(ஜெயரமணி)
உறவின் வேர்கள்
(ஜெயரமணி)
சங்கரி பிற்பகலில் தன்னுடைய வேலைகளை முடித்துக் கொண்டு, முன் ஹாலில் சாவகாசமாகப் படுத்துக் கொண்டாள். அப்போது, தபால்காரர் வந்து ஒரு தபாலைக் கொடுத்துவிட்டுப் போனார். கடிதத்தின் உரையிலிருந்த கையெழுத்தைப் பார்த்தவுடனேயே, அது தன்னுடைய மகளிடமிருந்து வந்ததென்று புரிந்து விட்டது.
மகளுக்கு மிகவும் பேராசைதான். தன்னுடைய பெற்றோர் மிகவும் சீர் வரிசைகள் செய்து, சிறப்பாகத் திருமணமும் செய்தபின்பும், வருடம் தவறாது பொங்கல், தீபாவளி, திருமண தினம், பிறந்தநாட்கள், பிள்ளைகளுக்காகவும் பல பரிசுகள் கொடுத்தபோதும், மேலும் மேலும் பிறந்த வீட்டிலிருந்து தனக்குச் செய்யவேண்டுமென்றுதான் எதிர்பார்க்கிறாள். ஒரு போதும் பெற்றோருக்கும், தன் கூடப் பிறந்த ஒரே ஆண் வாரிசான அண்ணனுக்கோ, அவனுடைய மணைவி, குழந்தைகளுக்கோ சின்ன பரிசுகள் கூட கொடுக்க மனமில்லாது இருக்கிறாள். அவளுக்கும் வயதாகிவிட்டது. இனி அவளுக்கு புத்தி சொல்வது தனக்கு நாகரீகமில்லை என சங்கரிக்கும் தெரிந்துதான் இருந்தது. சின்னச்சின்னதாக பிறந்த வீட்டிலிருந்து வாங்கிக் கொண்டவளுக்கு, மொத்தமாகத் தன் தாயின் பிறந்த வீட்டுச் சீதனமாகக் கிடைத்த ஒரு வீட்டையும், கொஞ்சம் விவசாய நிலத்தையும், தனக்கு மட்டுமே உரியது என்றும், அதை உடனடியாகத் தன் பெயருக்கு மாற்றிக் கொடுக்க வேண்டுமென்று நச்சரிக்கலானாள். சங்கரியின் கணவர் இருந்தவரை கொஞ்சம் நிதானமாக இருந்தவள் அவரின் மரணத்திற்குப் பின் கண்டிப்பாக கேட்க ஆரம்பித்து விட்டாள். சங்கரியும் அவளிடம் அந்த சொத்தை அவளின் விருப்பப்படிதான் கொடுக்க முடியும் என தீர்மானமாகச் சொன்ன போதிலும், தன்னுடைய பிடிவாதத்தை விடவில்லை. வாராவாரம் ஒரு கடிதம் போட்டு விடுவாள்.
சங்கரியின் மகனான சிவராஜனும் அவன் மனைவி சுகுணாவும் மிகவும் சாதுவானவர்கள். அவர்களால் பத்மாவின் முன் தங்களுடைய ஆசைகளைச் சொல்லக்கூட சக்தியற்றவர்கள். மகனின் குணம் தெரிந்த சங்கரி, தன்னுடைய சொத்தை இருவருக்கும் சமமாகக் கொடுத்துவிடத்தான் விரும்பினாள். தாயின் குணம் தெரிந்த பத்மாவோ தன் தாயாரிடம், நீ இருக்கும்போதுதான் எனக்கு பிறந்த வீட்டுச் சுகமுண்டு. உனக்குப் பின் அவர்கள் எனக்கு எதுவும் கொடுக்க மாட்டார்கள். எனக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். அவளுக்கு நான் எதாவது செய்ய வேண்டாமா? அதனால்தான் நான் உன்னுடைய தாய் வீட்டுச் சீதனத்தைக் கேட்கிறேன். அது தாய் வழிச் சொத்து, தாய்க்குப் பின் பெண்ணுக்குத்தான் சொந்தம், எனப் பலவும் பேசி தன்னுடைய ஆசைக்குப் பலம் சேர்த்துக் கொண்டிருந்தாள். மகனுக்கும் இரு குழந்தைகள். இருவரும் பெண் குழந்தைகள். சங்கரிக்கும் மகளும், மருமகளும் ஒன்றுதான். இருவரையுமே தன்னுடைய பெண்களாகத்தான் அன்புடன் பிரியமாக இருந்தாள். தன்னுடைய பெண்ணிற்கு எது வாங்கிக்கொடுத்தாலும், அதே போல் தன்னுடைய மருமகள் சுகுணாவுக்கும், பிள்ளையின் பெண்கள் சுதா, சுமாவிற்கும் செய்வாள். அதைப் போலவே, அவள் மனதில் தன்னுடைய மூன்று பெயர்த்திகளுக்கும், ஒரே பேரனான கண்ணனுக்கும் சமமாகத் தான் தன்னுடைய சொத்தைப் பிரித்துக் கொடுக்க முடிவு செய்தாள். அதை தன்னுடைய மகனுக்கும், மகளுக்கும்கூடச் சொல்லி விட்டாள். தாயின் முடிவு தெரிந்தவுடன், பத்மாவின் சுபாவம் வெளிப்படையாகவே எல்லாருக்கும் தெரிந்து விட்டது. தன்னுடைய நாத்தனாரின் குணம் தெரிந்த சுகுணாகூட சங்கரியிடம், “அம்மா, எங்களுக்கு உங்களின் அன்பும், ஆசிகள் மட்டுமே போறும். அக்கா விரும்பியபடியே, நீங்கள் அவருடைய பெயருக்கே உங்களின் சொத்தை மாற்றிக் கொடுத்து விடுங்கள். எங்களுக்கு அவரின் உறவுதான் வேண்டும். இந்தச் சொத்திற்காக, அவர் எங்களிடம் வருத்தப்பட்டுக்கொண்டு, எங்களுடன் உறவாக இல்லாது போனால் அது உங்கள் பிள்ளையால் தாங்க முடியாது. அவர் சொல்வது போல் எங்களாலும், நீங்கள் அக்காவிற்குச் செய்வது போல் வரிசைகள் செய்ய முடியாது. அவரின் விருப்பத்திற்கு நீங்கள் செய்து விடுங்கள்” எனவும் சொல்லி விட்டாள். சுகுணாவின் இதமான பேச்சைக் கேட்ட, சங்கரிக்குத் தன் மகள் எத்தணை சுயநலமாக இருக்கிறாள் என்பதும் தெரிந்தது. அவள் எடுத்த முடிவில் மாற்றம் செய்ய அவள் விரும்பவில்லை. தீர்மானமாகவே இருந்தாள்.
