Monday, 29 December 2014

கதை சொன்ன கதை

(ஜெயரமணி)

கதை சொன்ன கதை .

(ஜெயரமணி)

தன்னுடைய ஆபிசிலிருந்து வீடு திரும்பிய திவாகரனின் கைகளில் நிறைய பைகள் இருந்தது. அன்று அவனுடைய அலுவலகத்தில் தீபாவளி போனஸ் பணம் தந்தார்கள். அதனால், அவன் வரும் போதே, தன்னுடைய வீட்டில் உள்ளவர்களுக்குத் தேவையான உடைகள், துணிகள் என எல்லாம் வாங்கி வந்து விட்டான். அவனுடைய கைகளில் இருந்த பைகளைப் பார்த்த அவனுடைய தாயார் பாக்கியம் “என்னப்பா, திவா உனக்குப் போனஸ் வந்து விட்டதா? தீபாவளிக்குத் தேவையானதை வாங்கிவிட்டாயா?”எனக் கேட்டுக் கொண்டே, அங்கிருந்த சோபாவில் அமர்ந்தாள். “ஆமாம்மா” எனச் சொல்லிக் கொண்டே, அவளின் அருகில் அமர்ந்த திவாகரன், தன் கையில் இருந்த பைகளை அங்கிருந்த மேஜையின் மீது வைத்து, விட்டு, தன் தாயாருக்கு வாங்கிய புடவையை எடுத்துக் கொடுத்து, அவளையும் நமஸ்கரித்தான். அவனுடைய சுபாவம்,எது அம்மாவுக்கு வாங்கி வந்தாலும், முதலில் அவள் கையில் கொடுத்து வணங்குவான். தன் கையில் மகன் கொடுத்த புடவையைப் பார்த்த பாக்கியம் “மிகவும் நன்றாயிருப்பா. எனக்குத் தான் நிறைய புடவைகள் இருக்கிறதே, இன்னும் எதற்கு பணத்தைச் செலவழிக்கிறாய்?” எனச் செல்லமாக கேட்டுக் கொண்டே, மகனின் கைகளைப் பிடித்துக் கொண்டாள். அப்படியே, தன்னுடைய குழந்தைகளுக்கு வாங்கி வந்ததையும் அம்மாவிடம் கொடுத்து, குழந்தைகள் இருவரையும் கூப்பிட்டு, “அஸ்வதி, கார்த்திக், இங்கு வந்து பாட்டியை வணங்கி உங்களுடைய டிரஸ்களை வாங்கிக் கொள்ளுங்கள்” எனவும் கூறினான். வெளியில் விளையாடிக் கொண்டிருந்த இருவரும் உள்ளே ஓடி வந்து, அப்பா சொன்னபடியே பாட்டியை வணங்கி, அவரிடமிருந்து தங்களுடைய உடைகளை வாங்கிக் கொண்டு, அப்படியே அப்பாவிடம் கொடுத்து விட்டு, மீண்டும் விளையாடப் போய்விட்டார்கள்.

திவாகரனுடைய மனைவி பானுவிற்கு சிறிது கோபமும் வந்தது. காலையிலேயே அவனிடம் சொல்லி அனுப்பினாள். அவனுடைய ஆபிசில் இந்த வருஷம் கிடைக்கும் தீபாவளி போனஸ் பணத்தை அப்படியே

