(ஜெயரமணி)
தொலைவில் ஒரு காசு மரம்
(ஜெயரமணி)
தன்னுடைய ஆபீஸ் வேலையை முடித்துக் கொண்டு, குருபரன், சிகாகோவில் உள்ள தன்னுடைய அடுக்குமாடி குடியிருப்பிற்கு திரும்பினான். அவனுடைய வருகைக்காக காத்திருக்க யாரும் அவனுடன் இல்லை. ஏறக்குறைய பனிரெண்டாண்டு காலமாக அவன் தனியாகத்தான் இருக்கிறான். தன் வீட்டிற்கு வந்தவுடன், வாசற் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தவன், அங்கிருந்த இருளும், தனிமையும் பழகிப் போனவைதான். ஆனாலும் தினமும் தன் பணி முடிந்து வரும்போதெல்லாம், அவனுள் ஒரு சொல்லத் தெரியாத ஏக்கம் இருக்கும். மௌனமாகவே தன்னுடைய தினப்படி வேலைகளை முடித்தான். வந்தவுடன் தானே காப்பி போட்டு குடித்து விட்டு, அலமாரியிலிருந்து கொஞ்சம் பிஸ்கட் எடுத்துக் கொண்டு, ஒரு புஸ்தகத்தை எடுத்து படிக்கலானான். தினப்படி செய்யும் வழக்கம்தான் என்றாலும், அன்று அவனுக்கு தன்னுடைய தனிமையான வாழ்க்கை அலுத்து விட்டது போல் இருந்தது. அவனின் மனதில் தன்னுடைய முதல் வெளிநாட்டுப் பயணம் படமாடியது.
இந்தியாவிலிருந்து வெகு தூரத்தில் இருக்கும் சிகாகோவில் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு. அதில் வசிப்பவன் இந்தியாவிலிருந்து மேற்படிப்பிற்காகவும், பின்னர் அங்கேயே ஒரு வேலையையும் தேடிக் கொண்டு, அமெரிக்காவிலேயே தொடர்ந்து வசிக்கும் பல இந்திய மக்களில் ஒருவந்தான் தென் தமிழ்நாட்டிலிருந்து சென்ற குருபரன். அவனின் பூர்வீகம் திருச்சிதான். அவனின் தகப்பனார் அங்கேயே உள்ள ஒரு நகராட்சிப் பள்ளியில் ஆசிரியர்.குருபரன் வீட்டிற்கு மூத்த மகனாகப் பிறந்ததால் தன் தகப்பனாரின் குடும்பச் சுமையை சுமக்கவேண்டியவனான். அவன் சிறு வயதிலிருந்தே தன்னுடைய குடும்பச் சூழ்நிலையைப்புரிந்து, தகப்பனாருக்கு மிகவும் உதவியாகவே இருந்து வந்தான். தன்னுடைய படிப்பில் மிகவும் நன்றாகப் படித்து, அரசு உதவியுடனே மேற்படிப்பும் முடித்து, தன்னுடைய கல்லூரி ஆசிரியர்களின் யோசனைகளைக் கேட்டு, அவன் தன்னுடைய மேற்படிப்பிற்காக அமெரிக்காவில் உள்ள பல கல்லூரிகளுக்கும் விண்ணப்பம் செய்தான். அவனுடைய படிப்பின் தகுதியாலும், கல்லூரி ஆசிரியர்களின் முயற்சியாலும், அவனுக்கு அமெரிக்காவில் உள்ள கல்லூரியில் உதவித் தொகையுடனே படிப்பதற்கு வசதியும் வந்தது. அவனும் மிகவும் கவனமாக இருந்து, எந்தவிதமான பிரச்சினையுமின்றி தன்னுடைய மேற் படிப்பை முடித்து, அந்தக் கல்லூரியின் ஆசிரியர்களின் உதவியுடன், அவனுக்கு ஒரு நல்ல இடத்தில் வேலையும் கிடைத்து விட்டது. குருபரனுக்கு நல்ல உஊதியமும் கிடைக்கவும் செய்தது.