ஒவ்வோரு கடிதத்திலும், தனக்குத் தாய் செய்ய வேண்டியது என்ன என்பதைமட்டுமே சொன்னாளேதவிர, மறந்து கூட தன்னுடைய தாயைத் தன்னுடன் வந்து இருக்க மட்டும் சொல்லவில்லை. தாயின் கடமையை மட்டும்தான் நினைத்தாள். மகளின் கடமையை சுலபமாக மறந்து விட்டாள்.
சங்கரியின் மனதில் நிம்மதி போய்விட்டது. தன் பெண் தன்னை விட தன்னுடைய சொத்தைதான் பெரியதாக நினைத்தது அவளை மிகவும் பாதித்து விட்டது. கொஞ்சம் கொஞ்சமாக அவளின் உடல்நலம் கெட்டது. அவளும் தன் உடல் நலம் சீர் கெட்டதைப் பற்றி பெண்ணுக்கும் எழுதி விட்டாள். பத்மா வந்தாள். தாயைப் பார்க்க இல்லை. தாயிடமிருந்து தனக்குச் சேரவேண்டிய சீதனத்தை எழுதி வாங்கிக் கொண்டு போவதில்தான் குறியாக இருந்தாள். தங்கையின் பிடிவாதத்தைப் பார்த்த சாதுவான சிவராஜனுக்குக்கூட கோபம் வந்தது. “பத்மா நீ வந்தது அம்மாவின் உடல்நிலையைப் பார்த்து ஆறுதல் சொல்லவா அல்லது உன் ஆசையைச் தீர்த்துக் கொள்ளவா? நானும் அம்மாவிடம் சொல்லிவிட்டேன் “உன் சொத்தில் எனக்கு ஏதும் வேண்டாமென்று. எங்களுக்கு அம்மாதான் முக்கியம்” என்று. நீ இப்போது தயவுசெய்து அம்மாவின் மனதை நோக அடிக்காது, அம்மாவிடம் பிரியமாக நடந்து கொள்” எனவும் சொன்னான்.
உடம்பு மிகவும் தளர்ந்து போய், மிக்க பலவீனத்துடன் படுத்துக் கொண்டிருந்த சங்கரியின் கண்களில் அவளுடைய மூத்தவனும் ஒரே அண்ணனுமான ராஜன்னாதான் தெரிந்தார். கண் எதிரில் நிற்கும் மகன் சிவராஜன் தெரியவில்லை. தனக்குத் தன் சகோதரனிடம் இருந்த மாறாத பாசத்தின் விளைவாகத்தான், தன்னுடைய முதல் மகனுக்கு தன்னுடைய இஷ்ட தெய்வமான சிவன் பெயரையும் தன் அன்பு சகோதரன் பெயரையும் சேர்த்து “சிவராஜன்” எனப் பெயரிட்டு, செல்லமாக ராஜப்பா என்றுதான் வாய்நிறைய அழைப்பாள். தன்னுடைய பெண்ணும் பிள்ளையும் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டவளுக்கு தான் உடனடியாகத் தன் சகோதரனைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் தோன்றியது. அவளும் மெதுவாகத் தன் மகனைப் பார்த்து “ராஜப்பா நீங்கள் இருவரும் என்னை இப்போதே உங்களுடைய தாய் மாமன் வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள். எனக்கு என் அண்ணாவைப் பார்க்கனும் போல் இருக்கிறது. நானும் கொஞ்ச காலம் அவருடன் நிம்மதியாக இருக்க வேண்டும்: என்றாள். அம்மாவின் ஆசையைக் கேட்ட பத்மாவிற்குக் கோபம் தான் வந்தது. தன்னுடைய மாமன் வீட்டிற்குச் சென்றால் அம்மாவை தான் எந்த விதத்திலும் தன் வழிக்கு இழுக்க முடியாது என அவளுக்குப் புரிந்தது. அதனால் அம்மவைப் பார்த்த “இப்ப உன உடம்பு இருக்கும் நிலையில் உன்னால் உன் அண்ணா வீடு வரையிலும் நடக்கக்கூட முடியாதே? அப்பயிருக்கும்போது நீ எப்படி அங்கு போக முடியும். உன் அண்ணாவும்தான் படுத்த படிக்கையாக இருக்கிறாரே? நீ அங்கு போய் என்ன செய்வாய்?”எனக் கூறித் தாயை மாமன் வீட்டிற்குப் போகாமல் தடுக்க முயற்சித்தாள். ஆனால் தன் அம்மாவின் மனதை முற்றிலும் புரிந்து கொள்ளும் பிள்ளையான சிவராஜன் “அம்மா உன் விருப்பப்படியே நாம் இன்றே மாமாவின் வீட்டிற்குச் செல்ல நான் ஏற்பாடு செய்கிறேன். நீ நிம்மதியாக இரு” எனக் கூறிவிட்டு, தன்னுடைய மனைவி சுகுணாவைக் கூப்பிட்டு “அம்மா மாமா வீட்டிற்குப் போக ஆசைபடுகிறார். நீ அவருக்குத் தேவையான அனைத்தையும் எடுத்துக் கொள். நாமும் அங்கு ஓரிரு நாட்கள் இருந்து விட்டு வரலாம்”என முடிவாகச் சொல்லி விட்டு, வெளியேச் சென்றான். வெளியேச் சென்ற சிவராஜன் தன்னுடை நண்பனின் காரையும் டிரைவரையும் தன்னுடைய தாயாரை மாமாவின் வீட்டிற்கு அழைத்துச் செல்லத் தயாராகக் கொண்டு வந்தான். சில நிமிடங்களிலேயே சங்கரி தன் பிள்ளை, மருமகள், பெண் சகிதம் தன் தமையனைப் பார்க்க கிளம்பிவிட்டாள். சங்கரிக்கு காரில் வசதியாகச் செல்ல வேண்டியதெல்லாம் சிவராஜன் பார்த்துப் பார்த்துச் செய்தான். அன்றிரவே சங்கரி தன் பிள்ளை, பெண்ணுடன் தன் சகோதரன் ராஜன்னாவின் வீட்டிற்குச் சென்றாள்.