---2---

அவளிடம் கொடுக்க வேண்டுமென்றும், அதில் அவள் நீண்ட நாட்களாக ஆசைப்பட்டுக் கொண்டிருக்கும், கல்வைத்த நெக்லெஸ் ஐந்து சவரனில் வாங்கிக் கொள்ளத் திட்டமிட்டு இருப்பதாகவும், இந்த தீபாவளிக்கு அவளுக்கு தங்க நகை வாங்கித் தரவேண்டுமெனவும் கட்டாயமாகச் சொல்லி இருந்தாள். ஆனால், தான் சொன்னதை அப்படியே காற்றில் பறக்க விட்டு விட்டு, தன்னுடைய இஷ்டப்படியே, வந்த பணத்திற்கு துணியும், உடைகளுமாக வாங்கி வந்தது அவளைக் கோபப்படச் செய்தது. அதனால், அதே கோபக் குரலில் “நான் காலையில் உங்களிடம் சொல்லி இருந்தேனே, அதை மறந்து விட்டீர்களா?. எனக்கு ஒரு தங்க நெக்லெஸ் வேணும்னு எவ்வளவு நாட்களாக உங்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறேன். அதை நீங்கள் கொஞ்சமும் காதில் போட்டுக் கொள்வதில்லையா. வந்த பணம் பூராவும் செலவு செய்து இப்படித்தான் வாங்கி விருவீர்கள் என எனக்குத் தெரியும். அதனால்தான், காலையில் கட்டாயமாகச் சொல்லி அனுப்பினேன். ஆனால், என்ன உங்கள் இஷ்டப்படிதான் செய்கிறீர்கள். என் பேச்சுக்கு மதிப்பில்லை” எனச் சொல்லிக்கொண்டே, திவாகரன் வாங்கி வந்ததிலிருந்து, தன்னுடைய உடைகளை எடுத்துப் பார்த்தாள். வாய் வார்த்தை பேசியதே தவிர, கண்கள் புடவையைப் பார்த்தவுடன் பளீரென மின்னியது. திவாகரன், இந்த வருஷம் பானுவுக்கு ஒரு நல்ல விலையில் காஞ்சீவரம் பட்டுப் புடவை எடுத்து வந்திருந்தான். அதுவும், இப்போது புதிதாக அறிமுகம் ஆன, மூவர்ண புடவை. நீலம், பச்சை, வெளிர் மஞ்சள் என மூன்று நிறங்களும் சம அளவில் அந்தப் புடவையில் மின்னின. பார்ப்பதற்கு வானவில்லில் தோன்றும் நிறக்கற்றுகள் போல் இருந்தன. உடையிலும், முந்தானியிலும் அடர்த்தியான ஜரிகையில் நட்சத்திர வடிவில் பூ வேலைப் பாடும் செய்யப்பட்டிருந்தது. கரையும், நல்ல அடர்த்தியான மெஜண்டாகலரில் இருந்தது. அதை எடுத்து, தன் உடலில் போட்டுக் கொண்டு, தன்னையே ஒருமறை பார்த்தவள், “நன்றாகத்தான் பார்த்து வாங்கி இருக்கிறீர்கள். பரவாயில்லை நான் கேட்ட நகையை மறந்து விட்டாலும், என் சினேகிதிகளிடம் பேசியதைக் கேட்டுக் கொண்டு, நீங்களும் புதியதாக அறிமுகமாகி இருக்கும் இந்தப் புடவையை வாங்கி வந்தது, சந்தோஷமாகத்தான் இருக்கு. நான் நாளைக்கே என் சினேகிதிகளிடம், முதன்முதலாக நான் வாங்கியது எனச் சொல்லி, பெருமை

...3...

அடைவேன்.:எனச் சொல்லிக் கொண்டே, மற்ற இரு புடவைகள், சுடிதார் செட்டுக்கள் என எல்லாவற்றையும் ஆசையோடும், பெருமையோடும் எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

பானுவைப் பார்த்த திவகரனும், சிரித்துக் கொண்டே “பானு, நான் காலையிலேயே உன்னிடம் சொல்லிவிட்டுதான் சென்றேனே. இந்த வருஷம் தினாவின் திருமணம் முடிக்க வேண்டும், அதற்குத் தேவையான பணம் சேர்த்து வைக்க வேண்டியது தான் முக்கியம். திருமணம் முடிந்த பின், வசதி பட்டால், உனக்கு அந்த தங்க நெக்லெஸ் வாங்கித் தருகிறேன் என திட்டமாகச் சொல்லி இருந்தேனே. அதை மறந்து விட்டாயா?” எனவும் சொன்னான்.