தன்னுடைய மேற் படிப்பிற்காக, குருபரன் சிகாகோவிற்குக் கிளம்பும்போது அவனுடைய தாயார் பார்வதிதான் மிகவும் கஷ்டப்பட்டாள். குரு அவளின் முதல் மகனாக மட்டுமில்லாமல், அவளின் மனம் குடும்ப பொருளாதார நிலையால் மிகவும் கஷ்டப்படும்போதெல்லாம், அவளுக்கு மிகவும் ஆறுதலைச் சொல்லுவான். தான் மிகவும் நன்றாகப் படித்து, பெரிய வேலைக்குப் போய் நிறைய பணம் சம்பாதித்து, அவளையும், தன்னுடைய மற்ற இரு தங்கைகள், ஒரு தம்பிகளின் படிப்பிற்கும், மற்றவைகளுக்கும் துனையாக இருப்பேன் என அடிக்கடிச் சொல்லி, அவளைத் தேற்றுவான். அவன் சொல்வதைக் கேட்கும் அவனின் தந்தையும் மிகவும் சந்தோஷப்படுவார். குருவும், தான் அமெரிக்காவில் ஒரு நல்ல வேலையைத் தேடி கொஞ்சம் பணம் சம்பாதிக்காமல் ஊருக்குத் திரும்புவதில்லை எனவும் மனதில் உறுதியாக இருந்தான். காலச் சக்கரம் உருண்டோடியது. குருவும் தன்னுடைய பெற்றோரைப் பிரிந்து வந்து, காலம் வருடங்களை முழுங்கியது. தான் சம்பாதிக்க ஆரம்பித்தவுடனே, முதலில் கொஞ்சம் பணம் சேர்க்கத் தொடங்கினான். கையில் கணிசமான இருப்பு சேர்ந்தவுடன், தன்னுடைய குடும்பத்தாரைப் பார்க்கத் துடித்தான். தான் கூடிய விரைவில் ஊருக்கு வருவதாகவும் தன்னுடைய அப்பாவிற்குக் கடிதமும் எழுதினான். ஆனால், அவன் ஆசைப்பட்டபடி, அவனுடைய வரவை யாரும் முக்கியமாக நினைக்கவில்லை. மாறாக, அவன் தகப்பனார் அவனிடம் தொலைபேசியில் சொன்னார் “குரு, நீ எங்களைப் பார்க்க வருவதாக எழுதியிருந்தாய். மனதுக்கு சந்தோஷமாகத்தான் இருந்த்து. ஆனால், இப்போது உன் பெரிய தங்கை மாலாவிற்கு ஒரு நல்ல இடத்தில் வரன் வந்து, ஜாதகம் மற்ற விஷயங்கள் எல்லாம் பொருந்தி வந்துள்ளது. அவர்கள் கூடிய விரைவில் திருமண நடத்தவேண்டுமென்றும் சொல்லிவிட்டார்கள். என்னுடைய வசதி உனக்குத் தெரியும். இப்போது, நீ இங்கு வந்தால், எனக்கும் திருப்தியாகத்தான் இருக்கும். ஆனால், திருமணத் திற்காக நாம் கொஞ்சம் அதிகப் பணம் செலவு செய்ய வேண்டியுள்ளது. அதனால், என்னுடைய யோசனை நீ இப்போது வர வேண்டாம். நீ வருவதற்கு ஆகும் செலவையும் சேர்த்து, எனக்குக் கூடப் பணம் அனுப்பிவிடு. அதைக் கொண்டு, நான் கலியாணத்தை ஓரளவு நன்றாகவே செய்து முடித்து விடுவேன். உன் தங்கையின் திருமணத்திற்கு, நீ நேரில் வர மாட்டாயேத் தவிர, திருமணத்திற்கு மொத்த பொறுப்பும் உன்னுடையதாகத்தான் இருக்கும். எனக்குப் பின் இந்தக் குடும்பச்சுமையை நீதான் ஏற்க வேண்டும். நான் உன்னை