மறுநாள் காலையில் பத்மா தன்னுடைய விருப்பத்தை தன்னுடைய மாமனிடமே சொன்னாள். அப்போது சங்கரி அவளிடம் “பத்மா, நான் இங்கு வந்தது என்னுடைய தமையனிடம் சீராடத்தான். உன்னைப்போல் சொத்தாசை பிடித்தல்ல. நீ இப்போது உன் பிடிவாதத்தை விட்டு விட்டு, எங்களுடன் சகஜமாக இருக்க விருப்பமிருந்தால் இரு, இல்லையென்றால் நீ உன் வீட்டிற்குப் போ” என முடிவாகச் சொல்லிவிட்டாள். தாயின் சொல்லைக் கேட்ட பத்மாவிற்கு என்ன பேசுவதென்றே தெரியாமல் கலங்கி நின்றாள்.
மருமகளைப் பார்த்த மாமா ராஜன்னா “பத்மா, உனக்கு உண்டானது உனக்குக் கிடைத்தே தீரும். வீணாக வாதாடி, மற்றவர்களையெல்லாம் படுத்தாதே. எனக்கு சங்கரியின் மனம் தெரியும். நீ கொஞ்ச காலம் இந்தச் சொத்து பத்து என மனதை அலைய இடாமல், உறவான எல்லாருடனும் பிரியமாக இரு.” அப்போதுதான் உன் அம்மாவின் உடல் நலமாகும்.”எனப் பரிவுடன் சொல்லி பத்மாவைச் சமாதானப் படுத்தினார். அதற்குமேல் பத்மாவால் எதுவும் பேச முடியவில்லை. அதனால் மௌனமாகினாள்.
அன்று இரவு சங்கரியும், மாமா ராஜன்னாவும் தனியாகவே படுத்துக் கொண்டார்கள். சங்கரியின் தலையைத் தன் மடியில் வைத்துக் கொண்டு, ராஜன்னா “சங்கரி, நான் இருக்கும்போது நீ ஏன் தேவையில்லாது, மனக் கவலைப் பட்டு உடல்நலத்தைக் கெடுத்துக் கொள்கிறாய்? நமக்குத்தான் பத்மாவைக் குழந்தையிலிருந்தே தெரியுமே?அவளூக்கு எல்லாமே தனக்கு மட்டும்தான் கிடைக்க வேண்டுமென்ற எண்ணம். அவளின் குணம் தெரிந்துதானே சிவராஜனும், சுகுணாவும் தங்களுக்கு உன்னுடைய தாய் வழிச் சீதனம் வேண்டாமென்று தீர்மானமாகவே சொல்லுகிறார்கள். அப்படி யிருக்கும்போது நீ ஏன் அவளுக்கு கொடுத்துவிட்டுப் நிம்மதியாக இருக்க மாட்டேனெங்கிறாய்?” என மிகவும் மென்மையான குரலில்கேட்டார். கூடத்தில் படுத்துக் கொண்டிருந்த பத்மாவிற்கும், சிவராஜன், சுகுணாவுக்கும்கூட அவர்களின் பேச்சு காதில் விழுந்தது. அதற்கு சங்கரி, “ராஜன்னா, நாமெல்லாரும் ஒரே மாதிரி இருக்கும்போது, பத்மா மட்டும் ஏன் அப்படி சுயநலவாதியாக இருக்கிறாள்.. நாம்தானே இரு குழந்தைகளையும் பிறந்ததிலேயிருந்து வளர்த்து வருகிறோம். அவள் அப்படியே அவளுடைய அப்பா அத்தைகளைப் போலவே இருக்கிறாள். இத்தனை நாட்களுக்குமேலா அவளுக்கு தன் அம்மா, சகோதரன் எனப் பாசம் வரப்போகிறது?” என வருத்தத்துடன் சொன்னாள். மேலும் “அண்ணா, சிவராஜன் அப்படியே உன்னைப் போலத்தான் இருக்கிறான். அவனும், தன் தங்கைக்காக எல்லாவற்றையும் விட்டுக் கொடுக்கத் தயாராகத்தானிருக்கிறான். நான் தான் அவனுக்கும் இரு பெண்குழந்தைகள் இருக்கிறதே எனப் பார்க்கிறேன்.” எனவும் தன் மகனப் பற்றிப் பெருமையாகவேச் சொன்னாள். அதற்கு ராஜன்னாவும், “சங்கரி, நம் பிள்ளைகளைப் பற்றி நாமே தவறாகப் பேசக்கூடாது. ஒரு விதத்தில், நீ சந்தோஷப்படவேண்டும். சிவராஜனும் சரிக்குசரியாக பத்மாவுடன் சொத்தில் பங்கு கேட்டால் நீ என்ன செய்வாய்?” எனக் கேட்டவரைப் பார்த்து, “ராஜன்னா,அவன் அப்படி கேட்காமலிருப்பதுதான் எனக்கு வருத்தமாக இருக்கிறது. அப்பாவின் சொத்தில் பெண், பிள்ளைகளுக்கு சம பாகம் என இருப்பதுபோல் தாய் வழிச் சீதனத்திற்கு மட்டும் அப்படி ஒரு சட்டம் ஏனில்லை? அப்படியிருந்தால், நான் சட்டப்படியே செய்யவேன் இல்லையா? இல்லை இல்லை அது மட்டும் நான் செய்ய மாட்டேன்: என திடிரென்று படப்படப்பாகச் சொன்னாள். தங்கையின் குரலில் ஏற்பட்ட