அப்போது, திவாகரனின் தம்பி தினகரனும் உள்ளே வந்தான். அவனும் தன்னுடைய ஆபிசிலிருந்து வரும்போதே, அண்ணனைப் போலவே வீட்டில் இருப்பவர்களுக்கு உடைகள் வாங்கி வந்திருந்தான். வந்தவனைப் பார்த்த அம்மா பாக்கியம், “என்னப்பா, நீயும் உன் அண்ணனைப் போலவே, வந்தபணத்திற்கு துணியாக வாங்கி வந்து விட்டாயா?” எனச் சிரித்துக் கொண்டே கேட்டவளிடம், “ஆமாம்மா, தீபாவளிக்கு வாங்கித் தர வேண்டாமா?” எனவும் சொன்னான். முதலில் அம்மாவிற்கு வாங்கிய புடவையைக் கொடுத்து, அவளைக் ஒரு முறை இருக்கிக் கட்டிக் கொண்டான். பிறகு, தனக்கும் திவாகரனுக்கும் எடுத்த உடைகளைக் கொடுக்கும் முன்பே,, திவாகரன் அவன் கையில் தான் அவனுக்கு வாங்கி வந்திருந்த உடைகளைக் கொடுத்தான். அண்ணன் கொடுத்தவற்றைப் பார்த்தவன் பரவசப்பட்டான். “எப்படியண்ணா இந்த வகை உடை உங்களுக்குக் கிடைத்தது. நான் இந்த மாதிரிதான் நம்மிருவருக்கும் வாங்க வேண்டுமென தீர்மானம் செய்து, மூன்று நாட்களாக கிட்டத்தட்ட பத்து கடைகளுக்குச் சென்று பார்த்தேன். ஆனால், எனக்குக் கிடைக்கவில்லை. அதனால், இரண்டாம் மனசாகத்தான், இந்த ஜீன்ஸ், டீஷ்ர்ட் என வாங்கி வந்திருக்கிறேன். பாருங்கள்: எனச் சொல்லிக் கொண்டே, சகோதரன் வாங்கியதை மிகவும் சிலாகித்து விட்டு, தான் வாங்கியதை அவன் கைகளில் கொடுத்தான். அதைப் பார்த்த திவாகரனும் :தினா, நீ வாங்கியதும் நன்றாகத்தானே இருக்கு. எனக்கு பிடித்து இருக்கு.

...4...

நான் தினப்படி இதை போடுவதற்கும் எளிதாக இருக்கும்” எனச் சொல்லி, தன்னுடைய சந்தோஷத்தைக் காட்டினான். அப்படியே, தினா வாசலில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளிடம் சென்று, அவர்களுக்கு வாங்கி, மறைவாக வைத்து விட்டு வந்த, சைக்கிள்களை எடுத்து வந்து, அவர்களிடம் கொடுக்க, அவர்களும் சந்தோஷத்தோடு அந்த சைக்கிள்களை ஓட்டிக் கொண்டே, சிரித்தபடியே உள்ளே வந்தார்கள். அதைப்பார்த்த திவாகரன் குழந்தைகளை நோக்கி “என்ன இது, எனக்குத் தெரியாமல் சித்தப்பாவிடம் இந்த டிமாண்டு வைத்திருந்தீர்களா?” என சிரித்துக் கொண்டே கேட்க, தினாவும் :அண்ணா, அவர்கள் ஒன்றும் என்னிடம் கேட்க வில்லை. ஆனால், தெருவில் மற்ற குழந்தைகள் விடுவதைப் பார்த்து, ஏங்குவதைப் பார்த்துத்தான் நானாகவே வாங்கி வந்தேன். அவர்கள் எனக்கும் குழந்தைகள் தானே?எனப்பதிலும் சொன்னான்.

