உதவிக்கு ஆள் வேண்டாம்.
(ஜெயரமணி)
தன் புது மனைவியுடன்,
வீட்டில் டி..வி. பார்த்துக் கொண்டிருந்த
பிரபாகரன், அழைப்பு மணியில் சப்தம்
கேட்டு கதவைத் திறந்தான். வாசலில்,
அவனுடைய மாமியார், இரு பெண்களுடன் நின்று கொண்டிருந்தார். வாசலில் அம்மாவைப் பார்த்த பிரியாவுக்குச்
சந்தோஷம் தாங்கவில்லை. முழுசாக ஒரு நாள்
கூட ஆகவில்லை. அதற்குள் அவளுக்கு
அம்மாவைப் பிரிந்து நீண்ட நாட்கள் ஆனமாதிரி, ஒரு துள்ளலுடன் ஓடி வந்து அம்மாவைக்
கட்டிக் கொண்டு, “ஏன்னம்மா, இத்தனை நேரம் பண்ணி விட்டீர்கள்? உங்களை நான் காலையிலுருந்தே எதிர்பார்த்துக்
கொண்டிருந்தேன்: என மிகவும் ஏக்கத்துடன் சொல்லிக் கொண்டே, அம்மாவுடன் உள்ளே
வந்தாள். தன் புது மனைவியின் தாய்ப் பாசத்தைக் கண்டவன், மனதிற்குள் சிரித்துக்
கொண்டே, “என்ன பிரியா, நேற்றுத்தானே நாம்
அந்த வீட்டிலிருந்து, இங்கு வந்தோம்.
அதற்குள் உனக்கு அம்மாவின் ஏக்கம் வந்து விட்டதா?” எனவும் கேலியாக்
கேட்டான்.
அதற்கு அவனுடைய
மாமியார் “தம்பி, என் பெண்ணால் ஒரு நாள்கூட என்னை விட்டு இருக்க முடியாது.. எங்களுக்கும் அவளைவிட்டு ஒரு பொழுது கூட இருக்க
முடியாது. நான் என் ஆசையை அடக்க முடியாமல்
வந்து விட்டேன். ஆனால், அவளுடைய அப்பாவோ,
பெண்ணைப் பிரிந்த ஏக்கத்தில், சாப்பிடக் கூடப் பிடிக்காமல், இருக்கிறார்.”
என்றாள். , தன்னுடன் வந்திருந்த இரு
பெண்களையும் பார்த்து, “ஏண்டி, இங்கு வேடிக்கைப் பார்க்கவா உங்களை அழைத்து
வந்திருக்கிறேன். போய் உள்ளே எல்லா
வேலைகளையும் பார்த்துச் செய்யுங்கள்.
இனிமேல், நீங்கள் இருவரும் இங்குதான் வேலை செய்ய வேண்டும். பாத்துச்
செய்யுங்கள்” எனவும் உத்திரவு போட்டு, அவர்களை உள்ளே செல்லவும் பணித்தாள்.
முதலில் தன்
மாமியார் ஏதோ பெண்ணைப் பார்க்க வந்திருப்பார் என நினைத்த, பிரபாகரன், முழித்துக்
கொண்டான். மாமியாரின் வருகைக்கு காரணம்
என்ன என்பதையும் புரிந்து கொண்டான்.
தன்னுடைய தனிச் சுதந்திரத்தில், மாமியாரின் தலையீடு அதிகம் இருக்கும்
என்பதையும், தன் மனைவி, ஒரு பெரிய பணக்காரரின் ஒரே வாரிசு என்பதாலும், தனக்கென
யாரும் உறவு இல்லைஎன்பதாலும், தன்னுடைய வீட்டில் அவர்களுடைய ஆதிக்கம் அதிகம்
இருக்கும் என்பதையும் புரிந்து கொண்டான்.
