள் முழுவதும் எத்தனை சோதனைகள் வந்தபோதிலும் மனம் கலங்காத அந்தக் கற்புக்கரசியின் மன உறுதிதான் இதற்குக் காரணம் என்பதையும் அவனுக்குத் தெளிவாக விளங்கியது. தன்னுடைய தாயும், தந்தையும் இந்த சோழ சாம்ராஜ்ஜியத்தை உறுதியாக, ஆலவிருட்சமாக ஸ்தாபிக்கச் செய்வதற்காகத் தங்களின் ஜீவாதாரமான சகல உரிமைகளையும் உலகத்தின் கண்களுக்குத் தெரியப் படுத்தாமல், ஒரு இருண்ட உலகத்தில் வாழ்ந்து வந்த தியாகத்தைக்கூட வெளியே சொல்லாமல் வாழும் திடத்தையும் புரிந்து கொண்டான். அந்தத் தியாகச் செல்வர்களின் மகனான தானும் இனி எக் காலத்திலும் தன் பிறப்பின் இரகசியத்தை சொல்லாது மறைந்து வாழ்வதுதான் தன்னைப் பெற்றவர்களுக்குச் செய்யும் அஞ்சலியாகும் என்ற பிரதிக்கனையும் தனக்குள் செய்து கொண்டான். இந்த உறுதி ஏற்பட்டவுடன் அவன் மனமும் சலனமின்றி நிதானமடைந்தது.
மனதில் சிந்தனை தெளிவு பெற்றவுடன், புத்தமடத்தில் தன்னை வளர்த்து, உலக வாழ்வில் உண்மையைப் புரிய வைத்த மடாலயத் தந்தையின் அன்பு முகமும், அவரின் பரிவான அறிவுரைகளும் அவனை உறுதிப்படுத்தியது. தான் இனி செய்ய வேண்டியது என்ன. எப்படிச் செய்வது என்றும் தனக்குள் முடிவு செய்து கொண்டான். அப்போது அவன் கண்களில் தன் தாயைத் தவிர இன்னுமிரு மாதர்களின் எழில் உருவங்கள் நடனமாடத் தொடங்கியது.
ஒன்று தான் புத்த மடத்தை விட்டு வெளியுலகில் நுழைந்து முதல் முதலாகப் பார்த்துத் தன் மனதைப் பரிகொடுத்த வேங்கி நாட்டு மன்னன் விமலாதித்தன் மகள் நிரஞ்சனாதேவி. மற்றவள் தன் மன சிம்மாசனத்தில் எனக்கு இடமளித்த சோழ பிரதான படைத் தலபதியாகிய அரையன் இராஜராஜனின் மகள் செங்கமலச் செல்வி.. ஆனால் தானோ அவளின் தந்தைக்கு வளர்ப்புப் பிள்ளை. தான், தன் பெற்றோர் யாரேன அறியாத காலமுதல் தன் வாழ்வில் ஒவ்வோரு நாளும் தன்னுடைய வளர்ச்சியிலும், புத்த மடத்தில் தான் கல்விகற்று, சிறந்த “தர்க்கசாஸ்திரியாக” உருவாகவும், கல்வி கேள்விகளில் மட்டுமல்லாது வீரர்களுக்கான போர்ப் பயிற்சிகளிலும் வல்லவனாக்கியவரும், தனக்கு இன்று சோழ படைப் பிரிவில் ஒரு அங்கீகாரம் தந்தவருமான தனது சுவீகாரத் தந்தையின் அன்பு மகள் தனக்கு சகோதரியாவாள். ஊரார் கண்களுக்கு மட்டுமல்ல, உலக நீதிக்கும் தான் சோழப் படைத்தலைவரின் மகளுக்கு சகோதரந்தான்.. இந்த உறவை அவள் மனதில் புரியவைப்பதும் தன்னுடைய கடமை என்றும் உறுதி கொண்டான்.
செங்கமலச்செல்விக்கு தான் செய்ய வேண்டிய கடமை என்னவென்றும் தீர்மானித்தவன் அடுத்து தான் வேங்கிநாட்டு மன்னன் மகள் நிரஞ்சனாதேவியின் மீது தான் கொண்டப் பற்றுதலையும் துறக்கவேண்டும் என முடிவும் செய்து கொண்டான். இந்த இரண்டு தீர்மானங்ககளும் அவன் மனதை திடமாக்கிவிட்டது. அதனால் இனி தான் தன் இரு முடிவுகளையும் செயல்படுத்த, என்ன செய்வது, யார்மூலம் செயல்படுத்துவது என்ற திட்டங்களையும் தன் மனதில் உறுதிபடுத்திக் கொண்டான். உடனேயே தன் எண்ணங்களையும் ஒரு ஓலையில் வரைந்தான். பிறகு இரவு இரண்டு ஜாமங்கள் முடிந்த நிலையில் உறங்கப் போனான்.
அறைக்குள் இருந்த விளக்கின் திரியை உள்ளே இழுத்து அதன் ஓளியைக் குறைத்துவிட்டுப், படுப்பதற்காகத் தன் பஞ்சனையை நெருங்கியவன் கதவருகில் ஆடிய நிழலைப் பார்த்து, வந்திருப்பது யாராயிருக்கும் என்றும் அறியத் திரும்பினான். அங்கு தெரிந்த நெடிய உருவத்தைப் பார்த்தவுடன் தன்னைத் தேடி வந்திருப்பவர் யாரேன்று உணர்ந்தவன் உடனே செயல்படத் துவங்கினான். வந்திருப்பவர் மன்னரென்று அறிந்தவுடன், தன் தலையைப் பணிவோடு தாழ்த்தி நின்றான். மன்னரும் சிரித்துக்கொண்டே “கரிகாலா என் வரவு உனக்கு அதிர்ச்சி தருகிறதா. உன்னுடன் நான் சில விஷயங்கள் பேசவேண்டியே இந்த இரவு வேளையில் உன்னைத்தேடி வந்தேன் .நீ இப்போது என்னுடன் வர முடியுமா? எனக் கேட்ட மன்னருக்கு, பணிவாகப் பதில் சொன்னான் கரிகாலன். “நான் என்றும் மன்னருக்கு அடிமைதான். தங்கள் உத்திரவுக்குக் கட்டுப் பட்டவந்தான்.” அதைக் கேட்டுச் சிரித்தபடியே “அப்படியானால், நீ இப்போழுதே என்னுடன் வா” எனக்கூறி அவன் கைகளைப் பற்றிக்கொண்டு தன்னுடைய அந்தப்புர அறைக்குச் சென்றார்.