தினகரன், தன்னுடைய அண்ணிக்கு வாங்கி வந்த புடவையைக் கொடுப்பதற்காக “அண்ணி, வாங்க” எனக் கூப்பிடும்போதுதான்,பானு அங்கு நின்று கொண்டு, தினகரன் தனக்கு வாங்கி வந்திருக்கும் புடவைகளைப் பார்த்து, அதைத் தன் உடலில் மேல் போட்டுக் கொண்டும் அழகு பார்த்துக் கொண்டிருந்தாள். அப்படியே தினகரனிடம் “தம்பி, உங்களின் இரசனையேத் தனிதான். நீங்கள் பார்த்து தேர்வு செய்வதைப் போல உங்களின் அண்ணாவால் முடியவில்லை. அவருக்கு கொஞ்சம் கூட பெண்களின் ஆசை, நாகரீகம், இரசனை எப்படி என்பதெல்லாம் தெரிவது இல்லை. எதோ ஒன்றைப் பார்த்து, அதை எடுத்து வந்து விடுகிறார். பாருங்கள், நீங்கள் எடுத்தவைகள் எல்லாம் மிகவும் நேர்த்தியாக, அழகான வேலைப்பாடுகளுடன் இருக்கு. ஒவ்வோருமுறையும் அவர் கடைக்குப் போகுமுன் என்னையும் கூட்டிக் கொண்டு போங்கள் எனச் சொன்னால், கேட்பதில்லை. உங்களையாவது கூட்டிக் கொண்டு போயிருந்தால், நீங்களாவது எனக்குப் பிடித்தமானவைகளைத் தேர்ந்து எடுத்திருப்பீர்கள். உங்களைப் போல் ஒருத்தரைப் பார்ப்பதும் அதிசயம்தான்” என தினகரனை பெருமைப் படுத்தி பேசினாள். அதைக் கேட்ட சகோதரர்கள் இருவரும் மிகவும் சங்கடப்பட்டார்கள். பானுவின் செய்கை எத்துனை அனாகரீகமானது என்பதைப் புரிந்த தினகரன், தன்னுடைய அண்ணாவைப்

--5--

பார்த்து வாயால் பேசாது கண்களால் தன்னுடைய வருத்தத்தை தெரிவித்தான். பானுவின் பேச்சால் மிகவும் மனம் வருந்த, கோபத்துடன், திவாகரன் “பானு, நீ முதலே உன் கையில் இருக்கும் புடவைகளைக் கீழே வைத்து விட்டு உள்ளேப் போ. இனிமேல் தினா வாங்கி வரும் எந்தப் பரிசையும் நீ எடுக்கக்கூடாது. உனக்கு வேண்டியதை நாந்தான் வாங்கித் தருவேன். நான் எதை வாங்கி வந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான் உன் கடமை. புரிந்து கொள்” எனக் கோபமாகச் சொல்ல, பானுவும் ஒரு நிமிஷம் திகைத்தாள். தன்னைக் கடிந்தவனிடம் தன்னுடைய கோபத்தைக் காட்ட எதிர்த்து பேச ஆரம்பித்தவள், கணவனின் கண்களில் தெரிந்த கோபத்தைப் பார்த்ததும், சிறிது பயந்தாள். அப்பவும் அவள் உள்ளே போக தயங்கியதைப் பார்த்தவன், அவளின் கைகளில் இருந்த புடவைகளை எடுத்து, தினகரனின் கைகளில் கொடுத்து, “தினா, நீ நாளைக்கே இவற்றை திருப்பிக் கொடுத்து விடு. நான் இன்று சொன்னதுதான் முடிவானது. இனிமேல், என்னைக் கேட்காமல், நீ பானுவிற்கு எதுவும் வாங்கி வரக்கூடாது” எனவும் சொல்லி விட்டு, அங்கேயே இருந்த பானுவை ஒரு முறை முறைத்துப் பார்த்தான். பானுவும், தலையைக் குனிந்து கொண்டே உள்ளேச் சென்றாள். திவாகரனின் கோபத்தைப் பார்த்து அவனுடைய தாயாரும், தினகரனும் திகைத்துத்தான் போனார்கள். ஆனாலும், பாக்கியம் நிலைமையைச் சமாளிக்க,தினகரனைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு அவனுடைய அறைக்குள் சென்றாள்.