என்னதான், செல்லமாக வளர்ந்தவள் என்றாலும், இனிமேல் அவள் தன் மனைவி. இந்த
வீடு அவர்கள் இருவருக்கும்தான்
உரிமையானது. மாமியார், மாமனார், வந்து
போகலாம், ஆனால், தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் அவர்களின் தலையீடு இருக்கக்
கூடாது. முதலியேயே தடுத்து விட
வேண்டும். புது மனைவி என கொஞ்சம் அசந்து
விட்டால், பிறகு, தனக்கு தன்னுடைய வீட்டிலேயே சுதந்திரம் இருக்காது.” எனவும்
தீர்மானித்து, தன் மாமனார் வீட்டார்
தலையீட்டுக்கு இப்பவே ஒரு முற்றுப் புள்ளியும் வைத்து விடவேண்டும் என்பதிலும்
உறுதியாக இருந்தான்.
அதனால்,
மெதுவாக, தன் வீட்டிற்குள் செல்லும் இரு பெண்களையும் பார்த்து “அம்மா, கொஞ்சம்
நில்லுங்கள். நீங்கள் எல்லாம் யார்? நீங்கள்
பாட்டுக்கு, வந்தவுடன், வீட்டிற்குள் செல்லுகிறீர்களே? இங்கு உங்களை யார் கூப்பிட்டது?” எனவும் கேட்டான். அவனுடைய கேள்விக்கு, பிரியா “என்னயிது, எங்கள்
அம்மாதானே கூட்டிக் கொண்டு வந்தார்கள். தெரியாதது போல் கேட்கிறீர்களே” எனவும் தன்
கோபத்தையும் சிறிது காட்டினாள். அப்போதும்
மாமியார் அவனிடம் “என்ன தம்பி, உங்களுக்குத் தெரியாதா? நாங்கள் எங்கள் பிரியாவை மிகவும் செல்லமாக
வளர்த்து இருக்கிறோம். அவளுக்கு வீட்டு
வேலைகளைச் செய்து பழக்கமும் இல்லை, தெரியவும் தெரியாது. இங்கும் எங்களுடைய பெண்
சிரமப்படக்கூடாதென்பதற்காகத்தான், இவர்களை கூட்டிக் கொண்டு வந்தேன். இனிமேல்,
இவர்கள் இருவரும் உங்களின் வீட்டில் பிரியாவுக்கு உதவியாக எல்லா வேலைகளையும்
பார்த்துக் கொள்வார்கள். இனிமேல்,
வீட்டில் சமைக்க, மேல் வேலை செய்ய என பிரியா கஷ்டப்படவேண்டாம். இதனால், உங்களுக்கு ஒரு சிரமும் இல்லை.
இவர்களின் சம்பளத்தை நாங்களே கொடுத்து விடுவோம்.” எனவும் கர்வமாகச் சொன்னாள்.
அதைக் கேட்ட
பிரபாகரன் சிரித்துக் கொண்டே, “என்ன அத்தை, பிரியா நேற்று வரைதான் உங்களின்
செல்லப் பெண். இன்று அவள் என் மனைவி, எங்களின் குடும்பத் தலைவி என அழுத்தமாகச் சொன்னான்.
தன் கணவனின் கருத்து என்ன என்பதைக் கூட தெரிந்து கொள்ள பிரியா விரும்பவில்லை. மாறாக அவனிடம்
“உங்களுக்கு ஏன் இந்தக் கவலை. வீட்டில்
வேலைக்கு எனக்கு உதவிக்கு ஆட்கள் வேண்டுமென்றுதானே, அம்மா இத்தனைச் சிரமப்பட்டு
அவர்களைக் கூட்டிக் கொண்டு வந்திருக்கிறார். அம்மாவின் மனதை வேதனைக்கு
உள்ளாக்காதீர்கள்” எனவும் சொல்லி விட்டு, அவர்களை வீட்டிற்குள் செல்லவும்
சொன்னாள்.