தன் அந்தப்புரத்திற்குச் செல்லுமுன் வாயிலில் நின்ற காவலனிடம் “நான் சற்று நேரம் இவருடன் தனியாக இருக்க விரும்புகிறேன். அதனால் யார் வந்தாலும் நான் உறங்கிவிட்டதாகச் சொல்லிவிடு. யாரையும் அறைக்குள் அனுமதிக்க வேண்டாம் தொந்திரவு படுத்தக்கூடாது” எனக் கூறி விட்டு கரிகாலனுடன் அறைக்குள் வந்து கதவைச் சாத்தி தாழ்போட்டார்.. மன்னனின் போக்குக்கு காரணம் புரியாது அவனைத் தொடர்ந்து வந்தான் கரிகாலன். தன் எதிரில் பணிவோடு நின்றவனைப் பிடித்துத் தன் அருகில் பஞ்சனையில் அமர்த்திக் கொண்டார்.. சிரிது நேரம் ஏதும் பேசாது தன் முகத்தையேப் பார்த்துக் கொண்டிருந்த மன்னரை, தானும் பார்த்துக் கொண்டே இருந்தான். பிறகு இருவரும் பேச ஆரம்பித்தனர்.
மன்னன்: “கரிகாலா, இன்று காலையில் என் முத்தாணி மண்டபத்தில் நான் அந்த மாதரசியிடம் கடுமையாகப் பேசியதற்கு என்னை மன்னித்து விடு. எனக்கு பல வருடங்களாக விடை தெரியாது இருக்கும் பல கேள்விகளுக்கு நான் பதில் காண வேண்டி எடுத்தக் கடுமையான முயற்சிதான் அது”.
கரிகாலன்: “மன்னருக்குத் தன் குடி மக்களிடம் எப்படிப் பேசவும் உரிமை உண்டு. ஆனால், ஏதோ ஒரு காரணத்தால் தங்களின் கேள்விக்குச் சரியான பதிலை சொல்ல முடியாது தவிக்கும்
அந்தப் அண்ணையிடம் தாங்கள் கோபம் கொள்ளக்கூடாது”.
மன்னன்: “அதை நான் புரிந்து கொண்டேன். என் முன்னோர்களைப் பற்றிய ஏதோ ஒரு முக்கியமான இரகசியம் இந்த சோழ இராஜியத்தின்பால் மாறா பக்தியும் பற்றும் கொண்டவர்களால் பல வருடங்களாக பாதுகாக்கப் படுகிறது. ஆனால் அதை நான் அறிவதை அவர்கள் என்ன காரணத்தால் மறைக்கிறார்கள் என்பதுதான் புதிராக உள்ளது”.
“மன்னர்மன்னா, அந்த இரகசியம் உங்களுக்கு மட்டுமல்ல வேற்று நாட்டவர்களுக்கும் தெரியக்கூடாது தெரிந்தால் நாட்டிற்குள் மட்டுமின்றி நம் விரோதிகளாலும் நம் சோழ சாம்ராஜியத்திற்கு பல சங்கடங்கள் ஏற்படும் என்ற அச்சத்தினால்கூட சில அரச இரகசியங்கள் காக்கப்படலாம். நம் நாடு உட்பகையின்றியும், வெளிப் பகையின்றியும் இருக்க மன்னரும் சில விஷயங்களில் அதிக ஈடுபாடு காட்டாமல் இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். அது மட்டுமல்ல, இது பற்றி மன்னர் தயவு கொண்டு யார் மீதும் மன வருத்தம் கொள்ளாமல் இருக்கவேண்டும்”.
“கரிகாலா உன் எண்ணம் மற்றவர்களுக்குச் சரியாக இருக்கலாம். ஆனால் என் இடத்தில் நீ ஒரு நிமிஷம் இருந்து பார். அரச மகனென்றாலும் எனக்கும் சராசரி மனிதர்களின் உணர்வுகள் உண்டு என்பதை இந்த அரசு இராகசியத்தைக் காப்பாற்ற ஆணையிட்டவர்கள் மறந்து விட்டார்கள்”.
“மன்னரின் உள்ளத்தை நானும் அறிவேன். எல்லாவற்றையும்விட மன்னருக்கு உள்ள உணர்ச்சிகளின்மேல் ஆதிக்கமும் அதிகம் என்றும் தெரியும்” எனப் பணிவோடு சொன்னான் கரிகாலன்.
“ கரிகாலா நீ சூடாமணி விகாரத்தில் படித்த தத்துவ சாஸ்திரங்களை எல்லாம் நானும் அரண்மனைப் பாடசாலையில் படித்திருக்கிறேன். அதனால் மனதைக் கட்டுப்படுத்துவது எனக்கும் கைவந்த கலைதான். உலகில் இரகசியம் என்பது என்ன. சம்பந்தப்பட்டவர்களைத் தவிர வேறு யாரும் அறியக்கூடாது என்பதுதானே. அதே சமயம் எந்த ஒரு விஷயமும் ஒருசில சக்திகளுக்குக் கட்டுப் பட்டு நடைபெறுபவைகள் தானே”.
“ஆம் மன்னவரே. “ஆதித்ய சந்திரா வனிலோனலச்ச” என்ற வடமொழி சுலோகம் சொல்லியபடியே எந்த ஒரு இரகசியமான விஷயமும் சூரியன், சந்திரன், காற்று, நெருப்பு, ஆகாயம், பூமி, நீர், இருதயம், யமன், இரவு, பகல், உதயாஸ்தமனமாகிய சந்தியா காலங்கள், தர்மம் ஆகிய தேவதைகளின் சாட்சிகள் அறியாமல் நடக்கமுடியாது. அப்படி இருக்க என் பிறப்பைப் பற்றிய இரகசியமும் அந்த தேவதைகளின் கண்களின் முன்பாகத்தான் நடந்திருக்கும். ஆனால் அதற்குக் காரணமானவர்கள் அதனை இரகசியமாக வைக்க விரும்புவதை தடுக்க நமக்கு என்ன அதிகாரம் உண்டு?. அதனால் பெரிய சோழ மண்டலாதிபதியான மன்னர்பிரான் இனி இந்த விவகாரம் குறித்துத் தீவிரமாக புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டாம் என்பது என் பனிவான வேண்டுதலாகும்” எனச் சொன்னான் கரிகாலன்..
“உன்னைப் பொறுத்தவரையில் உன் வாதம் சரிதான். ஆனால் எனக்கும் உன் பிறப்பைப்பற்றிய உண்மை தெரிந்திருக்கிறதே. அதனால் என் மன உளைச்சல் என்னவென்று உனக்கோ, உன் பிறப்பின் இரகசியத்தைக் காத்துக் கொண்டிருப்பவர்களுக்கோ தெரியுமா?” எனக் கேட்டார் மன்னர்.