மாற்றத்தைப் பார்த்தவர், “சங்கரி, நீ இன்னும் மாறவே யில்லையா? நான் எத்தனை முறைகள் உன்னிடம் சொல்லியிருப்பேன். எப்பவுமே நம் தாயின் சீதனம், உனக்குத்தானென்று.” திரும்பத்திரும்ப நீ பழசையெல்லாம் நினைத்துக் கொண்டு, வருத்தப் படக்கூடாது. நானென்ன, இப்போது கஷ்டப்படுகிறேனா? இல்லையே? அப்படி யிருக்கும் போது, நான் எப்பவோ உன் கணவருக்குச் செய்த உதவியே நீ இன்னும் நீயும், உன் குடும்பமும் என்னிடம் பட்டக் கடனாகத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறாயா? மேலும், உன் கணவரும் காலமாகி ஆண்டுகள் மேல் பல ஆகிவிட்டது. எனக்கும் அவருக்கும் நடந்த பண பரிவர்த்தணைகள் அத்தனையும், அவருடனே மறைந்து விட்டன. நீ இத்தனை காலத்திற்குப் பிறகும் அதைப் பற்றி நினைத்துக் கொண்டு, நம் அம்மாவின் சொத்து என்னைச் சேர்ந்தது என சொல்வதை நான் விரும்பவில்லை. நம்முடைய கடந்த காலத்தில் நடந்தவைகளையெல்லாம் நீ கட்டாயம் மறந்து விடத்தான்வேண்டும்” எனக் கட்டாயமாகச் சொன்னார்.
“அதெப்படி ராஜன்னா முடியும். உன்னால், நான் உனக்குக் கம்பர்கட்டு மிட்டாய் கொடுக்க ஆசைபட்டு, நீ பள்ளி கிரௌண்டில் கிரிக்கெட் விளையாடும்போது வந்ததை மறந்து விட்டாயா? எனக் கேட்டு, வாய் விட்டுச் சிரித்தாள். அதைக் கேட்ட ராஜன்னாவும் மிகவும் சந்தோஷப்பட்டுக்கொண்டே, “சங்கும்மா அதை எப்படியடா நான் மறக்க முடியும். இப்போதுகூட என் கண் முன் அந்தக் காட்சி தெரியுமே. அன்று, எங்கள் பள்ளியில் கிரிக்கெட் விளையாட்டுக்குச் தேர்வு செய்தார்கள். அதில் தேர்வாகவேண்டுமென்று, நான் மிகவும் தீவிரமாக விளையாடிக் கொண்டிருந்தேன். அப்போது நீ உன் பாவாடை அவிழ்ந்து விழுவதுகூடத் தெரியாமல், உன் பிஞ்சு கைகளில் கம்பர்கட்டு மிட்டாடை வைத்துக் கொண்டு, “ராஜன்னா ராஜன்னா, இந்தா உனக்கு கம்பர்கட்டு மிட்டாய் பிடிக்குமேயென்று நான் வாங்கி வந்தேன். வாங்கிக்கோ எனக் கூறியபடியே, நடு ரோட்டில் ஓடி வந்து கொண்டிருந்தாய். தூரத்தில் நீ ஓடி வருவதைப் பார்த்த எனக்கு, எங்கே நீ ஓடி வரும்போது, உன் பாவாடை தடுக்கி, விழுந்து விடுவாயோ என ஒரு பயம் ஒரு பக்கம். நீ கூப்பிட்டதால், பவுண்டரிக்கு வந்தப் பந்தைப் பிடிக்காமல் விட்டுவிட, எங்களின் கட்சி வெற்றி வாய்ப்பை இழக்க நான் காரணமாகி விட்டேன். நாங்கள் தோற்றுப் போனதைப் பார்த்த எங்கள் கட்சியின் கேப்டன் “என்னிடம், என்னடா பெரிய தங்கை. அவள் வந்தால், நீ உடனே பந்தை காற்றில் பறக்க விட்டு விடனுமா? உன்னால், நாங்கள் எல்லாரும் தோற்ற கட்சிக்காராகி விட்டோமே? உன்னையெல்லாம், பெரிய ப்பிளேயரென நான் சேர்த்துக் கொண்டேனே? நீ என் முகத்தில் நன்றாகக் கரியைப் பூசி விட்டாய். இனிமே, நீ எங்களூடன் சேர்ந்து விளையாட வரவேண்டாம். வீட்டிலேயே இருந்து கொண்டு, உன் அருமைத் தங்கையுடன் பல்லாங்குழியே ஆடிக்கொண்டிரு” என மிகவும் கோபமாகவும், கேலியாகவும் சொல்லிச் சென்று விட்டான். அவனைச் தொடர்ந்த மற்றவர்களெல்லாம் என்னை மிகவும் கோபமாகவும், கேவலமாகவும் பார்த்துக் கொண்டே, தங்களுடைய தலைகளைச் தொங்கப் போட்டுக் கொண்டு சென்றார்கள். அப்போது எனக்கு மிகவும் அவமானமாகவும், என்னால் எங்களின் கட்சி தொடர்ந்து பந்தயத்தில் கலந்து கொள்ள முடியாத நிலைக்கு ஆளானதையும், எல்லா நண்பர்களின் கோபத்திற்கும், கேலிக்கும் காரணமானதால், தாளமுடியாத கோபம் உன் மீதுதான் வந்தது. நீ ஓடி வரும்போது வழியில் தடுக்கி விழுந்தபோது கூட நான் ஓடி வந்து உன்னைத் தூக்க வில்லை. நீயே அழுதுகொண்ட என்னிடம் வந்து “ராஜன்னா நான் உன்னைக் கூப்பிட்டுக்கொண்டே வந்தேனே, நீ பார்க்க வில்லையா? நீ ஏன் வந்து என்னைத் தூக்கிக் கொள்ள வில்லை. பார் நான் கீழே விழுந்து காலில் சிராய்ப்பு இருக்கிறது. இரத்தம் கூட வருகிறதே. எனக்கு வலிக்கிறதன்னா” என அழுகையிடையே நீ சொன்னாய். என்னுடைய கோபம்தான் அதிகமாக இருந்ததால், நான் உன்னைத் தூக்காமல் “ஏண்டி சங்குச் சனியனே, உன்னிடம் நான் இப்போ கம்மர்கட்டுத் தான் கேட்டேனா. விட்டிலேயே இருந்து தொலைக்க வேண்டியதுதானே? ஏண்டி இப்படி வந்து என் மானத்தை வாங்கிவிட்டாய். பார். நீ வந்ததினால், நான் உன்னைப் பார்த்துக்கொண்டிருந்ததில், பந்தைப் பிடிக்காமல் விட்டுவிட்டேன். என்னால் என் கட்சி தோற்றுப் போய் விட்டது.என் கேப்டன் என்னைக் எப்படித் திட்டினான் தெரியுமா. கிளாசில் கடைசி பெஞ்சில் இருப்பவன், இன்று என்னை திட்டியது மன்றி, இனிமேல் நான் எப்படிக் கெஞ்சிக் கேட்டாலும், டீமில் சேர்த்துக் கொள்ள மாட்டேனென்று சொல்லி விட்டுச் சென்று விட்டான். எல்லாம் உன்னால் தான். போடிநீயும் உன் கம்பர்கட்டும்” எனச் சொல்லிவிட்டு உன் கையில் இருந்ததை பிடுங்கி மண்ணில் எரிந்துவிட்டு, நான் நீ என்னுடன் வருகிறாயா எனக் கூடப் பார்க்காமல் வீட்டிற்குப் போய் விட்டேன். நான் வீட்டிற்குப் போனபிந்தான் அம்மா என்னிடம் கேட்டாள் “எங்கேடா சங்குப்பொன்னு, உன்னைச் தேடித்தானே வந்தாள். நீ பர்ர்க்க வில்லையா? பாவம்டா சின்னப் பொன்னு, எங்கே தனியாக தவிக்கிறதோ? போய் பாரப்பா “ என என்னைத் துரத்தினாள். அப்போதுதான் நான் உன்னை பள்ளிக்கூட்த்திலேயே விட்டுவிட்டுச் சென்றது என் நினைவுக்கு வந்தது. என்னையு மறியாமல் எனக்கு என் மீதே கோபம் வந்த்து. பாவம் சின்னப் பொன்னு நீ, உன்னை அழும்போதுகூட்த் தூக்காமல், தனியாக விட்டுவிட்டு போனது மிகவும் தப்பென்று உணர்ந்தேன். அதனால், போன வேகத்திலேயே திரும்பவும் பள்ளிக்கூடத்திற்கு வந்தேன். அப்போதும் நீ அழுது கொண்டே இருந்தாய். உன்னைப் பார்த்த்தும்,என்னால் தாங்க முடியவில்லை. ஓடி வந்து எடுத்துக் கொண்டு, உன் கண்களில் வழிந்த நீரை என் கைகளால் தொடைத்துவிட்டு, உன் பாவாடையை சரியாகக் கட்டி, உன்னைs சமாதானப் படுத்தினேன். அப்போதும் நீ என்னைப் பார்த்து “ராஜன்னா பார் கம்பர்கட்டு அங்கேயே இருக்கு. எடுத்துக்கோ. உனக்காகத்தான் நான் கொண்டு வந்தேன்” எனச் சொன்னாள். அதைக் கேட்டவுடன் எனக்கும் மிகவும் அழுகையாகி விட்டது. ஓடிப்போய் மண்ணில் விழுந்த கம்பர்கட்டை எடுத்து, அங்கிருந்த குழாயில் அலம்பி, உன் பாவாடையிலேயே துடைத்து உன்னிடம் கொடுத்தேன். நீயோ, அதை உன் கையால் என் வாயில் போட்டாய். அப்போது நீ என்னிடம் சிரித்துக் கொண்டே “என்ன்ன்னா, நீயும் மண்ணில் விழுந்ததை எடுத்துச் சாப்பிடுகிறாய்? தப்பில்லையா? எனக் கேட்டாய். அதற்கு நான் “என் சங்கும்மா கொடுத்தது எதுவானாலும், எங்கிருந்தாலும் எனக்குப் பரவாயில்லை.”எனச் சொல்லிவிட்டு என் வாயில் இருந்த கம்பர்கட்டைப் பாதி கடித்து உன் வாயில் போட்டேன். நீயும் என்னைக் கட்டிக் கொண்டு, “வா ராஜன்னா வீட்டிற்குப் போகலாம். எனக்குப் பசிக்கிறது” என்றாய். நானும் உன்னைத் தூக்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தேன்.