உள்ளேச் சென்றவள் தினகரனிடம் “தினா, திவாவின் கோபத்திற்குக் காரணம் இருக்கும். அதுவாக தெரியும் வரை நீ மனம் கலங்க வேண்டாம். எதுவாக இருந்தாலும், கட்டாயம் என்னிடம் திவா சொல்லுவான். அதுவரை பொறுமையாக இருக்கலாம்” எனச் சொல்லி, அவனையும் சமாதானப்படுத்தினாள். சிறிது நேரத்தில் திவாகரனும் வந்தான்.

“அம்மா, தினா நான் உங்களிடம் கோபப்படவில்லை. என்னுடைய வருத்தம் எல்லாம் பானுவின் செய்கையால்தான். அம்மா, நானே

--6--

உன்னிடம் கேட்கவேண்டுமென்றிருந்தேன். இப்போ நம் வீட்டிற்கு அடிக்கடி ஒரு பெண் வந்து பானுவிடம் பேசிக்கொண்டிருக்கிறாளே அவள் யார்?.” “அது பானுவுடன் சின்ன வயது சினேகிதியாம். நாகு எனப் பெயர். ஒரு நாள் நானும் பானுவும் கோவிலுக்குப் போனப்போ, அவளைப் பார்த்தாள். நீண்ட நாட்களுக்குப் பின் சினேகிதிகள் இருவரும் பார்த்துக் கொண்டார்கள். அந்தப் பெண்னும், இப்போதுதான் திருமணமாகி, இங்கேயே வந்திருக்கிறாள். அடிக்கடி வந்து பானுவுடன் பேசிக்கொண்டிருப்பாள். நான், சினேகிதிகள் இருவரும் பேசும் இடத்திற்குப் போவதில்லை. ஏன் கேட்கிறாய்?” எனவும் பாக்கியம் கேட்டாள்.

“நான் இப்போ சொல்லுவது எனக்கே வெட்கமாக இருக்கிறது. சில நாட்களாக பானுவின் மனதில் விஷத்தை அந்த பெண் செலுத்தி வருகிறாள். ஒன்றுமே தெரியாமல், சின்னக் குழந்தை மனதுடன் இருந்தவளை, தேவையில்லாமல் குழப்பி வருகிறாள். இத்தனை நாட்கள் இல்லாமல், ஒரு நாள் என்னிடம் பானு கேட்டாள், என்னுடைய சம்பளம் எவ்வளவு, நான் எவ்வளவு நாளாக சம்பாதிக்கிறேன். இதுவரை எத்தனை சொத்து சேர்த்து வைத்திருக்கிறேன். நீங்கள் என்ன சம்பாதிக்கிறீர்கள் எனக்கூட எனக்குத் தெரியவில்லையே. சொல்லுங்கள்” எனக் கேட்டாள். நானும் சிரித்துக் கொண்டே, “திடீரென்று உனக்கு என்ன அவ்வளவு அக்கறை. பத்து வருடங்களாக என்னுடன் இருக்கிறாய். இப்பவந்து இப்படியெல்லாம் கேட்கிறாயே? நீயாக கேட்கிறாயா, அல்லது அம்மா உன்னிடம் எதுவும் சொன்னார்களா? எனக் கேட்டபோதுதான் சொன்னாள் :ஐயோ, அம்மா ஒன்றும் சொல்லவில்லை. நானாகத்தான் கேட்டேன்: எனச் சமாளித்தாள். அப்படியும் விடாது நான் அவளிடம் திரும்பத்திரும்பக் கேட்டபோது சொன்னாள் அவளுடைய சினேகிதி நாகு அவளிடம் இன்று என்னுடைய வருமானம் எவ்வளவு, எத்தனை பணம், நகைகள், சொத்து சேர்த்துவைத்திருக்கிறோம்: என. அதற்கு இந்த பெண்ணும், “எல்லாம் என் மாமியாரின் பொறுப்பில்தான் இருக்கு. எனக்கு ஒன்றும் தெரியாது அவரும் இதுவரை அவருடைய வருமானம் போன்றவைகளைப் பற்றி என்னிடம் ஒன்றும் சொல்வதும் இல்லை, நானும் கேட்கவில்லை. அதற்குத்தான் அவள் என்னைப்போல் ஒரு பைத்தியம் இருக்கமாட்டாளென்றும், திருமணமாகி பத்து வருடங்கள் ஆனபின்னும்