“சோழ மண்டலத்தில் எங்கோ இருக்கும் நான்குபெயருக்குத் தெரிந்த இரகசியம் மன்னருக்கும் எட்டியிருக்கும் என்பதில் என்ன சந்தேகம். மன்னரின் ஒற்றர்படையின் திறமை நாடறிந்ததுதானே”..
“உன் ஊகம் தவறு. இந்த மாபெரும் இரகசியத்தைச் சொன்னவர் யாரென்று உனக்குச் சொல்லட்டுமா?” மன்னரின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் திகைப்புடன் மன்னனைப் பார்த்தான் கரிகாலன்.
உடனடியாக பதில் சொல்லாமல், கரிகாலனின் கைகளைப் பிடித்துக் கொண்டு தன் அறையில் உள்ள இரகசிய அறைக்குச் சென்றான் மன்னன்.
தன் திகைப்புக்குப் பதிலாகத் தன்னை மன்னன் இழுத்துக் கொண்டு போன போது தனக்கு இன்னும் சில மர்மங்கள் விளங்கயிருப்பதைப் புரிந்துகொண்டான் சூடாமணி விகார தத்துவ மாணவன்.
தன் இரகசிய அறையில் அலங்காரச் சட்டத்திற்குள் இருந்த இரண்டு மன்னர்களின் சிலைகளைப் பார்க்கச் சொன்னன். இரு மன்னர்களின் உருவமும் ஒன்றைப் போலவே இருந்தது. “கரிகாலா இது இரண்டும் நம்முடைய முன்னோர்களுடைய உருவச் சிலைகள்தான். வலது பக்கம் இருப்பது நம் பெரிய பாட்டனாரின் உருவம். இடது புறம் உள்ளது உன்னுடைய பாட்டனார், அதாவது என்னுடைய தந்தை. இன்னும் பார். இந்தப் பக்கம் இருப்பது என்னுடைய உருவம். என் உருவத்திற்கும் உன் பாட்டனார் உருவச் சிலைக்கும் இடையில் இருப்பது உன்னுடைய இளைய சகோதரன் அவன் என் மகன், தற்போது காஞ்சியில் சோழப் பிரதிநிதியாக இருக்கிறான்.
மன்னரின் அந்தரங்க அறையில் தன் முன்னோர்களின் உருவச் சிலைகளைப் பார்த்தவுடன், கரிகாலன் தன்னை மறந்து தன்னுடைய முப்பாட்டனார், பாட்டனார் உருவங்களின் முன் அவர்களின் பாதங்களில் தன் தலையை வைத்து கீழே விழுந்து வணங்கினான். அவனின் செயலைக் கண்ட மன்னன் ஏதும் பேசாது புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான். பிறகு “இப்போது உன் மனதில் என்ன உணர்வு ஏற்படுகிறது?” எனவும் கேட்டான். கரிகாலானாலோ மன்னரின் கேள்விக்குப் பதில் சொல்ல முடியவில்லை. அவன் கண்களில் கண்ணீர்தான் தளும்பி நின்றது.
கரிகாலனின் உணர்ச்சிகளைப் புரிந்து கொண்ட மன்னன் மெதுவாக அவனைத் தன் பக்கத்தில் உள்ள மஞ்சத்தில் அமர்த்திக் கொண்டான். “இப்போது உன் சந்தேகம் போய்விட்டதா? உன்னைப் பார்ததவுடனேயே நீ யார் என்று எனக்குத் தெள்ளத் தெளிவாகப் புரிந்து விட்டது. நீயோ கொஞ்சம்கூட மாற்றுமருவின்றி என் தகப்பனாரைப் போலவே இருக்கிறாய். உன்னைப் பார்ப்பவர்களுக்கெல்லாம் உன் தோற்றம் சோழப் பரம்பரையைத் தான் நினைவு படுத்தும். அப்படியிருக்கும்போது உன் பிறப்பினைப் பற்றி என்னால் ஊகிக்க முடியாதா?
மெதுவாக மன்னனை நோக்கிய கரிகாலன் “என் பிறப்பின் இரகசியத்தைப் பற்றி உங்களுக்குச் சொன்னது யார் என்று நான் தெரிந்து கொள்ளலாமா?” எனக் கேட்டான்.
“உனக்கும் எனக்கும் இரத்த சம்மந்தம் ஏற்படக் காரணமானவரெ என்னிடம் சொன்னார். புரியவில்லையா. உனது தந்தைவழிப் பாட்டனாரான, எனது தகப்பனார் இராஜ இராஜ சோழரேதான் என்னிடம் சொன்னார். அது பற்றி உனக்கு விபரமாகச் சொல்கிறேன். கேள்”
எனது தந்தை என்னிடம் தன் அந்திம காலத்தில் சொன்னவை.
சோழ சாம்ராஜியபதி தன்னுடைய வாலிப வயதில் தன் தந்தையின் கட்டளைப்படி ஈழ நாட்டில் கொஞ்ச காலம் இருந்திருக்கிறார். அப்போழுது அவருக்கு மணமாகவில்லை. ஈழ நாட்டில் இருந்தபோது ஒரு நாள் ஒரு சிறு பெண்ணை ஈழ நாட்டு மன்னர் வகையை சேர்ந்தவர்கள் ஒரு தனி இடத்தில் வைத்து, அவளைச் சித்திரவதைத் செய்து கொண்டிருந்தபோது அந்தப் பக்கம் சென்றசோழ இளவல் அவர்களுடன் போரிட்டு அந்தப் பெண்ணை மீட்டுக்கொண்டு தன் இருப்பிடம் சென்றாராம்.
பிறகு அந்தப் பெண்ணிடம் விபரம் கேட்டபோதுதான் அவருக்குத் தெரிந்தது அந்தப் பெண்ணின் பெயர் மானாவதி என்றும், அவள் ஈழ் அரசு பரம்பரையின் தூரக் கிளையில் உதித்தவளென்றும் சொன்னாளாம். அவள் பிறப்பின் காரணமாக அவள் ஈழ நாட்டுஅரசுக்கு உரிமையுள்ளவள். அவளின் அரசு உரிமையை அந்தப் பெண்ணிடமிருந்து பரிக்கவே அவர்கள் அந்தப் பெண்ணைக் கொடுமைப் படுத்தி வந்திருக்கிறார்கள். அவளோ அவர்களிடம் தனக்கு அரசில் எந்த உரிமையும் வேண்டாம். தன்னை உயிருடன் விட்டு விடுங்கள் என்று கெஞ்சிக் கொண்டிருந்தும் அந்த அரசு வெறி பிடித்தவர்கள் அவள் உயிருடன் இருந்தால் என்றாவது ஒரு நாள் தன் உரிமையைக் கேட்டு வருவாளேன்றும் அதனால் அவள் உயிருடன் இருக்கக்கூடாது என்றும் சொல்லி அவளைக் கொல்லத்தான் அன்று இழுத்துக் கொண்டு போயிருக்கிறார்கள். நடுவழியில் என் தந்தைப் போனதால் அவர்களின் முயற்சி பலிக்கவில்லை. நல்ல அரச பரம்பரையைச் சேர்ந்த சோழ இளவல் அவளை நிர்க்கதியாக விட்டுத் திரும்ப மனமின்றி அவளைத் தன்னுடன் தன் இருப்பிடத்திற்கு அழைத்து வந்து விட்டாராம்.