வர வேண்டாமென்று சொன்னதாக நீ நினைத்து விடாதே. நம்முடைய வறுமைதான் என்னை அப்படிச் சொல்ல வைக்கிறது. இந்த ஒரு முறை நீ உன் பயணத்தை தள்ளிப் போடு. பின்னால் நீ வரும்போது, உன் தங்கை தன்னுடைய குழந்தையுடனே உன்னை வரவேற்பாள். உன்னுடைய ஏக்கம் எனக்குப் புரியும். ஆனால், நம்மைப் போன்ற நடுத்தர மக்கள் எல்லா ஆசைகளையும் தியாகம் செய்யத்தான் வேண்டும். என்னைத் தப்பாக எண்ணாதே. நீயே உன் அம்மாவிடம், உனக்கு தற்போது லீவு கிடைக்காதென்று சொல்லு, நீ வர வசதியில்லை எனப் பக்குவமாகச் சொல்லு. அவளும் தன் மனதை சமாதானப்படுத்திக் கொள்வாள். “ என மிகவும் திட்டமாகவும்,. அதே சமயம் தன்னுடைய மனம் புண் படாமலும் சொல்லி விட்டார். ஆக அவன் ஆசைப் பட்டபடியே, தன்னுடையமுதல் இந்தியா பயணம் நிறைவேறவில்லை. மாறாக, அவனின் தகப்பனாரின் விருப்பத்தின்படியே அவன் தான் ஊருக்குப் போகாமல், தான் போகும் வழிச்செலவையும் சேர்த்து, ஒரு கணிசமான பணத்தை தன் தங்கையின் திருமணத்திற்காக அனுப்பிவிட்டு, மனதிலேயே அவளின் திருமணத்தை நினைத்துக் கொண்டான். திருமணத்தைத் தொடர்ந்து, தலைதீபாவளி, தலைப் பொங்கல், வளைகாப்பு, சீமந்தம், தலைப் பிரவசம், குழந்தைக்கு மாமன் சீர், முதல் பிறந்தநாள் என அவனுடைய சேமிப்புகளை விழுங்கி விட்டது. மாறாக, ஊரில் அவனுடைய பொற்றோரின் மதிப்பும் உயர்ந்தது. இரு வருடங்கள் சென்ற பின், குருபரன் ஊருக்குப் போக திட்டம் செய்தான். அவனின் விருப்பத்தை தெரிந்தவுடன், அவனின் தகப்பனார் திரும்பவும் அவனிடம் பேசினார். அவருடைய பேச்சில் நிறையவே தேன் தடவியிருந்தது. இந்த முறை அவனின் இரண்டாவது தங்கை சுவாதியின் திருமணமும் கூடியது. மாலாவிற்குச் செய்த அதே அளவிற்குக் சீர் வரிசைகளைச் செய்ய வேண்டுமென்று தீர்மானித்தவர், வழக்கம்போல் குருபரனிடமே தன்னுடைய பாரத்தினைச் சுமத்தினார். அதனால் இரண்டாம் முறையும் குருபரனின் தாயகம் செல்லும் நிகழ்ச்சி நின்று விட்டது. அவனின் மனம் தன் தாயாரைப் பார்க்க மிகவும் ஏங்கியது. ஆனால். சிறு வயதிலிருந்தே தன்னுடைய அப்பாவின் பேச்சுக்கு மாறாக எதுவும் சொல்லவோ, செய்யவோ சக்தியற்ற குருபரன், தன்னுடைய நியாயமான ஆசைகளை அடக்கிக் கொண்டான். ஒவ்வோரு முறை அவன் தன்னுடைய தாய்நாட்டுக்கு போக தீர்மானிக்கும்போது, அவனின் வருகயைத் தவிர்த்து, அவனுடைய பணம் மட்டுமே ஊருக்குப் போய்க்கொண்டிருந்தது. எத்தனை முறைகள் ஏமாற்றமடைந்தாலும். அவனின் மனதில் ஓரத்தில், ஒருசிறு