வீட்டில் அம்மா உன்னிடம் கேட்டாள் “ஏண்டி, எங்கேடி நீ தனியாகப் போனாய்.” என்று. அதற்கு நீ “ராஜான்னாவுக்காக கடையில் கம்பர்கட்டு வாங்கினேன். அதைக் கொடுக்கப் போனேன்” எனச் சொல்ல, அம்மாவும் உன்னைக் கேட்டாள், “அண்ணாதான் ஸ்கூல் கிரௌண்டில் விளையாடப் போனானே, அத்தனை தூரமா நீத் தனியாகப் போனாய். வா அப்பாவிடம் சொல்லி, உன்னை நாலுசாத்து சாத்தச் சொல்றேன்”. அதற்கும் நீ என்ன பதில் சொல்வாயோ என நான் பயந்து கொண்டிருந்தேன். எங்கே நீ என் ஸ்கூலுக்கு வந்தும், நான் உன்னைத் தனியாக அழ விட்டுவிட்டு வீட்டிற்குக் கோபமாக வந்து விட்டேன் என்பதை அம்மாவிடம் சொன்னால் அம்மா என் மீதும் கோபப் படுவாரே என நான் திண்டாடினேன். ஆனால் நீ மிகவும் சமத்தாக, “அம்மா எனக்குத் தான் அண்ணா ஸ்கூலுக்குப் போக வழி தெரியாதே? நான் நம்முடைய தெருக் கடைசியில் உள்ளக் கடையில்தானிருந்தேன். அண்ணா வந்து என்னைத் தூக்கிக் கொண்டு வந்து விட்டான்” எனச் சொல்லி என்னக் காப்பாற்றி விட்டாய்.
ஆமாம், நீ ஏன் அன்றே அப்படிச் சொல்லி என்னை அம்மா, அப்பாவின் கோபத்திலிருந்து காப்பாற்றினாய். நான் உன்னைத் தனியாக விட்டுவிட்டு வீட்டிற்கு வந்தது தப்புத்தானே. தப்புச் செய்தவன் தண்டனை அனுபவிக்கத்தானே வேண்டும்” எனவும் கேட்டார் ராஜன்னா. அன்று நடந்ததிற்கு இன்றுகூட சங்கரிச் சொன்னாள் “ராஜான்னா, அம்மாவோ, அப்பாவோ உன்னைத் திட்டினாலோ, அடித்தாலோ உனக்கு மட்டும் வலிக்காதே, எனக்கும்தானே வலிக்கும். ஏன்னா, நான் உன் தங்கையண்ணா. இப்பவும் நீ எதற்காக என் கணவர் பட்ட கடனையெல்லாம் உன் விளைநிலத்தை விற்று அடைத்து விட்டு, எனக்கு அம்மா கொடுத்தா தாய்வீட்டுச் சீதனமான நிலத்தையும், வீட்டையும் காப்பாற்றி எனக்கே கொடுத்தாய். நான் உன் தங்கை, நான் கஷ்டப்படக்கூடாது என்றுதானே? நீ அன்றே என் கணவர் சொன்னபடியே எனக்காக நீங்கள் கொடுத்த நிலத்தையும், வீட்டையும் விற்று எங்களின் கடனை அடைத்து இருந்தால், இன்று என் பெண் கொஞ்சமும் சகோதர பாச மில்லாமல், தனக்குத்தான் அத்தனையும் வேண்டுமென்று என்னைச் சதா நச்சரித்துக் கொண்டிருப்பாளா? உன் மருமகன் என்னவோ உன்னைப் போலத்தான். அவனுக்குத் தன் தங்கையின் உறவும், அன்பும்தான் முக்கியமாக இருக்கிறது. உன் பெண்ணும் அவனுக்குச் சரியாக என்னிடம் வந்து பத்மா கேட்பதும் நீயாயம் தானே, அவளின் விருப்பப்படியே உங்களின் வீட்டையும், நிலத்தையும் அவள் பெயருக்கே மாற்றி விடுங்களேன். உங்கள் சொத்தை யார் அனுபவிக்கப் போகிறார், நம்முடைய பத்மா தானே. உங்களின் பிள்ளைக்கு இந்தப் பிறவியில் கிடைத்த சகோதர உறவுதான் முக்கியமாக இருக்கிறது. இந்தச் சொத்திற்காக அவர்கள் எங்களுடன் உறவில்லாமல் பிரிந்து விட்டார் என்றால், எங்களால் மட்டும் நீங்கள் கொடுத்தச் சொத்தை நிம்மதியாக அனுபவிக்க முடியுமா? என என்னிடம் சொல்லிவிட்டாள். என்னுடைய விருப்பம் நம்முடைய தாய்வீட்டுச்சீதனம் இருவருக்கும் சமமானது. எனக்கு மருமகளானாளும், சுகுணா உன்னுடைய பெண்தானே. அதனால் அந்தச் சொத்தை சமமாக பத்மா, சுகுணா இருவர் பெயரிலும் எழுதி விடுகிறேன். கொஞ்ச காலம் பத்மா எங்கள் பேரில் கோபமாகத்தானிருப்பாள். ஆனால், நாளடைவில் அவளுக்கும் உறவின் சுகம் புரியும். அதற்காகத்தான் நான் இங்கு வந்தேன். நீ நாளைக்கே இது விஷயமாக என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்து விடு. என்மீது இருக்கும் சுமையை நான் இறக்கி விட்டு, உன்னுடன் மிச்ச காலத்தை, உன் அன்புத் தங்கையாக இருக்கிறேன். எனக்கு உன் மடியை விட சுகமானது ஒன்றுமில்லை” எனச் சொல்லிவிட்டு, மிகவும் ஆயாசமாக மூச்சுவிட்டு, ராஜன்னாவின் கைகளைப் பிடித்துக் கொண்டே, உறங்க முற்ட்பட்டாள். ராஜன்னாவும்,இரவு நெடு நேரம் ஆகிவிட்டதால், தங்கையின்அருகிலேயே படுத்துக் கொண்டான். அவன் மனமும் தங்களின் இளமைகாலத்தை நினைத்துப் பரவசம் அடைந்தது