இயற்கையின் காலச் சூழலில் இருவர் மனமும் இணைந்ததால் அவர் ஈழ நாட்டிலேயே மானாவதியைக் கடிமனம் புரிந்து கொண்டு வாழத் தொடங்கினாராம்.
அந்த சமயத்தில்தான் சோழ நாட்டு ஒற்றன் ஒருவன் இளவலைத் தேடிக் கொண்டு ஈழ நாட்டுக்குச் சென்றான். ஒற்றன் மூலம் தன் தந்தையின் உடல்நிலையும், சோழ அரசில் ஏற்பட்ட சிக்கல்களைத் தெரிந்தவர் தன்னுடைய மனைவியிடம் தன்னைப்பற்றிய விஷயங்களைச் சொல்லிவிட்டுத் தான் சோழ நாடு செல்ல வேண்டிய அவசியத்தையும் சொன்னார். அப்போழுது அவரின் மனைவி கர்ப்பமாக இருந்ததால், தன்னுடன் அழைத்துக் கொண்டு போக இயலாத சூழ்நிலை. அதனால் அங்கு இருந்த தன் அந்தரங்கமான ஒரு குடும்பத்தாருடைய பொறுப்பில் அவளை விட்டுவிட்டு தன்நாடு திரும்பினாராம்.
ஆனால் சோழ நாடு வந்தவுடனேயே அவரின் தந்தை மரணமடைந்தால் அவருக்கு உடனேயே அரசுப் பொறுப்பும் சேர்ந்து கொண்டது. மன்னராக முடி சூட்டிக் கொண்டவுடன் அவரால் ஈழ் நாடு செல்லவும் வழியில்லை. அதனால் தன் அந்தரங்கப் பணியாள் ஒருவனை அனுப்பி தன்னுடைய மனைவியை சோழ நாடு அழைத்து வர உத்திரவு இட்டார்.
காலம் சென்றதே தவிர மனைவியைப் பற்றி எந்த தகவலும் வரவில்லை. மனம் வருந்திய இராஜ இராஜ சோழர் ஒரு நாள் தானே மாறு வேடமணிந்து யாருக்கும் தெரியாமல் ஈழ நாடு சென்றாராம். அங்கோ அவருக்குக் கிடைத்த செய்தியோ அவரின் மனைவியும் குழந்தையும் இறந்து விட்டதாக. அப்போது ஈழ நாடும் சோழ நாடும் பகையாளிகளாக இருந்தது. அந்தச் சூழ்நிலையில் அவரால் தன் நாடு விட்டு ஈழத்தில் அதிக காலம் தங்கவும் வழியில்லை. மனம் முழுக்கச் சோகத்துடன் தன் நாடு திரும்பினார். அனுப்பிய பணியாளைப் பற்றியும் எந்த தகவலும் இல்லை. ஒரு நடைப் பிணமாகத்தான் இருந்து வந்தாராம். ஆனால் அரசிற்குக் கட்டாயம் பட்டமகிஷி வேண்டுமெனத் தன் தாயாரின் வற்புறுத்தலால், அரசின் நல் உறவுக்காக வேறு மணம் புரிந்து வாழவும் தொடங்கினாராம். அதன் பலன் தான் நான்.
என்னுடைய உரிய பருவம் வந்தவுடன் எனக்கு இளவரசு பட்டம் சூட்ட ஏற்பாடுகள் நடந்த சமயத்தில் என்னுடைய தந்தைக்கு ஈழ நாட்டிலிருந்து இளவரசு பட்டத்திற்கு ஈழ நாட்டில் ஒரு வாரிசு வளர்ந்து வருவதாகவும் இளவரசுப் பட்டத்தை அந்த ஈழ நாட்டு வாரிசுக்குத்தான் அளிக்கவேண்டும் என்றும் ஒரு தூதன் வந்தானாம். அரசருக்கோ என்ன செய்வதன்று தெரியாமல் தவித்தாராம். அந்த சமயத்திலும் தன்னுடைய முதல் மனைவியும் மகனும் உயிருடன் இருப்பதை தெரிந்ததால், அரசு. உரிமைப்படியே முதல் மகனுக்குப் பட்டம் சூட்டவும் சந்தோஷத்துடன் உறுதி கொண்டாராம்..