தன் பெண்
புதிதாக வந்த வேலைக்காரர்களுடன் உள்ளே சென்றவுடன், மாமியார் அவனிடம் “தம்பி,
எங்களின் பெண்ணை உங்களுக்குத் திருமணம் செய்து கொடுத்ததிற்கு முக்கிய காரணமே, நீங்கள்
தனி ஆள். உங்களின் சொந்த மூயற்சியால்,
நன்றாகப் படித்து, இன்று ஒரு பெரிய மில்டி நேஷனல் கம்பெனியில் நிர்வாகியாக
இருக்கிறீர்கள் என்பதுதான். என்னதான்
எங்கள் பிரியா உங்களை விரும்பினாலும், நீங்கள் தனியாளாக இருப்பதாலும் தான், அவளுடைய அப்பா இந்தக் கலியாணத்திற்கு
சம்மதம் தந்தார். எங்களின் ஒரே கொள்கை
உங்களையும் எங்கள் வீட்டிலேயே வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான். ஆனால், அதற்கு நீங்கள்தான் சம்மக்திக்க
வில்லை. சரி, முதலில், புதிதாக திருமணம்
ஆனவர்கள், கொஞ்ச நாள், தனியாக சுதந்திரமாக இருக்க வேண்டும் என்றுதான், நாங்கள்
உங்களின் விருப்பபடியே உங்களைத் தனியாக
இருக்கவும் அனுமதித்தோம்.
எங்களுடைய எல்லா சொத்துக்களுக்கும் பிரியாதான் உரிமையானவள். அதனால், நீங்களும் அவளிஷ்டப்படியே இருங்கள். இதுதான்,
உங்களூக்கும் நல்லது, உங்களூக்கு என்ன
வேண்டும். வீட்டுக் கவலை இல்லாமல்,
நிம்மதியாக இருங்களேன்” எனவும் சொன்னாள்.
அவளின் பேச்சிலிருந்து, இந்த வீட்டிலும், அவர்களுடைய ஆட்சிப்படிதான்
எல்லாம் நடக்கும் என்பதையும், ஜாடையாகச் சொல்லியதை புரிந்து கொண்டான். முதல் முதலாக வீட்டிற்கு வந்திருக்கும் மாமியாரிடம் அதிகம்
பேச வேண்டாமென மௌனமாக இருந்து விட்டான்.
பிற்பகல் உணவு
முடிந்த பின், சிறிது நேரம் பிரியாவுடன்,
அம்மாத் தனியாகப் பேசிக் கொண்டிருந்தாள்.
அவர்களின் பேச்சில் தலையிடாவிட்டாலும், பிரபாகரனால் ஊகிக்க முடிந்தது. தாயார் பெண்ணுக்கு இப்பவே, புருஷனை எப்படித்
தன் கைக்குள் வைத்துக் கொள்வது என்பதுதான் முக்கிய புத்திமதியாக இருக்கும் என.
பிரபாகரன்
கூடத்தில் ஃபொனில் பேசிக் கொண்டிருந்தான்.
அவன் பெரியதாகவே பேசியதால், அவன் பேசியது நன்றாகவே பிரியாவுக்கும், அவளுடைய
அம்மா தர்மாம்பாளுக்கும் கேட்டது. “மேடம்,
நான் சொன்னதை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்.
எனக்கு இரவுஎட்டு மணியிலிருந்து, காலை ஆறு மணி வரை வேலைக்குத்தான் ஒரு பெண்
வேண்டும். பெண் பார்க்க நன்றாகவும், நல்ல
வயதுடனும் இருக்க வேண்டும். திருமணம் ஆகாதவளாக
இருக்க வேண்டும். சம்பளம் பற்றி கவலை
வேண்டாம். அந்த பெண்ணை எனக்குப் பிடித்து
இருந்தால் போதும். நீங்கள் கூடிய
சீக்கிரம் ஒரு பெண்ணை பார்த்து, எனக்குத் தெரியப்படுத்துங்கள். நானே அவளை நேரில் பார்த்து முடிவு
செய்கிறேன். என் ஃபொனெ நம்பரைக்
குறித்துக் கொள்ளுங்கள். நீங்கள் என்னிடம்
மட்டும் தான் பேச வேண்டும். மறந்து விடாதீர்கள் எனச் சொல்லிவிட்டு, மாமியாரையும்,
பிரியாவையும் பார்த்து சிரித்தபடியே தன்னுடைய அறைக்குள் சென்றான்.
பிரபாகரனின்
பேச்சைக் கேட்டவர்களுக்கு, தலை சுற்றியது.வீட்டு வேலைக்குத்தான் இருவர்
ஏற்பாடாகிவிட்டதே. பிரபாகனுக்கு எனத்
தனியாக, அதுவும் இரவு எட்டு மணி முதல் காலை ஆறு மணி வரைக்கும் எதற்காக ஒரு பெண்
என்பதும் அவர்களுக்கு சிறிது கவலை அளித்தது.