--7--

உங்களைப்பற்றி எதுவும் தெரியாமல் நான் இருப்பது முட்டாள்த்தனம் எனவும் சொன்னாள். அத்துடன் தினாவைப்பற்றியும் கேட்டாள். நான் அவளிடம் பெருமையாகச் சொன்னேன் “என் கொழுந்தன் மிகவும் நல்லவர். உண்மையிலேயே அவர்தான் நிறையப் படித்திருக்கிறார். அதிகமாகச் சம்பாதிப்பதும் அவர்தான். அவரும் தன்னுடைய சம்பளத்தை அப்படியே என் கணவரைப் போல, அம்மாவிடம் கொடுத்து விடுவார். அதைத் தவிர, எங்களுக்கு வேண்டியதையெல்லாம் அவர்தான் வாங்கித் தருவார். திருமணமானபின், அவர்தான் எனக்கு நிறைய நகைகள், புடவைகள் என வாங்கித்தந்திருக்கிறார். எங்கள் வீட்டில், எல்லாருமே அன்பாக, ஒற்றுமையாக இருப்போம். எல்லாருமே அம்மாவிற்கு அடங்கித்தான் இருப்போம்”, எனவும் வெகுளித்தனமாக என்னிடம் சொன்னாள். நான் அன்றே அவளிடம் திட்டமாகச் சொன்னேன், நம்முடைய குடும்ப விஷயங்களை நீ வெளியாரிடம் பேசக்கூடாது. இதுவரை நீ அவளிடம் உளறிக் கொட்டியது போதும். இனிமேல் அவள் வந்தால்கூட, அதிகனேரம் பேசிக்கொண்டிருக்காமல், சீக்கிரமே அனுப்பிவிடு” எனச் சொல்லி அத்துடன் விஷயம் முடிந்து விடும் என நினைத்தேன். ஆனால், அடுத்த சில நாட்களுக்கு முன் ஒரு நாள் நான் வந்தது தெரியாமல், இருவரும் கட்டில்மீது அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். நான், அவர்களுக்குத் தெரியாமல், பாத்ரூமுக்குள் சென்று விட்டேன். அங்கு இருந்தபோதுதான் நாகுவின் விஷமம் எவ்வளவு என உணர்ந்தேன். அவர்கள் பேசியதை நான் எப்படிச் சொல்லுவேன்.

அம்மா, நாமும் கடந்த ஆறு மாதமாகத் தீவிரமாக தினாவுக்குப் பெண் பார்த்துக் கொண்டிருக்கிறோம் இல்லையா. இன்னும் ஒன்று கூட கூடி வரவில்லையே. அதற்கு என்ன காரணம் என உங்களால் ஊகிக்க முடிகிறதா? எல்லாவற்றிற்கும் காரணம் அந்த நாகுதான். தினாவோ, தன் அண்ணியிடம் நீங்கள் பார்த்துச் சொல்லும் பெண்ணைத்தான் நான் மணந்து கொள்வேன் எனத் தீர்மானமாகச் சொல்லிவிட்டான். அதனால், பானுவும் நாம் பார்க்கும் எல்லாப்பெண்களையும் எதாவது ஒரு காரணம் சொல்லி, தடுத்து விடுகிறார்கள். நாமும், அதன் அடிப்படைக் காரணம் என்ன எனப் பார்க்காது, பானுவை அப்படியே நம்பி, அவள் சொன்னபின்,