அந்த சமயத்தில் இன்னும் ஒரு தூதன் அரசனைத் தேடி வந்தான். அவந்தான் மன்னர் முதலில் ஈழ நாட்டுக்குத் தன் மனைவி மானாவதியையும், தன் குழந்தையையும் தேடிக் கூட்டிவரும்படி உத்திரவுடன் அனுப்பப்பட்ட அந்தரங்கத் தூதுவன். அவன் வந்து மன்னருடைய முதல் மனைவியும், வாலிப வயதடைந்த மகனையும் தான் அழைத்து வந்திருப்பதாகவும், அவர்கள் மன்னரைக் காணத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற விபரத்தைச் சொன்னான். அவனுடன் சென்ற மன்னனுக்குத் தாளமுடியாத சந்தோஷம். காலனின் கூற்றால் தன்னைப் பிரிந்துவிட்டதாக எண்ணி இத்தனை காலம் துன்பத்திலிருந்த மன்னருக்குத் தன்னுடைய அன்பு மனைவியையும், வாலிப வயதில் மகனையும் கண்டவரின் ஆனந்தம் எல்லை மீறியது. உடனேயே தன்னுடைய மனைவியையும் மகனையும் அரண்மனைக்கு அழைத்து வந்து அவர்களின் உரிமையையும் தன் நாட்டு மக்களுக்குச் சொல்லவும் ஆசைப் பட்டாராம். ஆனால், அவரின் மனைவி மாதரசி மானாவதியோ அதற்கு உடன் பட வில்லை. தானும் தன் மகனும் உலகின் கண்களுக்கு இறந்தவர்களாகவே இருக்க வேண்டும். எந்தக் காலத்திலும் தன்னாலும், தன் மகனாலும், ஈழநாட்டு அரசால் சோழ நாட்டிற்குத் துன்பம் ஏற்படக்கூடாது. சோழ அரசைக் களங்கப்படுத்தவே தன்னையும், தன் மகனையும் அந்தக் கொடுமைக்காரர்கள் மறைத்து சிறையில் வைத்து, சோழ மன்னருக்குத் துன்பம் ஏற்படுத்தி, சோழ நாட்டு அரசில் பிளவை உண்டாக்கவும் முயற்சி செய்து வந்தார்கள். சோழ சாம்ராஜியத்திற்கும், மன்னருக்கும் தங்களால் எந்த இழுக்கும் ஏற்படக்கூடாது. அதனால் தனக்கும், தன் மகனுக்கும் அரசில் எந்த உரிமையும் வேண்டாம். தங்கள் வாழ் நாள் முழுவதும் தன் கணவர் நாட்டில் வாழும் உரிமையும், தன் மகனுக்கு போர்ப் பயிற்சி அளித்து சோழ நாட்டைக் காக்கும் பணி மட்டும் போறும் என தீர்மானமாகக் கூறிவிட்டாராம். என் தந்தையின் முயற்சிகள் அனைத்தையும் அந்த மாதரசி தடுத்து விட்டதன்றி, எந்த காலத்திலும் தன்னை சோழ நாட்டு அரசி என்றும், தன் மகனை சோழ இளவரசன் எனவும் யாருக்கும் தெரியப் படுத்தவும் கூடாது என என் தந்தையிடம் சத்தியமும் பெற்றுக் கொண்டாராம். தன் மனைவியின் தியாகத்தையும், மன உறுதியையும் புரிந்து கொண்ட மன்னர் தன் மனைவியின் விருப்பப்படியே சோழ நாட்டில் இரகசியமாக வாழ வகையும் செய்தாராம். தன் பாட்டனாரின் பெயரான “மகேந்திர தேவன்” என்ற நாமகரணமும் தன் மகனுக்குச் செய்தார். தன்னுடைய மகனையும் தக்க ஒரு ஆசானிடம் ஒப்படைத்து அவனைக் கல்வியிலும், போர் பயிற்சியிலும் வல்லவனாக்கினார்.
குலப்பெருமை விளங்க, மகேந்திரன் கல்வி, போர்ப் பயிற்சி, இராஜதந்திரம் என பலவகையிலும் நன்கு தேர்ச்சி பெற்றான். தக்க பருவத்தில் அரசு போர்ப் படையிலும் சேர்ந்து பல போர்களிலும் பங்கு பெற்று தன்னுடைய திறமையை காட்டினான். தன் தாயாரின் ஆனைக்குக் கட்டுப்பட்டு எந்தச் சூழ்நிலையிலும் தான் சோழ வம்சத்தைச் சேர்ந்தவன் என்பதை வெளிப்படுத்தாமல் இருந்தான். மற்றவர்களைப் போல் தானும் ஒரு படை வீரனாகவே வாழ்ந்தான். மன்னர் தன் மகனுக்குச் செய்யவேண்டிய எல்லாக் கடமைகளையும் தவறாது செய்தார். தக்க வயதில் அவனுக்கு ஒரு நல்ல குடும்பத்திலிருந்து குணவதியான ஒரு அழகிய பெண்ணை மணமும் முடித்து வைத்தார். அவள்தான் உன் தாயார். அவரின் பெயர் மணிமேகலை. அவர்களுக்கும் ஒரு மகன் பிறந்தான். அவனுக்கும் அவனுடைய பாட்டனாரே தன்னுடைய மூத்தோர்களின் பெயரான “கரிகாலன்” எனப் பெயர் சூட்டினார். அந்தக் குழந்தைதான் நீ.
தந்தையின் வாலிப கால நிகழ்ச்சிகளை அவர் மூலமே அறிந்த நான் அப்போழுதே உன்னைத் தேடலானேன். ஆனால் எங்கள் தூரதிரஷ்டம் உன் தந்தை ஈழ நாட்டுப் போரில் மரணமடைந்தார். உடனேயே என் தகப்பனார் உன்னையும் உன் தாயாரையும் ஈழத்திலிருந்து அழைத்து வர ஆட்களை நாற் புரங்களிலும் அனுப்பித் தேடினார். ஆனால் உங்கள் ஒருவரையும் அவர் வாழ் நாள் முடியும் வரையில் காணாமலேயே மாளாத் துன்பத்துடன் மரணமடைந்தார். சாகும் தருணத்தில் என்னிடம் ஒரு சத்தியம் வாங்கிக் கொண்டார்.
அதாவது, என் காலத்திற்குள் அவர்களின் இருப்பிடத்தைக் கண்டு பிடித்து, உன்னையும் சோழ வாரிசு என அறிவிக்கவும், உனக்குக் சோழ அரசில் தக்க மரியாதையும், சகல உரிமைகளையும் வழங்க வேண்டும் என்பதுதான். அன்று முதல் என் பணியும் தொடங்கியது. நானும் பல வழிகளிலும் உன்னையும் உன் தாயாரான என் மதனியாரையும் தேடினேன். அந்த சமயத்தில்தான் என் பிரதான படைத் தலைவரும், சோழ சாம்ராஜியம் விரிவாகக் காரணமாக விளங்கும் அரையன் இராஜராஜேந்திரனுக்கும், என் குருவுமான தஞ்சை மடாதிபதிக்கும் இடையே ஒரு அந்தரங்கமான அரசு காரியம் நடப்பதையும் உணர்ந்தேன். அதன் தொடர்பாக உன்னைப் பற்றியும், நீ சூடாமணி விகாரத்திலிருந்து வெளி வந்து சோழ நாடு வருவதாகவும், உன்னைப் பற்றிய இரகசியத்தை அறிய நீ என் சோழ பிரதான படைத்தலைவரைப் பார்க்க வருவதையும் அறிந்தேன். அன்றுமுதல் நானும் உன்னைத் தொடர்ந்து கவனித்து வந்தேன். உன் இராஜ தந்திரம், வாக்குச் சாதுரியம், போர்த் திறமை, பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் முடிவு காணும் திறமை எல்லாம் என் கவனத்துக்கும் வந்தது. மேலும் நீ மிகத் திறமையாக சேர ஒற்றனிடமிருந்து, நம்மிடமிருந்து களவாடப்பட்ட செங்கதிர் மாலையை திரும்ப சோழ நாட்டிற்குக் கொண்டு வந்தது எல்லாம் என் ஊகத்தை நிச்சயப்படுத்தியது. உன் செயல்கள் யாவும் நம்முடைய மாமன்னர் காலம் சென்ற இராஜராஜ சோழரின் குணங்களை என் நினைவுக்கு கொண்டு வந்தன. நீ எங்கள் வம்ச விளக்கு என்பது நன்றாகப் புலனாகியது. மடாதிபதியைத் தொடர்ந்து, உன் தாயாரின் இருப்பிடத்தையும் அறிந்த நான் அவர்களையும் உன்னை வரவேற்கும் விழாவில் பங்கு கொள்ள அழைத்தேன். பிறகு உன் தாயாரிடம் நான் உன்னைப் பற்றிக் கேட்டவைகளும், அவரின் உறுதியான பதிலும் உனக்கும் தெரியும். இனியும் உனக்கு என்னிடம் என்ன தெரிய வேண்டும். கேள்” என்று கரிகாலனுக்கு அவனுடைய பூர்வ சரித்திரத்தை விவரித்தார்மன்னர்.