தாயும், மாமனும் பேசியதை கூடத்திலிருந்தே கேட்ட பத்மாவின் மனதிலும் ஏதோ ஒரு இனம் தெரியாத குற்ற உணர்ச்சி தோன்றியது. தன்னுடைய சுயநலத்தால் தான் அடையப் போகும் சொத்தால், தான் இழக்கப்போகும் ஈடில்லாத உறவுகள் எந்தனை என எண்ணிப் பார்த்தாள். சொத்து இருக்கிறதோ, இல்லையே இன்றுகூட தன்னுடைய தாய், மாமா இருவருக்கும் இடையே நிலைத்து இருக்கும் அன்பும், பரிவும், ஒருவருக்கொருவர் எந்தக் காலத்திலும், இணைபிரியாது பாசமாக இருப்பதையும் நினைத்துப் பார்த்தாள். அந்தத் தாயின் வயிற்றில் பிறந்த நான் மட்டும் ஏன் இப்படி சுயநலமான சிந்தனையுடன் இருந்து வந்திருக்கிறோம். சிறு வயதிலிருந்தே தன்னுடய பிடிவாதம், காரணமற்ற முன் கோபம், மற்றவர்களை துன்புறுத்துவதில் அடைந்த ஆனந்தம் எல்லாம் அவளின் மனதில் ஓடியது. தன்னுடைய கெட்டச் சிந்தனையால் தன்னுடைய தாயும், மாமா, சகோதரன், மாமன் மகளானாலும், உடன் பிறந்த சகோதரியாக அன்பு காட்டும் சுகுணா, எல்லாரையும் எத்தணை நாட்கள் கஷ்டப்படித்தினாள் என்பதையும் உணர்ந்து கழிவிரக்கம் அடைந்தாள். அதே சமயம் அவளுடைய கணவர் ஸ்ரீதரன் கூறும் அறிவுரையும் அவள் மனதில் எழுந்த்து. “பத்மா, நமக்கு வேண்டுமென்றால், பணம், வீடு, நிலம், நகை என சொத்தெல்லாம் நம்மால் சம்பாதிக்க ,முடியும். ஆனால், ஆண்டவன் அருளால் பிறப்பால் ஏற்பட்ட உறவுகளை ஒன்றைக் கூட நாம் இழந்து விட்டால், பிறகு அதை நாம் எத்தணைப் பணம் கொடுத்தாலும் நம்மால் அடைய முடியாது. நாம் அனுபவிக்கும் பட்டம், பதவி, சொத்து, வசதியான வாழ்வு எல்லாவற்றையும் விட , பிறப்பால் ஏற்பட்ட உறவுதான் உயர்ந்தது. அதனால், எனக்கு நீ கேவலம் அழியக்கூடிய சொத்திற்காக, உன் பிறந்த வீட்டு மனிதர்களிடம் போராடுவது கொஞ்சமும் பிடிக்க வில்லை. வேண்டாம் உன் பிடிவாதம். நீ அவர்களுடன் நல்ல உறவை மட்டும் காப்பாற்றிக் கொள். அதுவே ஆயிரம் சொத்துக்குச் சமம்” என எத்தனையே முறைகள் இதமாகவும், கோபமாகவும் சொல்லி வந்தார். ஆனால், பேராசைக்கு அடிமையான மனதில், நல்ல விஷயங்கள் எல்லாம் ஏறவில்லை. எல்லாரையும் கஷ்டப்படுத்திக் கொண்டு, தானும் கஷ்டப்பட்டதுதான் நடந்தது.
மனதில் தெளிவு வந்தவுடன், காலையில் எழுந்தால், தன்னைச் சுற்றியிருக்கும் அத்தனை நல்ல உறவுகளை எந்த முகம் கொண்டு பார்க்க முடியும்? என தன் மனதிற்குள்ளேயே அழுதாள். தான் மனம் திருந்தியதை காலையில் முதல் வேலையாகத் தன் தாயாரிடமும், மாமாவிடமும் சொல்லி, அவர்களை இத்தணை நாட்கள் துன்பப் படுத்தியதற்கு, அவர்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டால்கூட தன்னுடைய பாவம் தீராது என நினைத்துக் கொண்டே, பத்மாவும் தூங்கலானாள்.
காலையில் மாமா சங்கரியிடம் தான் சொல்லியபடியே, பத்மாவின் பெயருக்கே தாய் வீட்டுச் சீதனாக, வீட்டையும், நிலத்தையும் மாற்ற வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய வெளியேக் கிளம்பினார். அவருடன் சிவராஜனும் கிளம்பினான். அப்போ அங்கே வந்த பத்மா, மாமாவிடம் “எங்கே காலையிலேயே கிளம்பிவிட்டீர்கள்” எனக் கேட்டாள். அதற்கு சங்கரி “எல்லாம் உன் விஷயமாகத்தான். மாமாவும் உன் ஆசைப்படியே சொத்தை உன் பெயருக்கே எழுதி விடச் சொல்லி விட்டார். இப்போ உனக்குத் திருப்திதானே? அதற்குத்தான் பத்திரப் பதிவுஆபிஸுக்குப் போக வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யப் போகிறார்கள்”எனச் பளிச்சென்று சொல்லிவிட்டு, அவள் முகத்தைக் கூட பார்க்கப் பிடிக்காமல் உள்ளேச் சென்றாள். அப்போதும் பத்மா ஒன்றும் சொல்ல வில்லை. மௌனமாகவே இருந்தாள். சங்கரிக்கோ அவளின் மீது சொல்லவொன்னாக் கோபம்தான் இருந்தது.