--8--

அந்தப் பெண்ணை மறந்து விடுகிறோம். அதன் காரணம் எனக்கு சென்ற வாரம்தான் தெரிந்தது. காரணத்தைச் சொல்ல, என் நாக்கு கூசும். ஆனால், நாம் நோயை முழுவதுமாக அழிக்க வேண்டுமானல், அந்தக் கசப்பான விஷயத்தையும் நீங்களிருவரும் தெரிந்து கொள்ள வேண்டும். பானு நாம் ஒவ்வோருமுறை பெண் பார்த்து விட்டு வந்தவுடன், அது பற்றி விபரமாக அந்த நாகுவிடம் சொல்லி அவளுடைய யோசனைப்படிதான், ஒவ்வோரு பெண்ணையும் வேண்டாமெனச் சொல்லி, நாமும் அது பற்றி மறுபடியும் யோசிக்காமல் இருந்து விட்டோம். அன்றுதான், நாகு பானுவிடம் சொல்லியதைக் கேட்டேன் “பானு, நான் சொன்னபடியே, நீ இன்னும் கொஞ்ச காலத்திற்கு, தினாவின் திருமணத்தைத் தள்ளிப்போடமுயற்சி செய்து கொண்டிரு. அதற்குள், நீயும் உனக்குத் தேவையான அளவுக்கு தினாவிடமிருந்து பணம், பொருள், நகைகள் என வாங்கிச் சேர்த்துக் கொண்டு விடு. தினா திருமணம் முடியுமட்டும்தான் உன்னிடம் பாசமாக இருப்பான். அவனுக்கென்று ஒரு பெண் வந்தபின், அவன் அவளுடைய பேச்சைத்தான் கேட்பான். வருபவள், தினா உங்களுக்குச் செய்பதை எப்படி ஒப்புக்கொள்வாள். கட்டாயம் அவனைத் தடுத்து விடுவாள். பிறகு, உன் கணவருக்கு வரும் சொற்ப வருமானத்தில், நீ ஆசைப் படுவதையெல்லாம் வாங்க முடியுமா? அதை யோசித்து நடந்து கொள்”எனச் சொன்னாள். அதற்கு பானு கேட்டான், இப்பவே தினாவுக்கு வயது ஆகிறது என என் மாமியார் கவலைப்படுகிறார். இன்னும் எத்தனை நாட்கள் நான் தடுத்துக் கொண்டிருப்பது. பாவமில்லை தினா” எனச் சொல்ல, அதற்கும் அந்த விஷப்பாம்பு “அதெல்லாம் ஒன்றும் இல்லை. ஆணுக்கு வயது என என்ன இருக்கு. இப்பவெல்லாம், ஆண்கள் முப்பது வயதுக்கு மேல்கூட திருமணம் செய்து கொள்கிறார்கள். இப்போ தினா வெளிநாட்டில் இருந்தால், அவனுடைய திருமணம் கட்டாயம் முப்பது வயதுக்கு மேல்தான் நடக்கும். அதனால், நீ நான் சொன்னபடியே செய். உன் வீட்டில் உன்னை யாரும் தப்பாக நினக்கவில்லையே. அதனால், நீ கவலைப்பட வேண்டாம்” எனவும் சொல்லிவிட்டு, கிளம்பி விட்டாள். அப்போதுதான், நானும் பாத்ரூமிலிருந்து வெளியே வந்தேன். என்னைப் பார்த்த நாகுவின் முகம் கருத்தது. உடனே, பானுவிடம் :பானு,

--9--

எனக்கு நேரம் ஆகி விட்டது. நான் வருகிறேன்” எனச் சொல்லிவிட்டு, போய்விட்டாள்.