தன்னுடைய பிறப்பும், தன் முன்னோர்களின் பெருமைகளையும் கேட்ட கரிகாலனுக்கு மனதில் இனம் தெரியாத உணர்ச்சிகள் ஆட்கொண்டன. சிரிது நேரம் கண்களைக்கூட இமைக்காது இருந்தான். பின் மன்னரின் முகம் பார்த்து, “மன்னவரே” எனஅழைத்தான். அதைக் கேட்ட மன்னனோ “என்ன மகனே இன்னும் நான் உனக்கு மன்னன்தானா? என தன் பாசத்தை மறைக்க முடியாமல் வினவினான். கரிகாலனாலும் தன் உணர்ச்சிகளை மறைக்க முடியாது கண்களில் நீர் பெருகத் தடுமாறினான். செய்வதறியாது, தன் சித்தப்பாவின் பாதங்களைப் பற்றிக் கொண்டு வணங்கினான். இருவரும் சிறிது நேரம் ஒன்றும் பேசாது ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே இருந்தனர்.
ஆத்ம விசாரணை, தர்க்க சாஸ்திரம் கற்றவர்கள் கொஞ்ச நேரத்தில் நிலை தெளிந்தனர். பிறகு கரிகாலன் தன் வாழ்வில் முதல் முறையாக தன் சித்தப்பாவை “அப்பா” என மெதுவாக அழைத்தான். அந்தக் குரல் கேட்டு மன்னவனோ எல்லையில்லாத சந்தோஷத்துடன் “மகனே” என கூப்பிட்டு, கரிகாலனைத் தன் மார்புடன் சேர்த்து அணைத்துக் கொண்டான். உறவின் துடிப்பும் உயிர் பெற்றது.
“கரிகாலா, போதும் உன் மறைவு வாழ்க்கை. நான் உன்னை முறைப்படி சோழ வம்ச இளவல் என அறிவிக்கும் காலம் வந்துவிட்டது.” என்றான் மன்னன்.
“தந்தையே, என்னை மன்னிக்க வேண்டும். நான் என்ன காரணம் கொண்டும் என் தாய்க்குச் செய்த ஆனையை மீற மாட்டேன். என் தாயாரிடம் என் தகப்பனார் யார் என அறிவதற்கு முன் நான் செய்து தந்த ஆனையை மீற என்னால் முடியாது” எனப் பணிவாகச் சொன்னான் கரிகாலன்.
“அப்படிப்பட்ட ஆனை தான் என்ன?” எனக் கேட்டான் மன்னன்.
“ஒன்று என் பிறப்பின் இரகசியத்தை என் வாழ் நாள் பூராவும் யாரிடமும் சொல்லாமல் காக்க வேண்டும். நான் இந்த சோழ நாட்டு எல்லையை விட்டுப் போய்விடவேண்டும்
இரண்டாவது என்னுடைய வாளை என்றும், எப்போதும் சோழ நாட்டுக்காகத்தான் உபயோகப்படுத்த வேண்டும். என் கனவில் கூடநான் சோழ வம்சத்திற்கோ, மன்னனுக்கோ துரோகம் செய்யக்கூடாது. இந்த இரண்டு ஆனைகளுக்குக் கட்டுப்பட நான் உறுதி சொன்ன பிறகே என் தாயார் எனக்கு என் தகப்பனார் யார் எனக் கூறினார். மேலும் சொன்னார். என்னுடைய தகப்பனார் தன் மரணக் காலத்தில் அவரிடம் சொல்லிய ஆனைகள்தான் தன்னுடைய ஆனையாகக் கேட்டது என்றும்.” சொன்னார்.
இதைக் கேட்ட மன்னவனோ துன்பமிகுதியால் தவித்தான். பிறகு மெதுவாகச் சொன்னான். “கரிகாலா இது தான் விதி என்பதா?. என் தகப்பனாரின் மரண காலத்தில் நான் அவருக்குச் செய்த சத்தியமோ “உன்னை எப்படியும் கண்டுபிடித்து, உன் உரிமையையும்,சோழ வம்சத்தில் நீ ஒரு வாரிசு என அறிவிக்க வேண்டும் என்பது தான். ஆனால், உன் பெற்றோரோ உன் பிறப்பின் இரகசியத்தை யாருக்கும் சொல்லக்கூடாது என்றும், சோழ வாரிசு உரிமையில் என்றும் பிளவு ஏற்படக்கூடாது என்றும் உன்னிடமும் சத்தியம் வாங்கியுள்ளார்கள்.. இதில் யார் சத்தியத்தைக் காப்பது, யாருடைய ஆசைகளை நிறைவேற்றுவது?”.
குழந்தைப் பருவத்திலிருந்தே சூடாமணி விகாரத்தில் பயின்ற மாணவனான கரிகாலன் உடனேயே ஒரு முடிவுக்கு வந்தான். அதை மன்னனிடமும் சொன்னான்.