தர்மாம்பாள் பிரியாவிடம்
“என்னடீயிது புதுக் கதையாக இருக்கே. உன்
புருஷனைப் பற்றி நன்றாகத் தெரிந்துதானே, அவனைக் கலியாணம் செய்து கொண்டாய்? புது
பெண்டாட்டி நீ இருக்கும்போது, எதற்கடி இராத்திரி வேலைக்காக தனியாக, அதுவும் ஒர்
அழகான, திருமணம் ஆகாத வயதுப் பெண். நீ இப்பவே உன் புருஷனைக் கண்டித்து வை. உள்ளேப் போய், அவனுக்குத் தனியாக ஒரு
வேலைக்காரி தேவை யில்லை. வைத்துக் கொள்ளக் கூடாது எனக் கண்டிப்பாகச் சொல்” எனவும்
பெண்ணைத் தூண்டி விட்டாள்.
கணவனின்
அறைக்குள் சென்றவளைப் பார்த்தவன், “என்ன பிரியா, அதிர்ச்சியாக இருக்கிறதா? நமக்குத் திருமணம் ஆகி, நாமிருவரும் தனியாகச்
சுதந்திரமாக வாழ்க்கையை ஆரம்பித்து இருக்கிறோம்.
இந்த விட்டில் எதிலும் மற்றவர்களின் தலையீடு இருக்கக்கூடாது. நம் வீட்டிற்கு வேலைக்கு உதவி ஆள் வேண்டுமானால்,
நாமே பார்த்துக் கொள்ளனும். எனக்குத் தனியாக ஒருவள் வேண்டுமா என, நீதான் முடிவு
செய்ய வேண்டும். நீ படித்தவள். யோசித்து, நீயாகவே முடிவு செய். நான் திரும்பி
வருவதற்குள்.” எனச் சொல்லி விட்டு சென்றான்.
யோசித்தவளுக்கு,
புரிந்தது, இனிமேல் இது எங்களுடைய வாழ்க்கை, எங்களுடைய வீடு. அம்மாவானாலும், இனிமேல் அவள் வேற்று மனுஷிதான்.
என் வீட்டு வேலையை நான் பார்த்துக் கொள்ளுவேன். பழக்கம் இல்லையென்றால் பழக்கப்
படுத்திக் கொள்ளுவேன். படித்த என்னால் இந்த புது வாழ்க்கைக்கு எற்ப என்னை மாற்றிக்
கொள்ள முடியாதா? தன்னுடைய அம்மாவைப்
பார்த்து “அம்மா, நீ உன்னுடன் அந்தப் பெண்களை அழைத்துக் கொண்டு போ. என் வீட்டு
வேலைகளை நானே கவனித்துக் கொள்வேன்.. இந்த
புதுச் சூழ்நிலைக்கு என்னைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.” எனச் சொல்லிக்
கொண்டே, அம்மாவிற்குக் குங்குமம் கொடுத்து அனுப்பிவிட்டு கணவனுக்காகக்
காத்திருந்தாள்.
வெளியே சென்ற பிரபாகரன் வீடு திரும்பும்போது, வீட்டில் பிரியாவைத்
தவிர வேறு யாரும் இல்லாததைக் கண்டவன், மனதிற்குள் திருப்தி அடைந்தான். நல்ல வேளை. பிரியாவுக்கும் சுயமாகச்
சிந்திக்கத் தெரிகிறது. வந்தவன் தன்
கையில் கொண்டு வந்திருந்த மல்லிகைச் சரத்தை ஆசையுடன் மனைவியின் தலையில்
வைத்தான். பிறகு அவளிடம் மெதுவாக “பிரியா,
நான் அம்மாவிடம் கொஞ்சம் கண்டிப்பாக இருந்தது உனக்குப் பிடிக்கவில்லையா? என்ன செய்வது,
எனக்கு, என் புது மனைவியுடன் நாள் பூராவும் உல்லாசமாக, உற்சாகமாக இருக்க
வேண்டும். ஆனால், வீட்டில் சதா, இரண்டு பெண்கள் இருந்தால், நாம் எப்படி சந்தோஷமாக
இருக்க முடியும், எனக்கு என் தேவைகளை என்
மனைவி செய்து கொடுத்தால்தான், திருப்தி.