நம்பிக்கை இருந்தது. தன்னுடைய தங்கைகளின் திருமணம் குடும்பத்தில் அவசியம் செய்யவேண்டிய ஒன்றுதான். அதை முடித்து விட்டேன். இனி, எனக்கு ஊருக்குப் போவதில் ஒரு தடையுமிருக்காது. அதனால், இந்த முறை கட்டாயம் ஊருக்குப் போய் தான் வளர்ந்த இடம், பழகிய நண்பர்கள், என கொஞ்ச காலம் உல்லாசமாக இருக்கலாம். தனக்கும் வாலிபம் முடியப் போகும் வயதாகி விட்டது. தான் ஊருக்குப் போனால், தன்னுடைய திருமணத்தையும் தன்னுடைய பெற்றோர் ஏற்பாடு செய்து, முடிப்பார்களென்ற அசைக்க முடியாத ஒரு ஆசையும் அவனுள் வளர்ந்து வந்தது. ஆனால், அவனின் சின்னச் சின்ன கனவுகள் கூட கூடவில்லை. தங்கைகளின் வாழ்வுவளம் பெற்றபின், அவருடைய தகப்பனாருக்குத் தான் இருக்கும் வீட்டை கொஞ்சம் பெரிதுபண்ணி, மாடியும், பின்புறம் ஒரு சின்ன குடியிருப்பும் கட்ட முடிவு செய்தார். காரணம், அவர் அந்த வருடம் ஓய்வு பெறுவார். பின்னர், வரும் ஓய்வு பணத்தில், தற்போது இருக்கும் வசதியான வாழ்வு வாழ முடியாது. அதற்கு வசதியாக, தன்னுடைய வீட்டிலேயே இரு குடும்பங்கள் இருக்கும்படி சிறிய மாற்றங்கள் செய்து, தன்னுடைய மாத வருமானத்தை வசதிபடுத்திக் கொள்ளத் தீர்மானித்தார். ஆகவே, இந்த முறையும் குருபரனின் இந்தியப் பயணம் குறை பிரசவமாகியது. அவனுடைய பணம்தான் சென்றது வழக்கம்போல். அத்துடன், வீடு கட்டுவதற்காக அவனின் அப்பா வங்கியில் வாங்கிய கடனுக்கு அவனும் இனைக் கையெழுத்தும் போட்டான். அவனுக்கு வீட்டுக் கடன் சுமையும் கூடியது. இதற்கிடையில் அவனின் கடைசி தம்பியின் கல்லூரிப் படிப்பும் அவனால்தான் முடிந்தது. இனையாக குருவின் தாயாரின் மருத்துவ சிகிச்சைக்கும் அவனின் பணம்தான் போனது. தாயின் மருத்துவ சிகிச்சையின் போதாவது அவனுக்குத் தன் தாயாருடன் இருக்க வேண்டுமென்று மிகவும் துடித்தான். ஆனால், உடனடியாக தாயாரின் கர்ப்ப்பைநீக்கும் ஆப்பரேஷனுக்கு பணம் வேண்டியதால், வழக்கம்போல் அவனுடைய பயணத்தொகையும் அவனின்றி பயணம் செய்து, ஊருக்குப் போனது. அவன் போகவில்லை அவனின் மனம் போனது. தாயாரின் ஆபரேஷனன்று, அவன் தன்னுடைய போனின் மூலமே மருத்துவ மணையிலிருந்த தன்னுடைய தகப்பனாருடனும், சகோதரிகளுடனும் பேசிக்கொண்டு, ஒவ்வோரு மணிநேரத்திலும் தன் தாயாரின் உடல்னிலைப் பற்றி விசாரித்துக் கொண்டே யிருந்தான். அருகில் இருந்தவர்களின் துடிப்பைவிட தொலைவில் இருந்த குருவின் துடிப்பும், பிராத்தனையுமே அந்தத் தாயின் நோய்க்கு மருந்தானது.
குருவும் தன்னுடைய தாய்நாடு விட்டு வந்து, வருடங்கள்பத்திற்கு மேல் ஆகிவிட்டது. 24 வயதில் வந்தவனின் வயதோ 34த் தாண்டியது. ஆனால் அவனின் வாலிபம் துனையின்றியே துவண்டது. இராமர் 14ஆண்டுகள் வனவாசம் செய்தார். அவருடன் மனைவி சீதாதேவியும். இளையவர் இலட்சுமணரும் இருந்தார்கள். ஆனால் குருவின் அயல் நாட்டு வாசத்தில், அவனுடன் இருந்தது அவனின் தனிமையும் ஏக்கங்களுமேதான். அவன் இழந்தது தன்னுடைய உறவினர்களின் அருகாமை மட்டுமல்ல, அவனுடைய வாழ்வையும் தான். அன்னிய நாட்டில், தனிமையில் வாடினாலும், தன்னுடைய பிறந்த தேசத்தின் ஆதாரமான சுயவொழுக்கம் அவனை வழி தவறாமல் காத்து வந்தது., எந்த நிலையிலும் அவன் திடமாகவே இருந்தான். அவனுடன் இருப்பவர்களல்லாம் திருமணமாகி, குடும்பம் என இருந்தாலும். அவன் மட்டுமே தன் பிரம்மச்சாரிவிரதம் மாறாது இருந்தான். அவன் விருப்பப்பட்டு இல்லை. அவன் தன்னுடைய வாழ்வும் ஒருநாள் தன் பெற்றோரால் ஓளிபெறுமென்று திடமாக இருந்தான். காத்திருந்தான். ஆனால் அவனின் கடைசி தம்பியோ மிகவும் புத்திசாலி. தன்னுடைய படிப்பு முடிவதற்குள்ளேயே, தனக்கென்றுஒரு துனையைத் தேடிக் கொண்டு, அதனுடன் தன்னுடைய வாழ்வையும் இனைத்துக் கொண்டு விட்டான். அது விஷயம் அவனுடைய தாயார் அவனிடம் மிகவும் வருத்தமும், கோபமும் கொண்டு சொன்னபோது, அவனின் மனதில் ஒரு ஏக்கம் தோன்றியது. தம்பிக்கு இருந்த அந்த திடம் தனக்கு ஏன் இல்லாமல் போனது. அவனைப் பொறுத்தவரையில் தம்பி செய்தது தவறில்லை. அவனின் தேவைகளை அவன் பூர்த்தி செய்து கொண்டான். அவனால் தன்னுடைய எதிர்காலத்திற்கு என்ன வேண்டும், என்ன செய்ய வேண்டுமென்று ஒரு முடிவு செய்ய தைரியம் இருந்தது. தன்னுடைய வாழ்வை தீர்மானிக்கும் துனிவும் இருந்தது. தன்னிடம் அது இல்லை. தன் மனதில் தன்னுடைய குடும்பம் தான் இருந்தது. அதனால் அவனுக்கு தன் தாயாரின் புலம்பலில் எந்த நியாயமும் இருப்பதாகப் படவில்லை. அதனால் அவன் சொன்னான் :அம்மா, மாதவனைப் பற்றி தப்பாக சொல்லாதே. அவனின் முடிவு அவனுக்குநல்லது தான்” எனச் சொல்லி விட்டு, தொலைபேசியின் இனைப்பை முடித்துக் கொண்டான்.