“தந்தையே, இருவரின் ஆனைகளும் சோழ நாட்டு தர்மத்திற்கு உகந்ததுதான். உங்கள் தந்தையும், என் பாட்டனாருமான சோழ சாம்ராஜியத்தின் முன்னாள் மன்னரின் விருப்பமோ தன்னால் ஒரு பெண்ணிற்கு ஏற்பட்ட இழப்பிற்கு பரிகாரம் தேடுவதும்,. அதன் மூலம் தனக்குக் கிடைத்த வாரிசுகளுக்கு ஒரு அங்கீகாரம் கொடுக்கவேண்டும் என்பதில் உள்ள உறுதி. அவரின் மைந்தரான என் தந்தைக்கோ எக் காரணத்தைக் கொண்டும் சோழ சாம்ராஜியத்திற்கு எந்தவிதமான அபகீர்த்தியோ, இராஜியத்தில் பிளவோ ஏற்படக்கூடாது என்ற எண்ணம். அரசுக்கு இரு வழியாக வாரிசுகள் இருப்பது யாருக்கும் தெரிந்தால், அதன் காரணமாக ஏற்படக்கூடிய உள் நாட்டுப் பிரச்சினைகள், சோழ எதிரிகளிடமிருந்து ஏற்படக்கூடிய தொல்லைகளையெல்லாம் தவிர்க்க வேண்டும். அதற்கு ஒரே வழி நான் மன்னரின் வாரிசு என்பது யாருக்கும் தெரியாமல் இருக்க வேண்டும் என்பதுதான். இந்த ஒரு காரணத்தால்தான் அவர் தங்களுடைய தகப்பனார் காலத்திலேயே தன்னுடைய பிறப்பு இரகசியமாக இருக்கவும், தன் மூலம் நாட்டில் எந்தப் பிரச்சினையும் வராமலிருக்க வேண்டியே இருட்டிலேயே வாழ்ந்து வந்திருக்கிறார். அவரின் குறிக்கோளுக்கு என் தாயாரும் ஒத்துழைத்துள்ளார். என் பிறப்பில் சம்பந்தப்பட்ட இருவரில் ஒருவர் மறைந்து விட்டார். மற்றவரோ இத்தனை காலம் என்னைப் பிரிந்து இருட்டிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார். இருபத்திரண்டு ஆண்டுகள் பார்க்காத மகனைப் பார்த்தப் பின்பும், தன் கணவருக்குக் கொடுத்த சத்தியத்தை மறக்காது, என்னிடம் உறுதி வாங்கிக் கொண்ட அந்த மாதரசியின் சத்தியத்தைக் மீறாது நடப்பதுதான் இப்போழுது நம்முடைய கடமையாகும். முக்கியமாக இது நான் என் தாய்க்கு என் பிறப்பின் இரகசியத்தை அறிந்து கொள்ள செய்து கொடுத்த சத்தியம். மகனின் சத்தியத்தைக் காக்க தந்தையும் துணை நிற்க வேண்டும். இதுவே நான் என் சிரியதந்தையிடம் வேண்டி நிற்கும் முதல் வரமாகும். இதை தயவுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.” எனக் கூறி பணிவோடு மன்னரின் பாதங்களைப் பற்றிக் கொண்டு, தலை வணங்கி நின்றான் கரிகாலன்.
மன்னனின் மனமோ என்ன செய்வது எனத் தவித்துக் கொண்டிருந்தது.
வினாடிகள் ஓடிக் கொண்டிருந்தன. மன்னனோ ஒரு திடமான முடிவுக்கு வர இயலாது தவித்துக் கொண்டிருந்தான். மெதுவாக கரிகாலனைப் பார்த்து “எனக்கு என்ன செய்வது எனத் தெரியவில்லை. தர்க்கசஸாஸ்திரியான நீதான் ஒரு வழி கண்டு பிடிக்கவேண்டும்.” என்றான் மன்னன்.
சோழ சாம்ராஜியத்தின் அரச தர்பாரில் தன் முன் கொண்டு வரப்படும் எந்தப் பிரச்சினைகளுக்கும் உடனடியாகத் தீர்வு காணும் மன்னருக்கு குழப்பம் மிகுந்து மனம் வருந்தியது.
மன்னரின் துன்பத்தையும், மனதின் கலக்கத்தையும் கண்ட மகனோ “அப்பா தாங்கள் கலங்க வேண்டிய அவசியம் இல்லை. நம் பெற்றோரின் ஆசைகளை எல்லாம் நிறைவேற்றலாம். என் பாட்டனாரின் ஆசைப்படியே நான் இப்போழுது சோழ வம்சத்தின் வாரசாக சோழ சிம்மாசனத்தில் அமர்ந்து விட்டேன். ஆம். சோழ சக்ரவர்த்தியாகிய நீங்கள் என்னை உங்கள் மகனாக ஏற்றுக் கொண்டுவிட்டீர்கள். உங்கள் இதய சிம்மாசனத்தில் என்னை அமர்த்திக் கொண்டு விட்டீர்கள். இந்த இரண்டிற்கும் மிஞ்சிய அங்கீகாரமும், சிம்மாசனமும் சோழ மண்டலத்தில் மட்டுமல்ல உலகில் எங்குமில்லை. அதனால் நீங்கள் உங்களின் தந்தைக்குச் செய்து கொடுத்த சத்தியம் நிறைவேறியது. மனம் சந்தோஷமடையுங்கள்.
நானும் என் தாயாருக்குச் செய்து கொடுத்த பிரமாணமும் நிறைவேறும். ஆம். நான் சோழ நாட்டு எல்லைப் பாதுகாப்பிற்காக நம் நாட்டின் எல்லைப் புறத்தில் இருக்கிறேன். சோழ இராஜியப் பிரதிநிதியாக நம் நாட்டின் ஆட்சிக்கு உட்பட்ட ஒரு பிரதேசத்திற்கு என்னை நியமித்து விடுங்கள். அங்கு நான் உங்களின் எண்ணப்படியே சோழ நாட்டுப் பிரதிநிதியாகப் பணியாற்றுவேன். அப்படியே நாட்டின் எல்லைப் பாதுகாப்பிற்கும் பொறுப்பேற்றுக் கொள்வேன். என் பெற்றோரின் ஆசைப்படியே நானும் நம் நாட்டு எல்லையை தாண்டி இருப்பேன். அத்துடன் சோழ நாட்டுக்காக் என் உயிர் உள்ள வரையில் என் வாளும் பணிசெய்யும். சோழ வம்சத்தின் ஒரு இளவரசன் நாட்டை ஆட்சிபுரிவான். மற்ரொரு வாரிசு நாட்டின் எல்லைப் புரத்தில் ஆட்சி செய்வான். நம் எல்லாருடைய சத்தியங்களும் குறைவற்று நிறைவேற்றப்படும். மன்னர் மனத் துன்பம் நீங்கி ஆனந்தம் அடைய வேண்டும். இதுதான் என் புத்திக்கு தோன்றிய வழி.” எனத் தெளிவாகச் சொன்னான கரிகாலன்.
கரிகாலனின் யோசனைகளைக் கேட்டவுடன் மன்னனின் மனதிலும் தெளிவு ஏற்பட்டது. மிகுந்த சந்தோஷத்துடன் மகனைக் கட்டிக்கொண்டு “நீ சோழ வம்சத்தில் உதித்த ஒரு சூரியன். என் தந்தையாரின் தீர்க்கச் சிந்தனை உன்னிடத்தில் இருக்கிறது. உன்னை மகனாக அடைந்தது நம் முன்னோர்கள் மட்டுமல்ல சோழ மாதேவி செய்த பூஜா பலந்தான்.” எனக் கண்களில் நீர் பெருகப் பெருமையுடன் கரிகாலனைப் பார்த்துச் சொன்னான்.