அதை விட்டு விட்டு, யாரோ ஒரு பெண், நாம் கொடுக்கும் காசுக்கா, எனக்குச்
சமைத்துப் போடுவது, உணவு கொடுப்பது என இருந்தால், அது சரியாக இருக்குமா? என்ன, உனக்குப் பழக்கமில்லை. ஆனால், எனக்குத்
தெரியுமே எல்லா வேலைகளையும் சுயமாகச் செய்து கொள்ள, நான் உனக்குச் சொல்லித் தருகிறேன். ஒருவாரம் பார். பிறகு நீயே சொல்லுவால், நமக்கு
தனியாக உதவிக்கு இப்ப ஆட்கள் வேண்டாம் என” எனச் சிரித்துக் கொண்டே சொன்னான்.
பிரியாவும் அவனிடம்
“மேல் வேலைக்குத்தான் என் அம்மா இருவரை அழைத்து வந்தார்கள். ஆனால், நீங்கள்
உங்களுக்கென தனியாக, இரவு முழுவதற்கும் ஒரு ஆள் வேணுமெனக் கேட்பது எப்படி நியாயம? அப்படி ஒருவள் வருவதற்கு நான் இடம் கொடுப்பேனா? எனவும் சிறிது கோபத்துடனும்,
வருத்த்துடனும் கேட்டாள். அதற்கு பதிலாக,
பிரபாகரன் உள்ளே இருந்து, தன்னுடைய செல் ஃபோனை எடுத்து வந்து, “பிரியா, நான் ஃபொனெ
செய்தவருக்கு, நீயே பண்ணி, எங்கள் வீட்டிற்கு எந்த விதமான வேலைக்கும் உதவிக்கு
யாரும் வரத் தேவை இல்லை எனச் சொல்லி விடு” எனச் சொல்லி, செல் ஃபொனை அவளிடம்
கொடுத்தான். அவளும், அவனுடைய ஃபொனில்
கடைசியாகச் செய்த தொடர்பு எண்ணைப் பார்த்தாள் திகைத்துப் போனாள். அது அவளுடைய செல் ஃபொனெ. அதைப் பார்த்தவன் “அட
அசட்டுப் பெண்ணே, உன்னுடைய செல் ஃபொனெ அடிப்பதைக் கூட கவனிக்காமல் உன் அம்மாவிடம்
அப்படி என்ன இரகசியம். உன்னுடைய நம்பருக்குத்தான் ஃபொனெ செய்து, இரவு எனக்குத் துனையாக,
கவனித்துக் கொள்ள ஒருவள் வேண்டும் எனச் சொன்னேன்.” எனச் சிரித்துக் கொண்டே
சொன்னான். கணவனின் குறும்புத்தனைத்தை
தெரிந்து கொண்டவள், “இப்படியெல்லாம் கூட என்னை ஏமாற்றுய்வீர்களா. இருக்கட்டும்?”
எனச் சொன்னவளிடம், “பிரியா என்னை மன்னித்துக் கொள். நீ கொடுக்கும் எந்த தணடனையையும் நான் ஏற்றுக்
கொள்கிறேன்: என மிகவும் பயந்தவன் போல் முகத்தை வைத்துக் கொண்டு சொல்ல, அவளும்
சிரித்துக் கொண்டே, “உங்களுக்குத் தக்க தண்டனை கிடைக்காமல் போகாது இரவு வரும்போது
பார்த்துக் கொள்ளுங்கள்” எனவும் சிரித்துக் கொண்டே சொல்லிக் கொண்டு, கணவனுக்கு
இரவு உணவு தயாரிக்க உள்ளே சென்றாள். சிரித்துக் கொண்டே, அவளுக்கு உதவியாக அவனும்
சென்றான்.
புது வாழ்க்கை
அவர்களின் தனிமை, இதில் இடையில் வர,
யாருக்கும் பெற்றவர்களாகவே இருந்தாலும் உரிமை இல்லை.
No comments:
Post a Comment