அன்று இரவிலேயே அவனுடைய தம்பி மாதவன் போன் செய்தான். :அண்ணா, என்னுடைய முடிவுக்கு நீ துனையாகப் பேசியது எனக்கு மிகவும் தெம்பாக இருந்தது. நான் இந்த முடிவுக்கு வந்ததற்குக் காரணம் நம்முடைய பெற்றோர்கள்தான். அவர்கள் உன் விஷயத்தில் இருந்த சுயநலம் எனக்கு ஒரு பாடமாகியது. ஒவ்வோரு முறையும் நீ ஊருக்கு வர முடிவு செய்தபோதும், அவர்கள் தங்களுடைய தேவைகளுக்கு உன் பணம் ஒன்றைதானே குறியாக நினைத்தார்கள். ஒரு முறை கூட நீ வரவேண்டும், தங்களுடன் சேர்ந்து இருக்க வேண்டும் என் நினைக்கவில்லையே. அவருடைய சுமைகளைச் சுமக்க ஒரு சுமைதாங்கியாகத்தான் உன்னை நினைத்தார்கள். உன் வயதில் உனக்கு நடக்க வேண்டியதை பற்றி கூட அவர்கள் நினைக்க வில்லை. மாறாக, உனக்குப் பெண் கொடுக்க விரும்பி, நிறையபேர்கள் அவரிடம் வந்தபோதெல்லாம், அவனால் இப்போது இந்தியாவர முடியாது, இன்னும் சில காலம் செல்லும். அவன் வரும் சமயத்தில் நான் சொல்லுவேனென்று சொல்லியே உனக்கு வந்த ஒவ்வோரு வாய்ப்பையும் உன்னைக் கேட்காமலே தவிர்த்து விட்டார். அம்மா அதற்குக் காரணம் கேட்டபோதெல்லாம். இப்போதுதான் அவனின் பணம் நமக்கு கிடைகிறது. இப்போதே அவனின் திருமணத்தை முடித்து விட்டால், அவனுக்கென்று ஒரு குடும்பம் பெருகிவிடும். ;பின்னால், நமக்குத் தேவேயென்றபோது அவனால் பணம் அனுப்ப முடியாது. வெளிநாட்டில் இருப்பவர்களெல்லாம். முப்பதுக்குமேல் தான் திருமணம் செய்து கொள்கிறார்கள். அவனுக்கும் நாம் திருமணம் செய்யலாம், நம்முடைய வசதிகளை ஓரளவிற்கு நிறைவேற்றி கொண்டபின். அவன் நான் சொன்னால் கேட்டுக்கொள்வான். எனக்கு எல்லாம் தெரியும். அவன் அங்கு நிறையவே சம்பாதிப்பதால், அவனுக்கு பெரிய இடத்திலேயிருந்து வசதியான பெண்ணை நிறைய பணத்தோடும். சொத்தோடும் அமையும். பொறுமையாக இருப்போம்” எனச் சொல்லிவிடுவார். அதிலிருந்து என்னால் உணர முடிந்தது அவருக்கு உன் வளமான வாழ்வைவிட, தன்னுடைய பொருளாதாரம் வளர்வதுதான் முக்கியமானதென்று நீ வெகு தூரத்தில் இருந்தாய். அதனால் உனக்கு இவர்களின் சுயரூபம் தெரியவில்லை. அவர்களைப் பொறுத்தவரையில், நீ அவர்களுக்காக தொலை தூரத்தில் இருந்து காசு என்னும் கனியைக் கொடுக்கும் மரம்தான். அவர்களின் கண்களில் உன்னால் அவர்கள் அனுபவிக்கும் சுகங்கள்தான் முக்கியமானதாகத் தெரிந்ததே அன்றி, உனக்கும் ஒரு வாழ்வு வாழ வேண்டுமென்ற ஆசைகளெல்லாம் இருக்கக்கூடாது என்பதில் மிகவும் திடமாக இருந்தார்கள். அவர்களுக்கு நீ மூத்தவனாகப் பிறந்தாலும், அவர்களின் கண்களில், எண்ணத்தில் நீ ஒரு காசு காய்க்கும் மரம்தான். தன்னுடைய கனிகளை தாங்களே புசித்து ருசியை அனுபவிக்கும் மனிதன், என்றாவது ஒருநாள் அந்த மரத்திற்கும் ஒரு கனியை கொடுக்க முன் வந்தானா? இல்லையே அது போல்தான் இவர்களும். அவர்களுக்கு வேண்டியதெல்லாம் உன்னுடைய பணம் மட்டுமே. பணத்திற்கு முன் பாசம் பரிவு என்பதெல்லாம் செல்லாக்காசுதான் அண்ணா., அதனால் தான், அவர் உன்னை விட்டு, என்னை உரிக்க ஆரம்பிக்கும் முன்னேயே நான் என்னுடைய வாழ்வை முடிவு செய்து, எனக்கென ஒரு வழியில் பயணம் தொடங்கிவிட்டேன். என்னை சுயநலவாதி என்றாலும் சரிதான். உன்னைப் போலொரு தியாகவாழ்வு வாழ நான் விரும்பவில்லை. என் வாழ்வு என் முடிவு. அண்ணா, இனியாவது நீ உன்னைப் பற்றி நினைத்துப் பார்” என தெளிவாகச் சொல்லிவிட்டான்.