அன்றிரவே நான் முடிவு செய்து விட்டேன். இந்த சூழ்ச்சிக்கு நாம் பலியாகக் கூடாது. அதனால்தான், இன்று நான் கட்டாயமாக தினாவிடம் பானுவிற்கு எதுவும் வாங்கி வரக்கூடாது எனச் சொன்னேன். அது மட்டுமல்ல, நாமும் இனிமேல் உஷாராக இருக்க வேண்டும். இனிமேல், தினாவுக்கு பெண் பார்க்கும் விஷயம் நம் மூவருக்கு மட்டும் தெரிந்தால் போதும். எக்காரணத்தைக் கொண்டும், பானுவின் கவனத்திற்கு போகக்கூடாது. இனிமேல் இந்த விஷயமாக நானே எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டு, தக்க சமயத்தில் உங்களிடம் சொல்வேன். என்னுடைய தீர்மானம் பெரியயோசனைக்குப் பின் நான் முடிவு செய்தது. அது மட்டும் காரணம் இல்லை.

என்னுடைய முடிவுக்கு இந்தப் புஸ்தகத்தில் இருக்கும் கதையும் ஒரு காரணம். ஆமாம். இது ஒரு கற்பனைக் கதைதான் என்றாலும், மனித மனத்தில் இருக்கும் விகாரங்களை நன்றாகச் சொல்லி இருக்கிறார் இதை எழுதியவர். இந்தக் கதையிலிருந்து நம்முடைய வாழ்க்கையை சீராக்கிக் கொள்ள நாமும் மற்றவர்களின் மனதைப் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களின் பேராசையால், நம்முடைய இன்ப உறவுகள் பிரியக்கூடாது. நாமும் முன் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நடப்பதை எல்லாம் விதியின் வழி என கண்மூடித்தனமாக இல்லாமல், விதியையும் நம் மதியால் வெல்ல முடியும் என தைரியமாக இருக்க வேண்டும். இந்தக் கதையால் நானும் ஒரு தெளிவான முடிவுக்கு வந்தேன். அதைத்தான் இன்று உங்களுடன் விபரமாகப் பேசினேன். இந்தமுறை வெளியூருக்குப் போகும் ;போது, வழியில் படிக்க ஒரு வாங்கிய கதைப் புஸ்தகம்தான் இது. இதை நீங்களும் படித்துப் பாருங்கள். சில விஷயங்களை நாம் வளர விடாமல், வேரிலேயேயே வெட்டி விடவேண்டும். இல்லையென்றால், அதுவே பெரும் விருட்சமாகி, நம் குடும்பத்தை அழித்து விடும். எனக்கு இந்தக் கதை ஒரு பாடமாகியது. இனிமேல் பாருங்கள், திவாகரன் யார் எனக் காட்டுகிறேன் பானுவுக்கு. தினா திருமணம் தீர்மானபின், கடைசியாக பானுவுக்குச் சொல்லிக் கொள்ளலாம். அதுதான், நாம்

--/10/--

அவளுடைய முட்டாள்த்தனத்திற்கு தரும் தண்டனை. அம்மா, அவள் உன்னிடமும், தினாவிடமும் எதுவும் கேட்டால், இனி.மேல், இந்த விஷயம் என்னுடைய தனிப்பட்ட முயற்சிதான் என நீங்கள் சொல்லி விடுங்கள். மேலும் எதும் கேட்டாமல், என்னிடம் கேட்டுக் கொள்ளச் சொல்லிவிடுங்கள்.

சதி வேலைகள் சின்னதாக இருக்கும்போதே, நாம் மதியால் அதை வென்று விட வேண்டும். தாமதித்தால், அந்தச் சதியின் தீவிரத்தில், நம்முடைய வாழ்வு மறைந்து விடும். என் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும். அதற்கு இந்த சிகிச்சைதான் ஏற்றது. கதையானாலும், சமூகத்தில் நடக்கும் விஷயங்களைத்தான் நமக்கு எடுத்துக் கூறி, நம்மைக் காத்துக் கொள்ள வழி காட்டுகிறது. இனி வரும் நாள் நல்லதாகவே இருக்கும். கவலைப்பட வேண்டாம்.” எனச் சொல்லிவிட்டு, தம்பியின் கைகளை ஒருமுறை குலுக்கி விட்டுச் சென்றான்.