தந்தைக்கும், மகனுக்கும் தங்களின் மனக் குழப்பம் தீர்ந்தது. மன்னனைப் பார்த்த கரிகாலன், மெதுவாக “தந்தையே என்னுடைய விண்ணப்பங்கள் இரண்டை இந்த ஓலையில் எழுதி இருக்கிறேன். தாங்கள் அதை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் என்னுடைய வேண்டுகொள்’ எனக் கூறி தன் மடியில் வைத்திருந்த ஓலையை மன்னரிடம் கொடுத்தான்.
ஓலையைப் படித்த மன்னவனோ சில வினாடிகள் ஏதும் பேசாது கரிகாலனையேப் பார்த்து கொண்டிருந்தான். பிறகு வருத்தத்துடன் கேட்டான் “ஏன் இப்படி எழுதியிருக்கிறாய்? உன் எதிர் காலத்தில் நீ சந்தோஷமாக இருக்க வேண்டாமா? ஒரு தகப்பனால் இந்தமாதிரி ஒரு நிபந்தனைக்குக் கட்டுப்பட முடியுமா? அரசு உரிமையைத்தான் நிராகரித்து விட்டாய். உன் வாழ்நாள் பூராவும் துறவியாக இருக்கத் தீர்மானித்து விட்டாயா? என் மனம் இதை ஏற்காது.” என்று.
மகனோ, நிதானமாகவும் உறுதியாகவும் சொல்லத் தொடங்கினான். “அப்பா நீங்கள் ஏன் ஒரு வாரிசு தன் உரிமைகளை இழந்து, மறைவில் வாழக் கூடாது என்றும், அதனை வெளிச்சத்திற்குக் கொண்டுவர வேண்டும் என்றும் துடிக்கிறீர்கள்? மறைவில் ஒரு மரம் வளர்ந்து காலப்போக்கில் தன்னுடைய கிளைகளை உற்பத்தி செய்து வருவதால்தானே ஒரு தொடர் நிகழ்ச்சியாக நிழல் வம்சம் வளருகிறது. இனி அப்படி ஒரு சூழ்நிலை நம் சோழ அரசிற்கு வரக்கூடாது. அதனால் தான் நான் இந்த முடிவுக்கு வந்தேன். என்னைப் போல் என் மகனும் நிழலில் வாழ்வதோ, தன் உரிமை என்னவென்று அறியாமல் தவிப்பதோ கூடாது. அதன் காரணமாகத்தான் நான் நம்முடைய நிழல் வம்சம் வளரக்கூடாது என்றும், என்னுடன் அது முற்றுப் பெறட்டும் என்றும் தீர்மானித்துத்தான் இந்த விண்ணப்பத்தை எழுதினேன். சோழ வம்சத்தில் ஒரு மகன் அரசிற்கும், ஒரு மகன் ஆண்டவன் சேவைக்கும் இருக்கட்டும்” என்றான்.
வேறு ஏதும் திட்டம் வைத்திருக்கிறாயா? எனக் கேட்ட மன்னனுக்கு “இருக்கிறது தந்தையே. நான் கேட்பது உங்களுக்கு என் வரம்பு மீறியதாகத் தெரிந்தால் அதனை மறுத்து விடுங்கள். என்னை தன்னுடைய வளர்ப்பு மகனாக இவ்வுலகிற்கு அறிவித்த தங்களின் பிரதான படைத் தலைவர் அரையன் இராஜராஜன் இந்நாட்டில் அரசில் முக்கிய இடம் பெறவேண்டும். அவரின் மகள் செங்கமலச்செல்வி என்னை விரும்பினாலும் நான் அவளை ஏற்க முடியாது. அவள் எனக்கு சகோதரி முறைதான். எனக்குப் பதில் அவள் சோழ பரம்பரையில் அங்கம் வகிக்க வேண்டும். அது உங்கள் தயவில்தான் நிறைவேறவேண்டும். அவளை தாங்கள் மருமகளாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.
. வேங்கி நாட்டு இளவரசியார் நிரஞ்சனாதேவியை நான் விரும்பினாலும் என்னால் அவரை ஏற்றுக் கொள்ள முடியாது. என் தாயாரின் ஆனைப்படி நான் நாட்டு எல்லையைத் தாண்டிப் போய் வாழ வேண்டியவன். என்னுடைய மறைவு வம்சம் வளரக்கூடாது என்ற என் தீர்மானாத்திற்கு துறவறம்தான் உகந்தது. ஆகவே அவருக்கும் தங்களின் உறவு வகையில் நல்ல விதமான திருமண வாழ்வு அமைத்துக் கொடுக்க வேண்டும். மன்னரின் கருணையால் நானும் என் தாயாரும் கூடிய விரைவில் இந்த நாட்டு எல்லையைத் தாண்டி, சோழ ஆட்சிக்கு உட்பட்ட ஒரு பிரதேசத்தில் பணி புரிய உத்திரவு வேண்டும்” என்றும் பணிவோடு கேட்டுக்கொண்டான் கரிகாலன்.
மகனின் வேண்டுதல்களுக்கு மன்னரால் எந்த மறுப்பும் சொல்ல இயலவில்லை.
கடைசியாக மன்னன் மெதுவாக “ஒரு வாரிசுக்கு விளக்கு ஏற்ற இருட்டில் ஒரு குச்சி பந்தமாக மாறி, இருட்டிலேயே அனைந்து விடுகிறது. அந்தக் குச்சியின் தியாகத்திற்கு ஈடு உலகில் என்ன இருக்க முடியும்?. யாரும் அறியாமலேயே ஒரு தியாகச்சுடர் தோன்றிய நொடியிலேயே மறைந்து விடுவதுதான் விதியின் தீர்ப்பா? அது காலத்தின் கொடுமையா அல்லது மன்னர்களின் தவறா? இதற்கு யார் என்ன தீர்ப்புச் சொல்ல முடியும்.” எனத் துன்பத்தால் குரல் தடுமாறக் தனக்குள் கேட்டுக் கொண்டான். மன்னனின் கண்களோ கரிகாலனை நன்றியுடனும் பரவசத்துடனும் பார்த்துக் கொண்டிருந்தன.
காலம் சுழன்றது. கரிகாலனும் தன் தாயாருடன் சோழ நாட்டுப் பிரதிநிதியாக சோழ எல்லையில் உள்ள கடாரம் எனும் தீவில் நல்லாட்சி புரிந்து வந்தான்.
“நிழல் வம்சம் முடிவுற்றது”
்டாதுன்னிய
No comments:
Post a Comment