தம்பியின் வாதத்தில் இருந்த நிதரிசனம் புரிந்தது. தன்னுடைய தவறு என்னயென்று அவனுக்கும் புரிந்தது. தன்னுடைய எதிர்காலத்திற்கு என்ன வேண்டுமென திடமாக செயல் படாதது தன்னுடைய தப்பே. ஒரு முறைகூட தன்னுடைய திருமண விஷயமாக தான் தன் பெற்றோரிடம் பேசக் கூட இல்லையே. அவர்களாக தனக்குச் செய்வார்களென்று இருந்தது சரியல்லவே. தன்னுடைய தேவையை தான் சொல்லாமல் மற்றவர்களாகவே புரிந்துகொண்டு, முன் வருவார்களென்று தான் இருந்தது தன்னுடைய கையாலாதாத்தனந்தான். இத்தனை வருடம் அன்னிய நாட்டில் வந்து வாழ ஆரம்பித்ததின் பலன் தன்னுடைய ஊரில் தன்னுடைய தகப்பனாரின் மதிப்பும், வசதியும் கூடியது. அவர்கள் வாழ்வு செழிப்பாகியது. ஆனால் அவனின் வாழ்வு? தனிமைமட்டுமே. இல்லையில்லை, தொடர்ந்து தன்னைப் பற்றி கவலைபடாமல், விடுமுறையின்று உழைத்தது அவனின் உடல் நிலை சீர்கெட்டது. தீராத ஒரு வயிற்றுவலிதான் அவனுக்கு தன் உழைப்பால் கிடைத்த சுகம். என்ன மருத்துவம் பார்த்தும் பலனில்லை. அதற்குக் காரணம் தன்னுடைய மனச்சிதைவுதான். தன்னுடைய மனதில் ஆசைகளைப் பூட்டிவைத்துவிட்டு, மற்றவர்களின் வாழ்வு மலர தான் அசடாக இருந்ததுதான் என அவனுக்கும் புரிந்துவிட்டது.
தன்னைப் பற்றி நினைத்து, தன்னிரக்கம் கொண்டவனின், வயிற்று வலியும் தாந்தான் இனி உனக்குச் துனையெனச் சொல்லாமல் வந்து அவனைத் துன்புறுத்தியது. வலியின் வேதனை தாங்காமல், குரு எழுந்து சென்று, தன்னுடைய சுடுநீர்ப்பையை எடுத்துவந்து, தன்னுடைய வயிற்றின்மேல் வைத்துக் கொண்டான். அவனின் இதயத்திலிருந்த வழிந்த நீரின், சூடெல்லாம் அவனின் கண்களின் வழியாக வெளி வந்தது. அவனின் வெந்நீர்ப்பையேவிட கண்ணீரில் உஷ்ணம் அதிகமாகவே யிருந்தது
இந்தியாவில் ஒரு நடுத்தரகுடும்பம் வளம் பெற, அந்தக் குடும்பத்தில் ஒரு கிளையே மேல்நாட்டில், காசுகொழிக்கும் மரமாக மாறி, தன்னுடைய வளமான உழைப்பால் பணம் என்னும் பழத்தை அள்ளியள்ளிக் கொடுத்துக் கொண்டிருந்தது. அந்தக் காசு காய்க்கும் மரமோ, ஒரு அன்புக்கும், அரவணைப்பிற்கும் ஏங்கியது. அதனின் ஏக்கமே கண்ணீராக மாறி, அந்த மரத்திற்கே உரமாகிதோ எனத் தோன்றியது. ஒன்று செழிக்க ஒன்று அழியவேண்டுமென்ற இயற்கையின் தீர்ப்பைத்தான் யார் மாற்ற முடியும். குருவின் இயலாமையா அல்லது அவனின் தகப்பனாரின் சுயநலமா? யார் நியாயம் சொல்ல முடியும்?
.
No comments:
Post a Comment