பத்திரப் பதிவு ஆபீஸில், பத்திரத்தை எப்படி பதிவு செய்ய வேண்டுமென்று அதிகாரி கேட்டபோது, முதலில் பத்மாதான் ஐயா, எங்களின் தாயார் பேரில் இருக்கும் வீட்டையும், நிலத்தையும் என்சகோதரன் சிவராஜன் பெண்கள் சுதா, சுமா இருவர் பெயரிலும் எழுதி வைத்து, அதற்குக் காப்பாளராக என் சகோதரன் சிவராஜனை நியமித்து பத்திரம் தயார் செய்து தாருங்கள்” எனச் சொன்னாள். அதிகாரியின் முன் கூடி இருந்த அத்தனை பேரும் திடுக்கிட்டார்கள். திடீரேன்று பத்மாவின் மனதில் இப்படிபட்டமாற்றம் ஏற்படக் காரணம் என்ன என ஒருவராலும் ஊகிக்க முடியவில்லை. தங்களின் காதில் விழுந்ததை நம்பக் கூட முடியாமல் நின்றார்கள். மாமாதான் மெதுவாக :என்ன பத்மா, நாங்கள் இங்கு வந்ததே நீ கேட்டபடியே இந்தச் சொத்தை உன் பேரில் மாற்றி எழுதத்தானே. திடீரென்று, நீ இப்படியோரு முடிவுக்கு வரக் காரணம் என்ன? என் பெண் சுகுணா உன்னிடம் இந்தச் சொத்து தன் பெண்களுக்கு வேண்டுமென்று கேட்டாளா? எனக் கோபமாகக் கேட்டார். அதற்கு பத்மா சாந்தமாகவேச் சொன்னாள் “மாமா நான் நேற்று இரவு வரையில் அம்மாவின் சொத்துக்கள் எல்லாம் எனக்குத்தான் வர வேண்டுமென்று உறுதியாகத்தானிருந்தேன். ஆனால், நேற்று இரவில் நீங்களும், அம்மாவும் உங்களின் சிறு வயது காலத்திலிருந்தே ஒருவர் மீது ஒருவர் எவ்வளவு பாசம், பரிவு வைத்திருக்கிறீர்கள் என்பதையும், அப்படி என் பிடிவாதத்தால் இந்தச் சொத்தை நான் அடைந்தாலும், இதனால் நான் இழக்க வேண்டி யிருக்கும் அன்பு உள்ளங்கள், பிரியமான உறவுகள் எத்தணை என்று கொஞ்சம் யோசித்துப் பார்த்தேன். அம்மா உங்களிடம் வைத்திருக்கும் பாசத்தில், ஆயிரத்தில் ஒரு பங்கு கூட நான் நேற்றுவரை என் சகோதரனிடம் காட்டவில்லை, ஏன் மனதால் கூட அவனுடன் பிரியமாக இருக்க ஆசைபட வில்லை. ஆனால், அவனோ என் உறவுதான் முக்கியம் என நினைத்து, அம்மாவிடமும், உங்களிடமும் தன் தாயின் சொத்தை எனக்கே கொடுக்க முடிவாகச் சொன்னதும், என்னால் என்னையே மன்னிக்க முடியவில்லை மாமா. இத்தனை அற்புதமான உறவுகளைவிட, காலத்தால் அழியக்கூடிய இந்த மண்ணிற்கா நான் அத்தனை கோபப் பட்டேன் என நினைத்து எனக்குள்ளேயே துன்ப ப்பட்டேன் அதனால் காலையில் தெளிவான முடியுடன் வந்தேன். எனக்கும் உறவின் வேர்கள் என்ன என்பதை உணர முடிந்தது. மனிதனால் சம்பாதிக்க கூடிய மண்ணிற்கும், பிற சொத்திற்காகவும், பிறப்பால் ஆண்டவனால் நமக்கு வரமாக அமைந்த உறவுகளை இழக்க நான் இனியும் சுயதலமாக இருக்க மாட்டேன். எனக்கும் உறவுகள் தான் வேண்டும். அதனால், இத்தணை நாட்கள் உங்களை யெல்லாம் துன்பப் படுத்தியதிற்காக, நீங்கள் எல்லாரும் என்னை மனசார மன்னித்து உங்களின் அன்பால் என்னை அரவனைக்க வேண்டுமென்பதுதான் என் வேண்டுகோள்” எனச் சொல்லி, தாளாமல் கண்ணீர் விட்டுக் கொண்டே, மாமானின் கைகளில் தன்னுடைய முகத்தைப் பதித்துக் கொண்டு விம்மினாள். பத்மாவின் கண்களிலிருந்த வழிந்த கண்ணீரை மாமா ராஜன்னா தன்னுடையே மேல் துண்டால் துடைத்து விட்டு, “அசடே இப்ப என்ன நடந்துவிட்டது என்று இத்தணை வருத்தப்படுகிறாய். உனக்கு உரிமையானதைதாயே நீ கேட்டாய். நாங்களும் உனக்குத் தர மனப்பூர்வமாகத்தானே வந்தோம். சொத்தை உனக்கு கொடுத்தபின், உன்னை எங்கள் பெண் இல்லை யென்றா சொல்லுவோம். என்ன நடந்தாலும், நீ எங்களின் அன்புச் செல்லம்தானம்மா. அழாதே” என பரிவுடன் சொல்லிவிட்டு, அவளின் விருப்பப்படியே பத்திரப்பதிவு செய்து விட்டு, எல்லாரும் வீட்டிற்குத் திரும்பினார்கள்.
சொத்து பதிவு பண்ண வந்தவர்களின் பாசப் பிணைப்பைப் பார்த்த, பத்திரப்பதிவு அதிகாரியும், மற்றவர்களும், உறவின் வேர்கள் எங்கிருக்கிறது என் உணர்ந்து மனம் நெகிழ்ந்தார்கள்.வ்
No comments:
Post a Comment